Saturday, August 8, 2009

Kamba Ramayanam (Full Version), Bala Kandam Part IV

பால காண்டம் (தொடர்ச்சி)

http://ondemand.erosentertainment.com/img/product/bigger/ondemnd_1.jpg

16. வரைக் காட்சிப் படலம்

சந்திரசயில மலையின் மாட்சி

சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக் குன்றைப்
பற்றிய வளைந்தவென்ன, பரந்து வந்து இறுத்த சேனை;
கொற்றவர், தேவிமார்கள், மைந்தர்கள், கொம்பனார், வந்து
உற்றவர், காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே! 1

பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட,
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும்
கொம்புகள், பனைக் கை நீட்டி, குழையொடும் ஒடித்து, கோட்டுத்
தும்பிகள், உயிரே அன்ன துணை மடப் பிடிக்கு நல்கும். 2

பண் மலர் பவளச் செவ் வாய்ப் பனி மலர்க் குவளை அன்ன
கண் மலர்க் கொடிச்சிமார்க்குக் கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி, புதிய தேன் உதவும் நாகத்
தண் மலர் என்று, வானத் தாரகை தாவும் அன்றே! 3

மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டிக் குத்திட, குமுறிப் பாயும்
தேன் உகு மடையை மாற்றி, செந் தினைக் குறவர், முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி, ஐவனம் வளர்ப்பர் மாதோ! 4

குப்புறற்கு அருமையான குல வரைச் சாரல் வைகி,
ஒப்புறத் துளங்குகின்ற உடுபதி ஆடியின்கண்,
இப் புறத்தேயும் காண்பார், குறத்தியர், இயைந்த கோலம்;
அப் புறத்தேயும் காண்பார், அரம்பையர், அழகு மாதோ! 5

உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும், வாயின்
அதி விட நீரும், நெய்யும், உண்கிலாது, ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு,
மதியினை வாங்கி, ஒப்புக் காண்குவர், குறவர் மன்னோ! 6

பேணுதற்கு அரிய கோலக் குருளை, அம் பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழக் கன்றொடு களிக்கும் முன்றில்,
கோணுதற்கு உரிய திங்கட் குழவியும், குறவர் தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு, தவழும் மாதோ! 7

அஞ்சனக் கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற
வெஞ் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு, - விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும், நீலக் குல மணித் தலத்தும், - மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த பசுஞ் சுவடு உடைத்து மன்னோ. 8

செங் கயல் அனைய நாட்டம் செவி உறா, முறுவல் தோன்றா,
பொங்கு இருங் கூந்தல் சோரா, புருவங்கள் நெரியா, பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி, நரம்பு அளைந்து, அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டு, கின்னரம் மயங்கும் மாதோ! 9

கள் அவிழ் கோதை மாதர், காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாட் கண்ணினார்தம் குங்குமக் குழம்பு தங்கும்
தெள்ளிய பளிக்குப் பாறைத் தெளி சுனை, மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன, வரம்பு இல பொலியும் மன்னோ! 10

ஆடவர் ஆவி சோர, அஞ்சன வாரி சோர,
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர் தம் அரம்பை மாதர்,
தோடு அவிழ் கோதை நின்றும் துறந்த மந்தார மாலை,
வாடல, நறவு அறாத, வயின் வயின் வயங்கும் மாதோ. 11

மாந் தளிர் அனைய மேனிக் குறத்தியர் மாலை சூட்டி,
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்புக் காண்பார்;
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணிக் கடகம் வாங்கி,
காந்தள் அம் போதில் பெய்து, கைகளோடு ஒப்புக் காண்பார். 12

சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா,
நரம்பினோடு இனிது பாடி, நாடக மயிலோடு ஆடி,
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணிக் கோவை ஆரம்,
மரம் பயில கடுவன் பூண, மந்தி கண்டு உவக்கும் மாதோ. 13

சாந்து உயர் தடங்கள் தோறும் தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும்;
காந்து இன மணியின் சோதிக் கதிரொடும் கலந்து வீசச்
சேந்து, வானகம், எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே. 14

நிலமகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி,
மலைமகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான,
அலகு இல் பொன் அலம்பி ஓடி, சார்ந்து வீழ் அருவி மாலை,
உலகு அளந்தவன் தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த. 15

மாந்தர் கண்ட மலை நிகழ்ச்சிகள்

கோடு உலாம் நாகப் போதோடு இலவங்க மலரும் கூட்டிச்
சூடுவார், களி வண்டு ஓச்சித் தூ நறுந் தேறல் உண்பார்,
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார். 16

பெருங் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணைக் கொங்கை அன்ன, பொரு இல், கோங்கு அரும்பின் மாடே,
மருங்கு எனக் குழையும் கொம்பின் மடப் பெடை வண்டும், தங்கள்
கருங் குழல் களிக்கும் வண்டும், கடிமணம் புணர்தல் கண்டார். 17

'படிகத்தின் தலம்' என்று எண்ணி, படர் சுனை முடுகிப் புக்க
சுடிகைப் பூங் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்தம்
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப, நோக்கி,
கடகக் கை எறிந்து, தம்மில் கருங் கழல் வீரர் நக்கார். 18

பூ அணை பலவும் கண்டார்; பொன்னரிமாலை கண்டார்,
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலைத் தம்பல் கண்டார்;
ஆவியின் இனிய கொண்கர்ப் பிரிந்து, அறிவு அழிந்த விஞ்சைப்
பாவையர் வைக, தீய்ந்த பல்லவ சயனம் கண்டார். 19

பானல் அம் கண்கள் ஆட, பவள வாய் முறுவல் ஆட,
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட,
தேன் முரன்று அளகத்து ஆட, திரு மணிக் குழைகள் ஆட,
வானவர் மகளிர் ஆடும், வாசம் நாறு ஊசல் கண்டார். 20

சுந்தர வதன மாதர் துவர் இதழ்ப் பவள வாயும்,
அந்தம் இல் கரும்பும், தேனும், மிஞிறும் உண்டு - அல்குல் விற்கும்
பைந் தொடி மகளிர், 'கைத்து ஓர் பசை இல்லை' என்ன விட்ட
மைந்தரின் - நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார். 21

அல் பகல் ஆக்கும் சோதிப் பளிக்கு அறை அமளிப் பாங்கர்,
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த, கோல,
வில் பகை நுதலினார், தம் கலவியில் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்பக் கண்டார். 22

கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி,
பை அரவு இது என்று அஞ்சி, படைக் கண்கள் புதைக்கின்றாரும்;
நெய் தவழ் வயிரப் பாறை நிழலிடைத் தோன்றும் போதை,
'கொய்து இவை தருதிர்' என்று, கொழுநரைத் தொழுகின்றாரும்; 23

பின்னங்கள் உகிரின் செய்து, பிண்டி அம் தளிர்க் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி, தே மலர் கொய்கின்றாரும்;
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன, அகன் சுனை குடைகின்றாரும். 24

மலைக் காட்சிகள்

ஈனும் மாழை இளந் தளிர் ஏய் ஒளி
ஈனும், மாழை இளந் தளிரே - இடை,
மானும், வேழமும், நாகமும், மாதர் தோள்
மானும் வேழமும், நாகமும் - மாடு எலாம். 25

திமிர மா உடல் குங்குமச் சேதகம்
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால்;
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர, மா தரை ஒத்தது, அவ் வானமே. 26

பேர் அவாவொடு மாசுணம் பேர, வே
பேர, ஆவொடு மா சுணம் பேரவே!
ஆர, ஆரத்தினோடும் மருவியே,
ஆரவாரத்தின் ஓடும் அருவியே! 27

புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம்,
புகலும் வாள் அரிக் கண்ணியர் பூண் முலை,
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே!
அகிலும், ஆரமும் மாரவம் கோங்குமே. 28

துன் அரம்பை நிரம்பிய, தொல் வரை,
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்;
கின்னரம் பயில் கீதங்கள் என்ன, ஆங்கு,
இன் நரம்பு அயில்கின்றனர், ஏழைமார். 29

ஊறு, மா கடம் மா, உற ஊங்கு எலாம்,
ஊறுமா கட மா மதம் ஓடுமே;
ஆறு சேர் வனம் ஆ, வரை, ஆடுமே;
ஆறு சேர்வன, மா, வரையாடுமே. 30

கல் இயங்கு கருங் குற மங்கையர்,
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா,
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம்,
வல் இயங்கள் நெருங்கி மயங்குமே. 31

கோள் இபம் கயம் மூழ்க, குளிர் கயக்
கோளி, பங்கயம், ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய்,
ஆளி பொங்கும், அரம்பையர் ஓதியே. 32

ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி-
வாக மால் ஐயன் நின்றெனல் ஆகுமால் -
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக, மாலை கிடந்தது, கீழ் எலாம். 33

மலைமேல் மாதர் மைந்தர் விளையாடுதல்

பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என,
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி, அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி, நீங்கலர், தாம் இனிது ஆடுவார். 34

இறக்கம் என்பதை எண்ணிலர், எண்ணுங்கால்,
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால்,
துறக்கம் எய்திய தூயவரே என,
மறக்ககிற்றிலர், அன்னதன் மாண்பு எலாம். 35

அந்திப் பொழுதில் அம் மலையின் அழகு

மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெஞ் சாயையுடைக் கதிர், அங்கு, அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய, ஏறு
செஞ் சோரி எனப் பொலிவுற்றது, செக்கர் வானம். 36

திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய,
தணியாத நறுந் தளிர் தந்தன போன்று தாழ,
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின், அங்கம் எங்கும்,
மணியால் இயன்ற மலை ஒத்தது - அம் மை இல் குன்றம். 37

கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும்,
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும்,
வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோந்தனை ஒத்தது - அவ் ஆசு இல் குன்றம். 38

மகளிரும் மைந்தரும் மலையிலிருந்து இறங்குதல்

ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்,
தேனும், மிஞிறும், சிறு தும்பியும், பம்பி ஆர்ப்ப,
ஆனை இனமும் பிடியும், இகல் ஆளி ஏறும்,
மானும் கலையும், என, மால் வரை வந்து இழிந்தார். 39

இருள் பரவ, எங்கும் தீபம் ஏற்றுதல்

கால் வானகத் தேருடை வெய்யவன், காய் கடுங் கண்
கோல் மாய் கதிர்ப் புல் உளைக் கொல் சினக் கோள் அரிம்மா,
மேல்பால் மலையில் புக, வீங்கு இருள், வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என, வந்து பரந்தது அன்றே. 40

மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன் தன் அனீக வெள்ளம்,
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்தென, தீபம் எடுத்தது அன்றே. 41

மதியம் தோன்ற, முக மலர்ச்சி பெறும் மகளிர்

தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி,
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது, மீன்கள் சூழ -
வண்ணக் கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று, ஒளிர் வால் வளை, ஊர்வது ஒத்தே. 42

மீன் நாறு வேலை ஒரு வெண் மதி ஈனும் வேலை,
நோனாது அதனை, நுவலற்கு அருங் கோடி வெள்ளம்
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது, அனீக வேலை. 43

கூத்தரின் ஆடலும், மகளிர் கோலம் கொள்ளுதலும்

மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை,
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் முடை வேய் இசை, - கண்ணுளர் ஆடல்தோறும் -
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே. 44

மணியின் அணி நீக்கி, வயங்கு ஒளி முத்தம் வாங்கி,
அணியும் முலையார், அகில் ஆவி புலர்த்தும் நல்லார்,
தணியும் மது மல்லிகைத் தாமம் வெறுத்து, வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை சேர்த்துவாரும். 45

பல வகை ஒலிகள்

புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை,
கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை. 46

இரவுப் பொழுதை கழித்த வகை

உண்ணா அமுது அன்ன கலைப் பொருள் உள்ளது உண்டும்,
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும்,
பண் ஆன பாடல் செவி மாந்திப் பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும், கங்குல் கழிந்தது அன்றே. 47

17. பூக் கொய் படலம்

காலையில் தயரதன் சோணை ஆற்றை அடைதல்

மீனுடை எயிற்றுக் கங்குல்-கனகனை வெகுண்டு, வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி,
தானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள் நின்று,
மானுட மடங்கல் என்ன, தோன்றினன், - வயங்கு வெய்யோன். 1

முறை எலாம் முடித்த, மன்னர் மன்னனும், மூரித் தேர்மேல்
இறை எலாம் வணங்கப் போனான்; எழுந்து, உடன், சேனை வெள்ளம்,
குறை எலாம் சோலை ஆகி, குழி எலாம் கழுநீர் ஆகி,
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே. 2

உச்சி வேளையில் சோலையைச் சார்தல்

அடைந்து, அவண் இறுத்த பின்னர், அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான்;
மடந்தையர் குழாங்களோடு, மன்னரும், மைந்தர் தாமும்,
குடைந்து வண்டு உறையும் மென் பூக் கொய்து நீராட, மை தீர்
தடங்களும், மடுவும் சூழ்ந்த, தண் நறுஞ் சோலை சார்ந்தார். 3

மாதரைக் கண்ட மயில் முதலியவற்றின் செய்கை

திண் சிலை புருவம் ஆக, சேயரிக் கருங் கண் அம்பால்,
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற, மஞ்ஞை;
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப, நாணினால் பறந்த, கிள்ளை;
ஒண் சிலம்பு அரற்ற, மாதர் ஒதுங்குதோறு, ஒதுங்கும் அன்னம். 4

மாதர் தோழியரோடு ஆடக் கண்ட ஆடவர் மயங்கி நிற்றல்

செம் பொன் செய் சுருளும் தெய்வக் குழைகளும் சேர்ந்து மின்ன,
பம்பு தேன் அலம்ப ஒல்கி, பண்ணையின் ஆடல் நோக்கி,
கொம்பொடும், கொடி அனாரைக் குறித்து அறிந்து உணர்தல் தேற்றார்,
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும், மயங்கி நின்றார். 5

குயில்களின் நாணி ஒதுங்குதல்

பாசிழைப் பரவை அல்குல், பண் தரு கிளவி, தண் தேன்
மூசிய கூந்தல், மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு,
கூசின அல்ல; பேச நாணின, குயில்கள் எல்லாம்-
வாசகம் வல்லார் முன் நின்று, யாவர் வாய் திறக்க வல்லார்? 6

மாதர் பூங் கொம்பைத் தீண்டலும், மலர் சொரிந்து கொம்பு தாழ்தலும்

நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி,
செஞ்செவே கமலக் கையால் தீண்டலும், நீண்ட கொம்பும்,
தம் சிலம்பு அடியில் மென் பூச் சொரிந்து உடன் தாழ்ந்த என்றால்,
வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார்? 7

அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர்க் கைகள் தீண்ட,
வம்பு இயல் அலங்கல் பங்கி, வாள் அரி மருளும் கோளார் -
தம் புய வரைகள் வந்து தாழ்வன; தளிர்த்த மென் பூங்
கொம்புகள் தாழும் என்றல், கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ! 8

மகளிரின் மேல் வண்டுகள் மொய்த்தல்

நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு
மதி நுதல் வல்லி பூப்ப, நோக்கிய மழலைத் தும்பி
அதிசயம் எய்தி, புக்கு வீழ்ந்தன; அலைக்கப் போகா -
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்? 9

மலர் கொய்துநின்ற மகளிரின் செயல்கள்

உலம் தரு வயிரத் திண் தோள் ஒழுகி, வார் ஒளி கொள் மேனி
மலர்ந்த பூந் தொடையல் மாலை மைந்தர் பால், மயிலின் அன்னார்
கலந்தவர் போல, ஒல்கி ஒசிந்தன, சில; கை வாராப்
புலந்தவர் போல நின்று, வளைகில, பூத்த கொம்பர். 10

பூ எலாம் கொய்து கொள்ள, பொலிவு இல துவள நோக்கி,
'யாவை ஆம் கணவர் கண்ணுக்கு? அழகு இல இவை' என்று எண்ணி,
கோவையும், வடமும், நாணும், குழைகளும், குழையப் பூட்டி,
பாவையர், பனி மென் கொம்பை நோக்கினர், பரிந்து நிற்பார். 11

மகளிரின் வெறுங் கூந்தலை வண்டுகள் மொய்த்த காட்சி

துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம்,
நறுங் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார்
வெறுங் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல வேண்டு போதும்;-
உறும் போகம் எல்லாம், நலன் உள் வழி, உண்பர் அன்றே! 12

மங்கையர் கண் பனி சோர நின்ற காட்சி

மெய்ப் போதின் நங்கைக்கு அணி அன்னவள், வெண் பளிங்கில்
பொய்ப் போது தாங்கிப் பொலிகின்ற தன் மேனி நோக்கி
'இப் பாவை எம் கோற்கு உயிர் அன்னவள்' என்ன உன்னி,
கைப் போதினோடு நெடுங் கண் பனி சோர நின்றாள். 13

கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு, ஒர் மன்னன்,
தோள் உண்ட மாலை ஒரு தோகையைச் சூட்ட நோக்கி,
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண், ஆவி,
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என, வார நின்றாள். 14

கணவன் மறைந்து நிற்க மறுகும் மனைவி

மயில் போல் வருவாள் மனம் காணிய, காதல் மன்னன்,
செயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச் சூழல் சேர,
பயில்வாள், இறை பண்டு பிரிந்து அறியாள், பதைத்தாள்;
உயிர் நாடி ஒல்கும் உடல்போல் அலமந்து உழந்தாள். 15

புலந்து நின்ற ஒருத்தி குயிலை மலர் பறித்துத் தர வேண்டல்

மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற,
நெய் தாவும் வேலானொடு, நெஞ்சு புலந்து நின்றாள்,
எய்தாது நின்றம் மலர் நோக்கி, 'எனக்கு இது ஈண்டக்
கொய்து ஈதி' என்று, ஓர் குயிலை, கரம் கூப்புகின்றாள். 16

புலவிக் காட்சிகள்

செம்மாந்த தெங்கின் இளநீரை, ஓர் செம்மல் நோக்கி,
'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,
'எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?' என்று, ஒர் ஏழை,
விம்மா, வெதும்பா, வெயரா, முகம் வெய்துயிர்த்தாள். 17

'போர்' என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங் கொள் திண் தோள்
மாரன் அனையான், மலர் கொய்து இருந்தானை, வந்து ஒர்
கார் அன்ன கூந்தல், குயில் அன்னவள், கண் புதைப்ப,
'ஆர்?' என்னலோடும், அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள். 18

மன்னனின் செயல்

ஊற்று ஆர் நறை நாள்மலர், மாதர், ஒருங்கு வாசச்
சேற்றால் விளையாத செந்தாமரைக் கைகள் நீட்டி,
ஏற்றாரை நோக்கான், இடை ஏந்தினன், நின்று ஒழிந்தான் -
மாற்றான், உதவான், கடு வச்சையன்போல் - ஒர் மன்னன். 19

மாற்றவள் பேரைக் கணவன் கூறக் கேட்ட பெண்ணின் துயரம்

தைக்கின்ற வேல் நோக்கினாள், தன் உயிர் அன்ன மன்னன்,
மைக் கொண்ட கண்ணாள் எதிர், மாற்றவள் பேர் விளம்ப,
மெய்க் கொண்ட நாணம் தலைக்கொண்டிட விம்மி, மென் பூக்
கைக் கொண்டு மோந்தாள்; உயிர்ப்புண்டு கரிந்தது அன்றே! 20

தன் தேவிமாருடன் திரிந்த மன்னனின் தோற்றம்

திண் தேர் அரசன் ஒருவன், குலத் தேவிமார் தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிக்கத் திரிவான், மதம் கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்கத் திரி மா மத யானை ஒத்தான். 21

தலைவன்மேல் அவனது மனைவியர் இருவர் சினந்து புலத்தல்

சந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள் தனக்கும்,
வந்திக்கல் ஆகும் மடவாட்கும், வகுத்து நல்கி,
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப, மென் பூச்
சிந்தி, கலாப மயிலின், கண் சிவந்து, போனார். 22

மகளிர் ஆடவர் செயல்கள்

வந்து, எங்கும், தம் மன் உயிரேயோ, பிறிது ஒன்றோ? -
கந்தம் துன்றும் சோர் குழல் காணார்; கலை பேணார்;
அந்தம் தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார்; -
சிந்தும் சந்தத் தே மலர் நாடித் திரிவாரும்; 23

யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்,
தாழத் தாழாள்; தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்;
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்
சூழற்கே, தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்; 24

அம் தார் ஆகத்து ஐங் கணை நூறாயிரம் ஆகச்
சிந்தா நின்ற சிந்தையினான், செய்குவது ஓரான்,
'மந்தாரம் கொண்டு ஈகுதியோ, மாதவி?' என்று, ஓர்
சந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால் தளர்வானும்; 25

நாடிக் கொண்டாள், குற்றம் நயந்தாள்; முனிவு ஆற்றாள்;
ஊடிக் காணக் காட்டும் நலத்தாள் உடன் நில்லாள்;
தேடித் தேடிச் சேர்த்த நறும் பூஞ் செழு மாலை
சூடிச் சூடி, கண்ணடி நோக்கித் துவள்வாளும்; 26

'மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான், இடையே வந்து
உற, இக் கோலம் பெற்றிலென் என்றால், உடன் வாழ்வு இப்
பிறவிக்கு ஒல்லேன்; என் செய்வது, இப் பேர் அணி?' என்று, ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து, இழை எல்லாம் விடுவாளும்; 27

வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக்கின்ற நுண் இடை நோவ, கசிவாளும்;
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி, பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க, குழைவாளும்; 28

தன்னைக் கண்டாள்; மென் நடை கண்டாள்; தமரைப்போல்
துன்னக் கண்டாள்; தோழமை கொண்டாள்; துணை என்றாள்;
'உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது; உடு நீ' என்று,
அன்னக் கன்னிக்கு, ஆடை அளிப்பான் அமைவாளும்; 29

பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி, கொம்பின் ஒதுங்கி, துணர் ஈன்ற
சாகைத் தம் கை, கண்கள் புதைத்தே தளர்வாளும்; 30

'பொன்னே, தேனே, பூமகளே, காண், எனை' என்னா,
தன் நேர் இல்லாள், அங்கு, ஒரு கொய்யல் தழை மூழ்கி,
'இன்னே என்னைக் காணுதி நீ' என்று, இகலி, தன்
நல் நீலக் கண் கையின் மறைத்து, நகுவாளும்; 31

வில்லில் கோதை நாண் உற மிக்கோன், இகல் அங்கம்
புல்லிக் கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி,
அல்லின் கோதை மாதர் முகப் பேர் அரவிந்தச்
செல்வக் கானில், செங்கதிர் என்னத் திரிவாரும்; 32

செய்யில் கொள்ளும் தெள் அமுதச் செஞ் சிலை ஒன்று
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார், தம்
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலைச் சொல்,
தெய்வப் பாடல் சொல் கலை என்ன, தெரிவாரும்; 33

சோலைத் தும்பி மென் குழல் ஆக, தொடை மேவும்
கோலைக் கொண்ட மன்மத ஆயன், குறி உய்ப்ப,
நீலத்து உண்கண் மங்கையர் சூழ, நிரை ஆவின்,
மாலைப் போதில் மால் விடை என்ன வருவாரும். 34

'ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது, காமன் கை வில்' எனும்
வாக்கு மாத்திரம்; அல்லது, வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே! 35

நாறு பூங் குழல் நன்னுதல், புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று, ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்,
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ! 36

சினையின்மேல் இருந்தான், உருத் தேவரால்
வனையவும் அரியாள் வனப்பின் தலை,
நினைவும், நோக்கமும், நீக்கலன்; கைகளால்,
நனையும் நாள் முறியும் கொய்து, நல்கினான். 37

வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி, -ஓர்
தண்டு போல் புயத்தான் தடுமாறினான்,
'உண்டு கோபம்' என்று உள்ளத்து உணர்ந்து; - அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே. 38

பூக் கொய்தலை வெறுத்து, யாவரும் புனலாடப் புகுதல்

ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்,
தூய தண் நிழல் சோலை, துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர்; வெண் திரை
பாயும் தீம் புனல் - பண்ணை சென்று எய்தினார். 39

18. நீர் விளையாட்டுப் படலம்

மகளிரும் ஆடவரும் புனலாடச் சென்ற காட்சி

புனை மலர்த் தடங்கள் நோக்கி, பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க,
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண,
அனகரும், அணங்கனாரும், அம் மலர்ச் சோலை நின்று,
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார். 1

அங்கு, அவர், பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம்,
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல, மேல்நாள்,
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம்,
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே. 2

மைந்தரும் மாதரும் புனலிடை விளையாடியமை

மை அவாம் குவளை எல்லாம், மாதர் கண்மலர்கள் பூத்த;
கை அவாம் உருவத்தார் தம் கண்மலர், குவளை பூத்த;
செய்ய தாமரைகள் எல்லாம், தெரிவையர் முகங்கள் பூத்த;
தையலார் முகங்கள், செய்ய தாமரை பூத்த அன்றே. 3

தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உறத் தழுவுவாரும்,
தோளையே பற்றி வெற்றித் திரு எனத் தோன்றுவாரும்,
பாளை வீ விரிந்தது என்ன, பரந்து நீர் உந்துவாரும்,
வாளைமீன் உகள, அஞ்சி, மைந்தரைத் தழுவுவாரும்; 4

வண்டு உணக் கமழும் சுண்ணம், வாச நெய் நானத்தோடும்
கொண்டு, எதிர் வீசுவாரும், கோதை கொண்டு ஓச்சுவாரும்,
தொண்டை வாய்ப் பெய்து, தூநீர், கொழுநர் மேல் தூகின்றாரும்,
புண்டரீகக் கை கூப்பி, புனல் முகந்து இறைக்கின்றாரும். 5

மின் ஒத்த இடையினாரும், வேய் ஒத்த தோளினாரும்,
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி,
அன்னத்தை, 'வருதி, என்னோடு ஆட' என்று அழைக்கின்றாரும்;
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற, உளைகின்றாரும்; 6

பண் உளர் பவளத் தொண்டை, பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய், குவளை வாட்கண், மருங்கு இலாக் கரும்பின் அன்னார்,
உள் நிறை கயலை நோக்கி, 'ஓடு நீர்த் தடங்கட்கு எல்லாம்
கண் உள ஆம்கொல்?' என்று, கணவரை வினவுவாரும்; 7

தேன் உகு நறவ மாலைச் செறி குழல் தெய்வம் அனனாள்,
தானுடைக் கோல மேனி தடத்திடைத் தோன்ற, நோக்கி,
'நான் நக நகுகின்றாள் இந் நல் நுதல்; தோழி ஆம்' என்று,
ஊனம் இல் விலையின் ஆரம், உளம் குளிர்ந்து உதவுவாரும்; 8

குண்டலம் திரு வில் வீச, குல மணி ஆரம் மின்ன,
விண் தொடர் வரையின் வைகும் மென் மயிற் கணங்கள் போல,
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்தம் வயிரத் திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசைப் புனற் கரை சார்கின்றாரும்; 9

அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம்;
செங் கயல் அனைய நாட்டம் சிவப்பு உறச் சீறிப் போன
மங்கை, ஓர் கமலச் சூழல் மறைந்தனள்; மறைய, மைந்தன்,
'பங்கயம்', 'முகம்', என்று ஓராது, ஐயுற்றுப் பார்க்கின்றானும்; 10

பொன் - தொடி தளிர்க் கைச் சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப,
எற்று நீர் குடையும்தோறும், ஏந்து பேர் அல்குல்நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி, சீறடி கவ்வ, 'காலில்
சுற்றிய நாகம்' என்று, துணுக்கத்தால் துடிக்கின்றாரும். 11

குடைந்து நீராடும் மாதர் குழாம் புடைசூழ் ஆழித்
தடம் புயம் பொலிய, ஆண்டு, ஒர் தார் கெழு வேந்தன் நின்றான் -
கடைந்த நாள், அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும்
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல மாதோ. 12

தொடி உலாம் கமலச் செங் கை, தூ நகை, துவர்த்த செவ் வாய்க்
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து, ஒரு குரிசில் நின்றான், -
கடி உலாம் கமல வேலிக் கண் அகன் கான யாற்று,
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான். 13

கான மா மயில்கள் எல்லாம் களி கெடக் களிக்கும் சாயல்
சோனை வார் குழலினார்தம் குழாத்து, ஒரு தோன்றல் நின்றான் -
வான யாறு அதனை நண்ணி, வயின் வயின் வயங்கித் தோன்றும்
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர்த் திங்கள் ஒத்தான். 14

மேவலாம் தகைமைத்து அல்லால், வேழ வில் தடக் கை வீரற்கு
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடுங் கண் ஒர் ஏழை,
பாவைமார் பரந்த கோலப் பண்ணையில் பொலிவாள், வண்ணப்
பூ எலாம் மலர்ந்த பொய்கைத் தாமரை பொலிவது ஒத்தாள். 15

மிடலுடைக் கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன,
சுடர் முகத்து உலவு கண்ணாள், தோகையர் சூழ நின்றாள்;
மடலுடைப் போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ,
கடலிடைத் தோன்றும் மென் பூங் கற்பக வல்லி ஒத்தாள். 16

தேரிடைக் கொண்ட அல்குல், தெங்கிடைக் கொண்ட கொங்கை,
ஆரிடைச் சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்,
வாரிடைத் தனம் மீது ஆட மூழ்கினாள்; வதனம், மை தீர்
நீரிடைத் தோன்றும் திங்கள் நிழல் என, பொலிந்தது அன்றே! 17

நீராடிய பொய்கையும், பூம்புனலும்

மலை கடந்த புயங்கள், மடந்தைமார்,
கலை கடந்து அகல் அல்குல், கடம் படு
முலைகள், தம்தமின் முந்தி நெருங்கலால்,
நிலை கடந்து பரந்தது, நீத்தமே. 18

செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,
மெய் அராகம் அழிய, துகில் நெக,
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே! 19

ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்று அரோ! -
தேனும், நாவியும், தேக்கு, அகில் ஆவியும்,
மீனும், நாறின; வேறு இனி வேண்டுமோ? 20

மிக்க வேந்தர்தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்,
ஒக்க, நீல முகில் தலை ஓடிய
செக்கர் வானகம் ஒத்தது அம் தீம் புனல். 21

காக துண்ட நறுங் கலவைக் களி,
ஆகம் உண்டது, அடங்கலும் நீங்கலால்,
பாகு அடர்ந்த பனிக் கனி வாய்ச்சியர்,
வேகடம் செய் மணி என, மின்னினார். 22

பாய் அரித் திறலான் பசுஞ் சாந்தினால்
தூய பொன் - புயத்துப் பொதி தூக் குறி
மீ அரித்து விளர்க்க ஓர் மெல்லியல்
சேயரிக் கருங் கண்கள் சிவந்தவே. 23

கதம்ப நாள் விரை, கள் அவிழ் தாதொடும்
ததும்பு; பூந் திரைத் தண் புனல் சுட்டதால் -
நிதம்ப பாரத்து ஒர் நேரிழை, காமத்தால்
வெதும்புவாள் உடல், வெப்பம் வெதுப்பவே! 24

தையலாளை ஒர் தார் அணி தோளினான்,
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் -
செய்ய தாமரைச் செல்வியை, தீம் புனல்,
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே! 25

சுளியும் மென் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என,
விளிவு தோன்ற, மிதிப்பன போன்றன -
நளினம் ஏறிய நாகு இள அன்னமே. 26

ஆடவரின் அடங்கா வேட்கை

எரிந்த சிந்தையர், எத்தனை என்கெனோ?
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்,
தெரிந்த கொங்கைகள், செவ்விய நூல் புடை
வரிந்த பொற் கலசங்களை மானவே! 27

தாழ நின்ற ததை மலர்க் கையினால்,
ஆழி மன் ஒருவன் உரைத்தான்; அது,
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்,
தோழி கண்ணில், கடைக்கணிற் சொல்லினாள். 28

தள்ளி ஓடி அலை தடுமாறலால்,
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது,
உள்ளம் நாணி, ஒளிப்பன போன்றவே. 29

நீராடிக் கரையேறி ஆடை ஆபரணங்கள் அணிதல்

இனைய எய்தி இரும் புனல் ஆடிய,
வனை கருங் கழல் மைந்தரும், மாதரும்,
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே,
புனை நறுந் துகில், பூணொடும் தாங்கினார். 30

மேவினார் பிரிந்தார்; அந்த வீங்கு நீர்,
தாவு தண் மதிதன்னொடும் தாரகை
ஓவு வானமும், உள் நிறை தாமரைப்
பூ எலாம் குடி போனதும், போன்றதே. 31

சூரியனின் மறைவும், சந்திரனின் தோற்றமும்

மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான்;
தானும், அன்னது காதலித்தான் என,
மீன வேலையை, வெய்யவன் எய்தினான். 32

ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும், தம்
வேற்று மன்னர் தம்மேல் வரும் வேந்தர் போல்,
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன், மீளவும் தோற்றினான். 33

19. உண்டாட்டுப் படலம்

நிலா எங்கும் பரந்து தோற்றுதல்

வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்,
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்,
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்,
தண் நிறை நெடு நிலாத் தழைத்தது, எங்குமே. 1

கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய், பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது, நெடு நிலா - மதனன் வேண்டவே. 2

ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்,
கூறு பாற்கடலையே ஒத்த; குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த; என் இனி
வேறு நாம் புகல்வது, நிலவின் வீக்கமே? 3

எள்ள அருந் திசைகளோடு யாரும், யாவையும்,
கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால்,
வள் உறை வயிர வாள் மகர கேதனன்
வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே. 4

முத்துப் பந்தரில் தங்கி மகளிர் மதுப் பருகுதல்

தயங்கு தாரகை புரை தரள நீழலும்,
இயங்கு கார் மிடைந்த கா எழினிச் சூழலும்,
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்,
வயங்கு பூம் பந்தரும், மகளிர் எய்தினார். 5

பூக் கமழ் ஓதியர், போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்,
ஆக்கிய அமிழ்து என, அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா, மாந்தல் மேயினார். 6

மீனுடை விசும்பினார், விஞ்சை நாட்டவர்,
ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்,
மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார் -
தேனுடை மலரிடைத் தேன் பெய்தென்னவே. 7

உக்க பால்புரை நறா உண்ட வள்ளமும்,
கைக் கொள் வாள் ஒளிபடச் சிவந்து காட்ட, தன்
மைக் கணும் சிவந்தது; ஓர் மடந்தை வாய்வழிப்
புக்க தேன் அமிழ்தமாய்ப் பொலிந்த போன்றவே. 8

கள் காமத்தை தூண்டுதல்

காமமும் நானமும் ததைந்த, தண் அகில்
தூமம் உண், குழலியர் உண்ட தூ நறை,
ஓம வெங் குழி உகு நெய்யின், உள் உறை
காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே. 9

கள் உண்ட மயக்கத்தால் நிகழ்ந்த தடுமாற்றங்கள்

விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோ ? - வாள் நுதல் ஒருத்தி காண,
தடன் ஒக்கும் நிழலை, 'பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி, தோழி!' என்றாள். 10

அச்ச நுண் மருங்குலாள், ஓர் அணங்கு அனாள், அளகபந்தி
நச்சுவேல் கருங் கண் செவ் வாய் நளிர்முகம், மதுவுள் தோன்ற,
'பிச்சி நீ என் செய்தாய்? இப் பெரு நறவு இருக்க, வாளா,
எச்சிலை நுகர்தியோ?' என்று, எயிற்று அரும்பு இலங்க நக்காள். 11

அறம் எலாம் நகைசெய்து ஏசப் பொரு அரு மேனி வேறு ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள், மணியின் வள்ளத்து, வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய, நிறைந்தது போன்று தோன்ற,
நறவு என, அதனை, வாயின் வைத்தனள்; நாண் உட்கொண்டாள். 12

'யாழ்க்கும், இன் குழற்கும், இன்பம் அளித்தன இவை ஆம்' என்ன,
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்,
தாள் கருங் குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள், தன்
வாள் கணின் நிழலைக் கண்டாள்; வண்டு என ஓச்சுகின்றாள். 13

களித்த கண் மதர்ப்ப, ஆங்கு ஓர் கனங் குழை, கள்ளின் உள்ளே
வெளிப்படுகின்ற காட்சி வெண் மதி நிழலை நோக்கி,
'அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை; அஞ்சல்!' என்று, ஆங்கு இனியன உணர்த்துகின்றாள். 14

அழிகின்ற அறிவினாலோ, பேதமையாலோ, ஆற்றில்
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந் தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரைத்துக் கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை, நறவு என, வள்ளத்து ஏற்றாள். 15

மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி, வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல், இடை தடுமாறி என்ன,
வன்ன மேகலையை நீக்கி, மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்;
பொன்னரிமாலை கொண்டு, புரி குழல் புனையலுற்றாள். 16

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி,
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி,
'உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள், வெம்மை நீங்கி,
தண் மதி ஆகின், யானும் தருவென், இந் நறவை' என்றாள். 17

எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி, முன்கை
தள்ள, தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும், தேறாள்,
உள்ளத்தின் மயக்கம் தன்னால், 'உப் புறத்து உண்டு' என்று எண்ணி
வள்ளத்தை, மறித்து வாங்கி, மணி நிற இதழின் வைத்தாள். 18

வான் தனைப் பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப,
தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர நாணி,
ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால், ஒருத்தி, உண்டாள். 19

புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஓட,
வள் உறை கழித்த வாள்போல் வசி உற வயங்கு கண்ணாள்,
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள்,
'உள் உறை அன்பன் உண்ணான்' என உன்னி, நறவை உண்ணாள். 20

கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப, கூன் நுதல்
ஏற்றி, வாள் எயிறுகள் அதுக்கி, இன் தளிர்
மாற்ற அருங் கரதலம் மறிக்கும் - மாது, ஒரு
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே. 21

துடித்த வான் துவர் இதழ்த் தொண்டை, தூ நிலாக்
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி, கண்களால்
வடித்த வெங் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர், புறத்து உகு நறவம் போன்றவே! 22

கனித் திரள் இதழ் பொதி செம்மை கண் புக,
நினைப்பது ஒன்று, உரைப்பது ஒன்று, ஆம் ஒர் நேரிழை,
தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும்
குனித்தது; பனித்தது, குழவித் திங்களே. 23

இலவு இதழ் துவர் விட, எயிறு தேன் உக,
முலைமிசை, கச்சொடு கலையும் மூட்டு அற,
அலை குழல் சோர்தர, அசதி ஆடலால்,
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே. 24

'கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை,
அனகனுக்கு அறிவி' என்று, அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள், 'தோழி! நீயும் என்
மனம் எனத் தாழ்தியோ? வருதியோ?' என்றாள். 25

மான் அமர் நோக்கி, ஓர் மதுகை வேந்தன்பால்,
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்,
போனவர் போனவர் தொடரப் போக்கினாள்;
தானும், அங்கு, அவர்கள்பின் தமியள் ஏகினாள். 26

விரை செய் பூஞ் சேக்கையின் அடுத்த மீமிசை,
கரை செயா ஆசை ஆம் கடல் உளான், ஒரு
பிரைச மென் குதலையாள், கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள். 27

மன்றல் நாறு ஒரு சிறை இருந்து, ஒர் வாணுதல்,
தன் துணைக் கிள்ளையைத் தழீஇ, 'என் ஆவியை
இன்று போய்க் கொணர்கிலை; என் செய்வாய்? எனக்கு
அன்றிலோடு ஒத்தி' என்று அழுது, சீறினாள். 28

வளை பயில் முன்கை ஓர் மயில் அனாள்தனக்கு
இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும்,
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது கயற் கண் ஆலியே. 29

செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல், வெம்மையால்
பற்றலும், அல்குலில் பரந்த மேகலை
அற்று உகு முத்தின் முன்பு, அவனி சேர்ந்தன,
பொன் - தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே. 30

தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி, 'தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகு நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ?' எனப் பலவும் பன்னினாள். 31

மாடகம் பற்றினள்; மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் - ஒருத்தி, தன் பாங்கிமார்களோடு
ஊடினது உரைசெயாள்,-உள்ளத்து உள்ளதே. 32

குழைத்த பூங் கொம்பு அனாள் ஒருத்தி, கூடலை
இழைத்தனள்; அது, அவள் இட்ட போது எலாம்
பிழைத்தலும், அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும்
உழைத்தனள்; உயிர்த்தனள், உயிர் உண்டு என்னவே. 33

பந்து அணி விரலினாள் ஒருத்தி, பையுளாள்,
சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள்;
'வந்தனன்' என, கடை அடைத்து மாற்றினாள்;
சிந்தனை தெரிந்திலம்; சிவந்த, நாட்டமே. 34

உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு, ஒருத்திக்கு; அது, அன்பன் தேர்கிலான்;
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்,
'எத்தனை இறந்தன கடிகை, ஈண்டு?' என்றாள். 35

விதைத்த மென் காதலின் வித்து, வெஞ் சிறை
இதைப் புனல் நனைத்திட முளைத்ததே என -
பதைத்தனள் ஒருத்தன்மேல், ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும், - பொடித்தன, உரோம ராசியே. 36

பொலிந்த வாள் முகத்தினான், பொங்கி, தன்னையும்
மலிந்த பேர் உவகையால், - மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன், ஓர் நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கி, - தன் புயங்கள் வீங்கினான். 37

ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான்,
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெங் கணை
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம்
தீய்ந்தன நோக்கினன், திசைக்கும் சிந்தையான். 38

ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால், -
'நாட்டினை அளித்தி நீ' என்று நல்லவர்,
ஆட்டு நீர்க் கலசமே என்னல் ஆன - ஓர்
வாள் தொழில் மைந்தற்கு, ஓர் மங்கை கொங்கையே. 39

பயிர் உறு கிண்கிணி, பரந்த மேகலை,
வயிர வான் பூண் அணி, வாங்கி நீக்கினான்;
உயிர் உறு தலைவன்பால் போக உன்னினாள்;
செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள். 40

ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும் -
ஆலை மென் கரும்பு அனான் ஒருவற்கு, ஆங்கு, ஒரு
சோலை மென் குயில் அனாள் சுற்றி வீக்கிய
மாலையை நிமிர்ந்தில, வயிரத் தோள்களே? 41

சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்,
மாரனை நோக்கி, ஓர் மாதை நோக்கினாள்;
காரிகை இவள், அவள் கருத்தை நோக்கி, ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள். 42

சினம் கெழு வாட் கை ஓர் செம்மல்பால், ஒரு
கனங் குழை மயில் அனாள் கடிது போயினாள்;
மனம் குழை நறவமோ? மாலைதான் கொலோ?
அனங்கனோ? யார் கொலோ, அழைத்த தூதரே? 43

தொகுதரு காதற்குத் தோற்ற சீற்றத்து ஓர்
வகிர் மதி நெற்றியாள் மழைக் கண் ஆலி வந்து
உகுதலும், 'உற்றது என்?' என்று, கொற்றவன்
நகுதலும், நக்கனள், நாணும் நீங்கினாள். 44

பொய்த் தலை மருங்குலாள் ஒருத்தி, புல்லிய
கைத்தலம் நீக்கினள், கருத்தின் நீக்கலள்;
சித்திரம் போன்ற அச் செயல், ஒர் தோன்றற்குச்
சத்திரம் மார்பிடைத் தைத்தது ஒத்ததே. 45

மெல்லியல் ஒருத்தி, தான் விரும்பும் சேடியை,
புல்லிய கையினள், 'போதி தூது' எனச்
சொல்லுவான் உறும்; உற, நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து, விம்மினாள். 46

ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி, தன் உயிர்
மாறு இலாக் காதலன் செயலை, மற்று ஒரு
நாறு பூங் கோதைபால் நவில நாணுவாள்;
வேறு வேறு உற, சில மொழி விளம்பினாள். 47

கருத்து ஒரு தன்மையது; உயிரும் ஒன்று; தம்
அருத்தியும் அத் துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று எனப்
பொருத்துவர் ஆம் எனப் புல்லினார் அரோ. 48

வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி, வேந்தன் வந்து
எதிர்தலும், தன் மனம் எழுந்து முன் செல,
மதிமுகம் கதுமென வணங்கினாள்; அது,
புதுமை ஆதலின், அவற்கு அச்சம் பூத்ததே. 49

துனி வரு நலத்தொடு, சோர்கின்றாள், ஒரு
குனி வரு நுதலிக்கு, கொழுநன் இன்றியே
தனி வரு தோழியும், தாயை ஒத்தனள் -
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே. 50

ஆக்கிய காதலாள் ஒருத்தி, அந்தியில்
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்,
நோக்கினள், நின்றனள்; நுவன்றது ஓர்கிலள்;
போக்கின தூதினோடு, உணர்வும் போக்கினாள். 51

மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள்,
பிறப்பினொடு இறப்பு எனப் பெயரும் சிந்தையாள், -
துறப்ப அரு முகிலிடைத் தோன்றும் மின் என,
புறப்படும்; புகும்; - ஒரு பூத்த கொம்பு அனாள். 52

எழுத அருங் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு
உழுத வெம் புண்களில், வளைக் கை ஒற்றினாள்;
அழுதனள்; சிரித்தனள்; அற்றம் சொல்லினாள்;
தொழுதனள் ஒருத்தியை, தூது வேண்டுவாள்! 53

'ஆர்த்தியும், உற்றதும், அறிஞர்க்கு, அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ?' என
வேர்த்தனள்; வெதும்பினள்; மெலிந்து சோர்ந்தனள்;
பார்த்தனள், ஒருத்தி தன் பாங்கு அனாளையே. 54

தனங்களின் இளையவர் தம்மின், மும் மடி,
கனம் கனம் இடை இடைக் களிக்கும் கள்வன் ஆய்,
மனங்களில் நுழைந்து, அவர் மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே. 55

மது உண்ட மகளிர் ஆடவர் இடையே நிகழ்ந்த ஊடலும் கூடலும்

நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறுங் குஞ்சி மைந்தர்,
துறை அறி கலவிச் செவ்வித் தோகையர் தூசு வீசி,
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் -
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோ தான்? 56

பொன் அருங் கலனும், தூசும், புறத்து உள துறத்தல் வம்போ?
நல் நுதல் ஒருத்தி, தன்பால் அகத்து உள நாணும், நீத்தாள்;-
உன்ன அருந் துறவு பூண்ட உணர்வுடை ஒருவனே போல்,
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே. 57

பொரு அரு மதனன் போல்வான் ஒருவனும், பூவின்மேல் அத்
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும், சேக்கைப் போரில்,
ஒருவருக்கு ஒருவர் தோலார், ஒத்தனர்;- 'உயிரும் ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே' என்ற போது யாவர் வெல்வார்? 58

கொள்ளைப் போர் வாட்கணாள் அங்கு ஒருத்தி, ஓர் குமரன் அன்னான்
வள்ளத் தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி,
'"உள்ளத்து, ஆர் உயிர் அன்னாள் மேல் உதைபடும்" என்று, நீர் நும்
கள்ளத்தால் புதைத்தி' என்னா, முன்னையின் கனன்று மிக்காள். 59

பால் உள பவளச் செவ் வாய், பல் வளை, பணைத்த வேய்த் தோள்,
வேல் உள நோக்கினாள், ஓர் மெல்லியல், வேலை அன்ன
மால் உள சிந்தையான், ஓர் மழை உள தடக் கையாற்கு,
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை, ஈந்தாள். 60

புனத்து உள மயில் அனாள், கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள், ஒருத்தி, நீடிய
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை,
மனத்து உறை காதலே வாகை கொண்டதே. 61

கொலை உரு அமைந்தெனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள், கணவற் புல்குவாள்,
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என, முதுகை நோக்கினாள். 62

குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
சங்குஇனம் ஆர்த்தன; கலையும் சாறின;
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன; -
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே. 63

துனி உறு புலவியைக் காதல், சூழ் சுடர்
பனி என, துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள்,
புனை இழை ஒரு மயில், பொய் உறங்குவாள்,
கனவு எனும் நலத்தினால், கணவற் புல்லினாள். 64

வட்ட வாள் முகத்து ஒரு மயிலும், மன்னனும்,
கிட்டிய போது, உடல் கிடைக்கப் புல்லினார்; -
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்; -
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால். 65

அருங் களி மால் கயிறு அனைய வீரர்க்கும்
கருங் குழல் மகளிர்க்கும், கலவிப் பூசலால்,
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது - அம் மாலைக் கங்குலே. 66

சந்திரன் மறைவும், சூரியன் தோற்றமும்

கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என, இந்து நந்தினான்,
படர் திரைக் கருங் கடல் பரமன் மார்பிடைச்
சுடர் மணி அரசு என, இரவி தோன்றினான். 67

மிகைப் பாடல்கள்

அரம்பையரினும், இவர் ஆடல் நன்று எனப்
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி, வான்
நிரம்பிய கண்களை முகிழ்த்து, நீள் நகர்
கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே. 66-1

20. எதிர்கொள் படலம்

தயரதன் பரிவாரங்களுடன் கங்கையைக் கடந்து மிதிலையை சார்தல்

அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செங்கோல் வெண்குடை வேந்தர்வேந்தன்,
படா முக மலையில் தோன்றிப் பருவம் ஒத்து அருவி பல்கும்
கடா நிறை ஆறு பாயும் கடலொடும், கங்கை சேர்ந்தான். 1

கப்புடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற,
துப்புடை மணலிற்று ஆகி, கங்கை நீர் சுருங்கிக் காட்ட,
அப்புடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த,
உப்புடைக் கடலும், தெண் நீர் உண் நசை உற்றது அன்றே. 2

ஆண்டு நின்று எழுந்து போகி, அகன் பணை மிதிலை என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நிலக் கிழவன் எய்த,
தாண்டு மா புரவித் தானைத் தண்ணளிச் சனகன் என்னும்
தூண் தரு வயிரத் தோளான் செய்தது சொல்லலுற்றாம்: 3

தயரதனை எதிர்கொள்ள சனகன் சேனை புடை சூழ வரல்

'வந்தனன் அரசன்' என்ன, மனத்து எழும் உவகை பொங்க,
கந்து அடு களிறும், தேரும், கலின மாக் கடலும், சூழ,
சந்திரன் இரவிதன்னைச் சார்வது ஓர் தன்மை தோன்ற,
இந்திரதிருவன் தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான். 4

கங்கை நீர் நாடன் சேனை, மற்று உள கடல்கள் எல்லாம்
சங்குஇனம் ஆர்ப்ப வந்து சார்வன போல, சார,
பங்கயத்து அணங்கைத் தந்த பாற்கடல் எதிர்வதேபோல்,
மங்கையைப் பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே. 5

தயரதனின் தானைச் சிறப்பு

இலை குலாவு அயிலினான் அனிகம், ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்,
அலகு இல் மா களிறு, தேர், புரவி, ஆள், என விராய்,
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே. 6

தொங்கல், வெண்குடை, தொகைப் பிச்சம், உட்பட விராய்,
எங்கும் விண் புதைதரப் பகல் மறைந்து, இருள் எழ,
பங்கயம், செய்யவும், வெளியவும், பல படத்
தங்கு தாமரையுடைத் தானமே போலுமே. 7

கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்
படி உளாளோ? கடற் படை உளாளோ? பகர்
மடி இலா அரசினான் மார்பு உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம் - முளரியாள். 8

வார்முகம் கெழுவு கொங்கையர் கருங் குழலின் வண்டு
ஏர் முழங்கு அரவம் - ஏழ் இசை முழங்கு அரவமே!
தேர் முழங்கு அரவம் - வெண் திரை முழங்கு அரவமே!
கார் முழங்கு அரவம் - வெங் கரி முழங்கு அரவமே! 9

சூழு மா கடல்களும் திடர் பட, துகள் தவழ்ந்து,
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது அரோ-
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அப்
பூழையூடே பொடித்து, அப்புறம் போயதே! 10

மன் நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறைதர,
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது அரோ-
பொன் இடும், புவி இடும், புனை மணிக் கலன் எலாம்
மின் இடும்; வில் இடும்; வெயில் இடும்; நிலவு இடும்! 11

சனக மன்னன் வருகின்ற வழிக் காட்சிகள்

தா இல் மன்னவர்பிரான் வர, முரண் சனகனும்
ஏ வரும் சிலையினான், எதிர் வரும் நெறி எலாம்,
தூவு தண் சுண்ணமும், கனக நுண் தூளியும்,
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடி எலாம். 12

நறு விரைத் தேனும், நானமும், நறுங் குங்குமச்
செறி அகில் தேய்வையும், மான் மதத்து எக்கரும்,
வெறியுடைக் கலவையும், விரவு செஞ் சாந்தமும்,
செறி மதக் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம். 13

மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும்,
சென்று வந்து உலவும் அச் சிதைவு இலா நிழலின் நேர்,
வென்ற திண் கொடியொடும், நெடு விதானமும் விராய்,
நின்ற வெண்குடைகளின் நிழலுமே - நிழல் எலாம். 14

இரு மன்னர் சேனையும் ஒன்றுடன் ஒன்று கலந்த காட்சி

மாறு இலா மதுகையான் வரு பெருந் தானைமேல்,
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்றபோது,
ஈறு இல் ஓதையினொடும், எறி திரைப் பரவைமேல்
ஆறு பாய்கின்றது ஓர் அமலைபோல் ஆனதே. 15

தயரதன் சனகனைத் தழுவுதல்

கந்தையே பொரு கரிச் சனகனும், காதலொடு
உந்த, ஓத அரியது ஓர் தன்மையோடு, உலகு உளோர்
தந்தையே அனைய அத் தகவினான் முன்பு, தன்
சிந்தையே பொரு, நெடுந் தேரின் வந்து எய்தினான். 16

எய்த, அத் திரு நெடுந் தேர் இழிந்து, இனிய தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க, முன் சேறலும்,
கையின் வந்து, 'ஏறு' என, கடிதின் வந்து ஏறினான்;
ஐயனும், முகம் மலர்ந்து, அகம் உறத் தழுவினான். 17

சனகனோடு தயரதன் மிதிலை நகர் சேர்தல்

தழுவி நின்று, அவன் இருங் கிளையையும், தமரையும்,
வழு இல் சிந்தனையினான், வரிசையின் அளவளாய்,
'எழுக முந்துற' எனா, இனிது வந்து எய்தினான், -
உழுவை முந்து அரி அனான், எவரினும் உயரினான். 18

இராமனின் வருகை

இன்னவாறு, இருவரும், இனியவாறு ஏக, அத்
துன்னு மா நகரின் நின்று எதிர்வரத் துன்னினான் -
தன்னையே அனையவன், தழலையே அனையவன்,
பொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து அருளினான். 19

தம்பியும், தானும், அத் தானை மன்னவன் நகர்ப்
பம்பு திண் புரவியும், படைஞரும், புடை வர,
செம் பொனின், பசு மணித் தேரின் வந்து எய்தினான் -
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான். 20

யானையோ, பிடிகளோ, இரதமோ, இவுளியோ,
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் -
தானை ஏர் சனகன் ஏவலின், நெடுந் தாதை முன்
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே? 21

இராம இலக்குவரைத் தயரதன் தழுவுதல்

காவியும், குவளையும், கடி கொள் காயாவும் ஒத்து,
ஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உருவொடே,
தேவரும் தொழு கழல் சிறுவன், முன் பிரிவது ஓர்
ஆவி வந்தென்ன வந்து, அரசன் மாடு அணுகினான். 22

அனிகம் வந்து அடி தொழ, கடிது சென்று, அரசர்கோன்
இனிய பைங் கழல் பணிந்து எழுதலும், தழுவினான்;
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன, மலைத்
தனி நெடுஞ் சிலை இறத் தவழ் தடங் கிரிகளே. 23

இளைய பைங் குரிசில் வந்து, அடி பணிந்து எழுதலும்,
தளை வரும் தொடையல் மார்பு உற உறத் தழுவினான்,
களைவு அருந் துயர் அறக் ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான், எவரினும் மிகுதியான். 24

அன்னையர் அடி வணங்குதல்

கற்றை வார் சடையினான் கைக் கொளும் தனு இற,
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அக் குரிசில், பின்
பெற்ற தாயரையும், அப் பெற்றியின் தொழுது, எழுந்து
உற்றபோது, அவர் மனத்து உவகை யார் உரை செய்வார். 25

தன்னை வணங்கிய பரதனை இராமன் தழுவுதல்

உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து, ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தர, தொழுது எழும் பரதனை,
பொன்னின் மார்பு உற அணைத்து, உயிர் உறப் புல்லினான் -
தன்னை அத் தாதை முன் தழுவினான் என்னவே. 26

இராமனை இலக்குவனும், பரதனைச் சத்துருக்கனும், வணங்கிப் போற்றுதல்

கரியவன் பின்பு சென்றவன், அருங் காதலின்
பெரியவன் தம்பி, என்று இனையது ஓர் பெருமை அப்
பொரு அருங் குமரர், தம் புனை நறுங் குஞ்சியால்,
இருவர் பைங் கழலும், வந்து, இருவரும் வருடினார். 27

குமரர்கள் நால்வரும் விளங்கிய காட்சி

'கோல் வரும் செம்மையும், குடை வரும் தன்மையும்,
சால் வரும் செல்வம்' என்று உணர் பெருந் தாதைபோல்,
மேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள், தாம் -
நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார். 28

சேனையுடன் முன் செல்ல இராமனுக்குத் தயரதன் பணித்தல்

சான்று எனத் தகைய செங்கோலினான், உயிர்கள்தாம்
ஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்,
'ஆன்ற இச் செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற'
தோன்றலை, 'கொண்டு முன் செல்க!' எனச் சொல்லினான். 29

சேனையின் மகிழ்ச்சி

காதலோ! அறிகிலம், கரிகளைப் பொருவினார்;
தீது இலா உவகையும், சிறிதுஅரோ? பெரிதுஅரோ?
கோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்,
தாதையோடு ஒத்தது, அத் தானையின் தன்மையே! 30

தம்பியருடன் இராமன் தேர் மீது சென்ற காட்சி

தொழுது இரண்டு அருகும், அன்புடைய தம்பியர் தொடர்ந்து,
அழிவு இல் சிந்தையின் உவந்து, ஆடல் மாமிசை வர,
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட, எழுந்து,
எழுத அருந் தகையது ஓர் தேரின்மேல் ஏகினான். 31

இராமன் மிதிலை நகர வீதி வந்து சேர்தல்

பஞ்சி சூழ் மெல் அடிப் பாவைமார் பண்ணைசூழ்,
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து, இடை விராய்,
நஞ்சு சூழ் விழிகள் பூ மழையின் மேல் விழ நடந்து,
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான். 32

சூடகம் துயல் வர, கோதை சோர்தர, மலர்ப்
பாடகம் - பரத நூல் பசுர, வெங் கட கரிக்
கோடு அரங்கிட எழும் குவி தடங் கொங்கையார்,
ஆடு அரங்கு அல்லவே - அணி அரங்கு அயல் எலாம். 33

பேதைமார் முதல் கடைப் பேரிளம்பெண்கள்தாம்,
ஏதி ஆர் மாரவேள் ஏவ, வந்து எய்தினார்,
ஆதி வானவர் பிரான் அணுகலால், அணி கொள் கார்
ஓதியார் வீதிவாய் உற்றவாறு உரைசெய்வாம்: 34

No comments:

Post a Comment