Tuesday, August 4, 2009

Silappathigaram(Full Version) - Part II

15. அடைக்கலக் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,
வேலின் கொற்றமும், விளங்கிய கொள்கை,
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட 5

மதுரை மூதூர் மா நகர் கண்டு; ஆங்கு,
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து:
தீது தீர் மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழி- 10

தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து,
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து, 15

தமர்முதல் பெயர்வோன், தாழ் பொழில் ஆங்கண்,
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க,
கவுந்தி இடவயின் புகுந்தோன்-தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க
நாவல் அந்தணன் தான் நவின்று, உரைப்போன் 20

'வேந்து உறு சிறப்பின் விழுச் சீர் எய்திய,
மாந்தளிர் மேனி, மாதவி மடந்தை
பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து,
வாலாமை நாள் நீங்கிய பின்னர்,
மா முது கணிகையர், 'மாதவி மகட்கு 25

நாம நல் உரை நாட்டுதும்' என்று
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு, ஆங்கு,
'இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின், 30

நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
'இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்;
வந்தேன்; அஞ்சல்; மணிமேகலை யான்;
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது;
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக' என, 35

விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக' என:
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
'மணிமேகலை' என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு 40

செம் பொன் மாரி செங் கையின் பொழிய;
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன்,
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை; 45

பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள
ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்
கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி, 50

மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்,
பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்
கடக் களிறு அடக்கிய கருணை மறவ!
பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக,
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல, 55

வடதிசைப் பெயரும் மா மறையாளன்,
'கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க' என,
பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர் 60

மாட மறுகின் மனைதொறு மறுகி,
'கருமக் கழி பலம் கொள்மினோ' எனும்
அரு மறை ஆட்டியை அணுகக் கூஉய்,
'யாது நீ உற்ற இடர்? ஈது என்?' என,
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி, 65

'இப் பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி,
கைப் பொருள் தந்து, என் கடுந் துயர் களைக' என
அஞ்சல்! உன்-தன் அரும் துயர் களைகேன்;
நெஞ்சு உறு துயரம் நீங்குக' என்று, ஆங்கு,
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கையின், 70

தீத் திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க,
தானம் செய்து, அவள்-தன் துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி,
ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து,
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ! 75

பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த,
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரி பொய்த்து, அறைந்து உணும் பூதத்துக்
கறை கெழு பாசத்துக்கை அகப்படலும்,
பட்டோ ன் தவ்வை படு துயர் கண்டு 80

கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி,
'என் உயிர் கொண்டு, ஈங்கு இவன் உயிர் தா' என,
நல் நெடும் பூதம் நல்காதாகி,
'நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு,
பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை; 85

ஒழிக, நின் கருத்து' என, உயிர் முன் புடைப்ப,
அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து, அவன்
சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து,
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல்! 90

இம்மைச் செய்தன யான் அறி நல்வினை;
உம்மைப் பயன்கொல், ஒரு தனி உழந்து, இத்
திருத்தகு மா மணிக் கொழுந்துடன் போந்தது,
விருத்த கோபால! நீ?' என வினவ-
கோவலன் கூறும்: 'ஓர் குறுமகன்-தன்னால், 95

காவல் வேந்தன் கடி நகர்-தன்னில்,
நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த,
கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும்;
அணித்தகு புரி குழல் ஆய்-இழை-தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும்; 100

மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து,
காமக் கடவுள் கையற்று ஏங்க,
அணி திகழ் போதி அறவோன்-தன் முன்,
மணிமேகலையை மாதவி அளிப்பவும்;
நனவு போல, நள் இருள் யாமத்து, 105

கனவு கண்டேன்: கடிது ஈங்கு உறும்' என-
'அறத்து உறை மாக்கட்கு அல்லது, இந்தப்
புறச்சிறை இருக்கை பொருந்தாது; ஆகலின்,
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் நின்
உரையின் கொள்வர்; இங்கு ஒழிக நின் இருப்பு; 110

காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன்,
மாட மதுரை மா நகர் புகுக' என,
மாதவத்து ஆட்டியும் மா மறை முதல்வனும்
கோவலன்-தனக்குக் கூறும் காலை-
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய 115

புறஞ்சிறை மூதூர்ப் பூங் கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப், பண்பின் பெயர்வோன்
ஆயர் முதுமகள், மாதரி என்போள்,
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்-
'ஆ காத்து ஓம்பி, ஆப் பயன் அளிக்கும் 120

கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை;
தீது இலள்; முதுமகள்; செவ்வியள்; அளியள்;
மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று' என எண்ணினளாகி,
'மாதரி! கேள்; இம் மடந்தை-தன் கணவன் 125

தாதையைக் கேட்கின், தன் குலவாணர்
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு,
கருந் தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்;
உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்,
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன். 130

மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் தீட்டி,
தே மென் கூந்தல் சின் மலர் பெய்து,
தூ மடி உடீஇ; தொல்லோர் சிறப்பின்
ஆயமும், காவலும், ஆய்-இழை-தனக்கு, 135

தாயும், நீயே ஆகித் தாங்கு: ஈங்கு,
என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி, 140

தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,
இன் துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது,
பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால்
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது; 145

நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல் உரை அறியாயோ நீ?-
தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும்,
மிகப் பேர் இன்பம் தரும்; அது கேளாய்; 150

காவிரிப் படப்பைப் பட்டினம்-தன்னுள்
பூ விரி பிண்டிப் பொது நீங்கு திரு நிழல்,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம்மேல் இருந்தருளி,
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன்; 155

திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்,
தாரன் மாலையன், தமனியப் பூணினன்,
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்துப்
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை; 160

சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது, 'ஈங்கு
யாது இவன் வரவு?' என, இறையோன் கூறும்
'எட்டி சாயலன் இருந்தோன்-தனது
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில், ஓர்
மாதவ முதல்வனை மனைப் பெரும் கிழத்தி 165

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி, உள்புக்கு,
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி,
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி, 170

எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்து, 'நின்
மக்களின் ஓம்பு, மனைக்கிழத்தீ!' என,
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி;
காதல் குரங்கு கடைநாள் எய்தவும், 175

தானம் செய்வுழி, அதற்கு ஒரு கூறு
'தீது அறுக' என்றே செய்தனள் ஆதலின்,
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள்,
உத்தர-கௌத்தற்கு ஒரு மகன் ஆகி;
உருவினும் திருவினும், உணர்வினும், தோன்றி; 180

பெரு விறல் தானம் பலவும் செய்து; ஆங்கு,
எண்-நால் ஆண்டின் இறந்த பிற்பாடு;
விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின்,
'பெற்ற செல்வப் பெரும் பயன் எல்லாம்
தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு' என, 185

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறு கை
கொண்டு, ஒரு பாகத்து; 'கொள்கையின் புணர்ந்த
சாயலன் மனைவி தானம்-தன்னால்
ஆயினன் இவ் வடிவு; அறிமினோ, என,
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத் 190

தேவ குமரன் தோன்றினன்' என்றலும்-
சாரணர் கூறிய தகைசால் நல்மொழி
ஆர் அணங்கு ஆக, அறம் தலைப்பட்டோ ர்
அன்று அப் பதியுள் அரும் தவ மாக்களும்,
தன் தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும், 195

இட்ட தானத்து எட்டியும், மனைவியும்,
முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்;
கேட்டனை ஆயின், தோட்டு-ஆர் குழலியொடு
நீட்டித்திராது, நீ போக' என்றே
கவுந்தி கூற-உவந்தனள் ஏத்தி, 200

வளர் இள வன முலை, வாங்கு அமைப் பணைத் தோள்,
முளை இள வெண் பல், முதுக்குறை நங்கையொடு;
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்து;
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப,
மறித் தோள் நவியத்து உறிக் காவாளரொடு 205

செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ;
மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,
கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,
காய் பொன் உலையும், கல் இடு கூடையும், 210

தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,
கவையும், கழுவும், புதையும், புழையும்,
ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,
சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும், 215

கோலும், குந்தமும், வேலும், பிறவும்,
ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து; தன் மனை புக்கனளால்-
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து-என்.

16. கொலைக்களக் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும் பேர் உவகையின் இடைக் குல மடந்தை
அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி,
பூவல் ஊட்டிய புனை மாண் பந்தர்க் 5

காவல் சிற்றில் கடி மனைப் படுத்து;
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி,
நறு மலர்க் கோதையை நாள்-நீர் ஆட்டி:
'கூடல் மகளிர் கோலம் கொள்ளும்
ஆடகப் பைம் பூண் அரு விலை அழிப்ப, 10

செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு என் மகள்
ஐயை, காணீர், அடித்தொழில் ஆட்டி;
பொன்னின் பொதிந்தேன், புனை பூங் கோதை!
என்னுடன் நங்கை, ஈங்கு இருக்க' எனத் தொழுது,
'மாதவத்துஆட்டி வழித் துயர் நீக்கி, 15

ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள்;
நோதகவு உண்டோ , நும் மகனார்க்கு இனி
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள் 20

நெடியாது அளிமின், நீர்' எனக் கூற-
இடைக்குல மடந்தையர், இயல்பின் குன்றா
மடைக்கலம்-தன்னொடு மாண்பு உடை மரபின்
கோளிப் பாகல் கொழுங் கனித் திரள் காய்,
வாள் வரிக் கொடுங் காய், மாதுளம் பசுங் காய், 25

மாவின் கனியொடு வாழைத் தீம் கனி,
சாலி அரிசி, தம் பால் பயனொடு,
'கோல் வளை மாதே! கொள்க' எனக் கொடுப்ப-
மெல் விரல் சிவப்பப், பல்வேறு பசுங் காய்
கொடு வாய்க் குயத்து விடுவாய்செய்ய, 30

திரு முகம் வியர்த்தது; செங் கண் சேந்தன;
கரி புற அட்டில் கண்டனள் பெயர,
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி-
தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக் 35

கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த
செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி,
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல், 40

தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு,
'அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின்
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து-'ஆங்கு, 45

ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ,
நல் அமுது உண்ணும் நம்பி! ஈங்கு,
பல் வளைத் தோளியும் பண்டு நம் குலத்து,
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை 50

விழுமம் தீர்த்த விளக்குக்கொல்!' என;
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி,
'கண் கொளா நமக்கு, இவர் காட்சி, ஈங்கு' என-
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த 55

மை ஈர் ஓதியை, 'வருக' எனப் பொருந்தி,
'கல் அதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுநகொல்லோ மடந்தை மெல் அடி!' என,
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி,
எம் முதுகுரவர் என் உற்றனர்கொல்? 60

மாயம் கொல்லோ, வல் வினைகொல்லோ?
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்!
வறு மொழியாளரொடு வம்பப் பரத்தரொடு
குறு மொழிக் கோட்டி, நெடு நகை புக்கு,
பொச்சாப்புண்டு, பொருள் உரையாளர் 65

நச்சுக் கொன்றேற்கு நல் நெறி உண்டோ?
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்;
சிறு முதுகுறைவிக்குச் சிறுமையும் செய்தேன்;
வழு எனும் பாரேன்; மா நகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய்; என் செய்தனை!' என- 70

'அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75

முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருண் மொழி அளைஇ,
எற் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80

போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்' என்று அவள் கூற-
'குடி முதல் சுற்றமும், குற்றிளையோரும்;
அடியோர் பாங்கும், ஆயமும், நீங்கி; 85

நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும்,
பேணிய கற்பும், பெரும் துணை ஆக;
என்னொடு போந்து, ஈங்கு என் துயர் களைந்த
பொன்னே, கொடியே, புனை பூங் கோதாய்,
நாணின் பாவாய், நீள் நில விளக்கே, 90

கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு, யான் போய்,
மாறி வருவன்; மயங்கா தொழிக' என-
கருங் கயல் நெடுங் கண் காதலி-தன்னை
ஒருங்குடன் தழீஇ, உழையோர் இல்லா 95

ஒரு தனி கண்டு, தன் உள் அகம் வெதும்பி,
வரு பனி கரந்த கண்ணன் ஆகி,
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி,
வல்லா நடையின் மறுகில் செல்வோன்.
இமில் ஏறு எதிர்ந்தது, இழுக்கு என அறியான், 100

தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின்-
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து,
மாதர் வீதி மறுகிடை நடந்து,
பீடிகைத் தெருவில் பெயர்வோன்-ஆங்கண்,
கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய 105

நுண்வினைக் கொல்லர், நூற்றுவர் பின் வர,
மெய்ப்பை புக்கு, விலங்கு நடைச் செலவின்
கைக் கோல் கொல்லனைக் கண்டனனாகி,
'தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன் வினைக் கொல்லன் இவன்' எனப் பொருந்தி, 110

'காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி
நீ விலையிடுதற்கு ஆதியோ?' என-
'அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர்
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான்' என,
கூற்றத் தூதன் கைதொழுது ஏத்தப் 115

போற்று-அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன்
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும் பொன் குடைச் சூல்
சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி, 120

'கோப்பெருந்தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை' என- 'முன்போந்து,
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர, என்
சிறு குடில் அங்கண் இருமின் நீர்' என,
கோவலன் சென்று, அக் குறுமகன் இருக்கை ஓர் 125

தேவ கோட்டச் சிறைஅகம் புக்கபின்-
'கரந்து யான் கொண்ட கால்-அணி ஈங்கு,
பரந்து வெளிப்படாமுன்னம் மன்னற்கு,
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான்' என,
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்- 130

'கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்,
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும்,
காவலன் உள்ளம் கவர்ந்தன' என்று, தன்
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து,
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 135

குலமுதல் தேவி கூடாது ஏக,
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன்
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி,
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்- 140

வீழ்ந்தனன் கிடந்து, தாழ்ந்து, பல ஏத்தி,
'கன்னகம் இன்றியும், கவைக்கோல் இன்றியும்,
துன்னிய மந்திரம் துணை எனக் கொண்டு,
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து,
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் 145

கல்லென் பேர் ஊர்க் காவலர்க் கரந்து, என்
சில்லைச் சிறு குடில் அகத்து இருந்தோன்' என-
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
ஊர் காப்பாளரைக் கூவி, 'ஈங்கு என் 150

தாழ் பூங் கோதை-தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின்,
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு' என,
காவலன் ஏவக் கருந் தொழில் கொல்லனும்,
'ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து' என, 155

தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
கோவலன்-தன்னைக் குறுகினனாகி-
'வலம் படு தானை மன்னவன் ஏவ,
சிலம்பு காணிய வந்தோர் இவர்' என,
செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் 160

பொய் வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட-
'இலக்கண முறைமையின் இருந்தோன், ஈங்கு, இவன்
கொலைப்படு மகன் அலன்' என்று கூறும்
அரும் திறல் மாக்களை அகநகைத்து உரைத்து,
கருந் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் 165

'மந்திரம், தெய்வம், மருந்தே, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின்
கட்டு உண் மாக்கள் துணை எனத் திரிவது
மருந்தில் பட்டீர் ஆயின், யாவரும் 170

பெரும் பெயர் மன்னனின் பெரு நவைப் பட்டீர்
மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயின்,
இந்திர-குமரரின் யாம் காண்குவமோ
தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின்,
கைஅகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர்; 175

மருந்தின் நம்கண் மயக்குவர் ஆயின்,
இருந்தோம் பெயரும் இடனும்-மார் உண்டோ?
நிமித்தம் வாய்த்திடின் அல்லது, யாவதும்
புகற்கிலர், அரும் பொருள் வந்து கைப் புகுதினும்;
தந்திர கரணம் எண்ணுவர் ஆயின், 180

இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர்;
இவ் இடம் இப் பொருள் கோடற்கு இடம் எனின்,
அவ் இடத்து அவரை யார் காண்கிற்பார்?
காலம் கருதி அவர் பொருள் கையுறின்,
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ? 185

கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின்,
இரு நில மருங்கின் யார் காண் கிற்பார்?
இரவே பகலே என்று இரண்டு இல்லை;
கரவு இடம் கேட்பின், ஓர் புகல் இடம் இல்லை.
தூதர் கோலத்து வாயிலின் இருந்து, 190

மாதர் கோலத்து வல் இருள் புக்கு,
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று, ஆங்கு,
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம்
வெயில் இடு வயிரத்து, மின்னின் வாங்க,
துயில்கண் விழித்தோன் தோளில் காணான் 195

உடைவாள் உருவ, உறை கை வாங்கி,
எறிதொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான்.
மல்லிற் காண, மணித் தூண் காட்டி,
கல்வியிற் பெயர்ந்த கள்வன் தன்னைக்
கண்டோ ர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு 200

உண்டோ உலகத்து ஒப்போர்?' என்று, அக்
கருந் தொழில் கொல்லன் சொல்ல- ஆங்கு, ஓர்
திருந்து வேல் தடக் கை இளையோன் கூறும்
'நிலன் அகழ் உளியன், நீலத் தானையன்,
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று, 205

மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து,
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற,
கை வாள் உருவ, என் கை வாள் வாங்க,
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன்;
அரிது இவர் செய்தி; அலைக்கும் வேந்தனும்; 210

உரியது ஒன்று உரைமின், உறு படையீர்!' என-
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள் வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது;
புண் உமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப,
மண்ணக மடந்தை வான் துயர் கூர, 215

காவலன் செங்கோல் வளைஇய, வீழ்ந்தனன்,
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என்.

வெண்பா

நண்ணும், இரு வினையும்; நண்ணுமின்கள், நல் அறமே-
கண்ணகி தன் கேள்வன் காரணத்தால், மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே; பண்டை
விளைவாகி வந்த வினை.

17. ஆய்ச்சியர் குரவை
(கொச்சகக்கலி)

'கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்
நாவல் அம் தண் பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பார் அரசு ஆண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் 5

காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின்,
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்' என்று,
ஐயை தன் மகளைக் கூஉய்,
கடை கயிறும் மத்தும் கொண்டு,
இடை முதுமகள் வந்து தோன்றும்-மன். 10

உரைப் பாட்டு மடை

குடப் பால் உறையா; குவி இமில் ஏற்றின்
மடக் கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு! 1

உறி நறு வெண்ணெய் உருகா; உருகும்
மறி, தெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு! 2

நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்;
மால் மணி வீழும்; வருவது ஒன்று உண்டு! 3

கருப்பம்

'குடத்துப் பால் உறையாமையும்,
குவி இமில் ஏற்றின்
மடக் கண் நீர் சோர்தலும்
உறியில் வெண்ணெய் உருகாமையும்,
மறி முடங்கி ஆடாமையும்,
மான் மணி நிலத்து அற்று வீழ்தலும்,
வருவது ஓர் துன்பம் உண்டு' என,
மகளை நோக்கி, 'மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும்-தான் காண,
ஆயர் பாடியில், எரு மன்றத்து,
மாயவனுடன் தம்முன் ஆடிய
வால சரிதை நாடகங்களில்,
வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்' என்றாள்-
'கறவை, கன்று, துயர் நீங்குக எனவே!'

கொளு

'காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ்
வேரி மலர்க் கோதையாள்; சுட்டு, 1

சுட்டு

நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப்
பொன் தொடி மாதராள் தோள். 2

மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம்
முல்லை அம் பூங் குழல்-தான். 3

நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப்
பெண் கொடி மாதர்-தன் தோள். 4

பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இந்
நன் கொடி மென்முலை-தான். 5

வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக்
கொன்றை அம் பூங் குழலாள். 6

தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப்
பூவைப் புது மலராள். 7

எடுத்துக்காட்டு

ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங் கோதையார்,-
என்று, தன் மகளை நோக்கி,
தொன்று படு முறையான் நிறுத்தி,
இடை முதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோள் பெயர் இடுவாள்;
குடமுதல் இடமுறையா, குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என,
விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே.
மாயவன் என்றாள், குரலை; விறல் வெள்ளை-
ஆயவன் என்றாள், இளி-தன்னை; ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை; மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை.
மாயவன் சீர் உளார், பிஞ்ஞையும் தாரமும்;
வால் வெள்ளை சீரார், உழையும் விளரியும்;
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்,
முத்தைக்கு நல் விளரி-தான்
அவருள்,
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர்
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப்
பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
'ஐ!' என்றாள், ஆயர் மகள்,

கூத்து உள்படுதல்

அவர் தாம்
செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து,
அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார், முன்னைக்
குரல்-கொடி தன் கிளையை நோக்கி, 'பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருந்து ஒசித்தான் பாடுதும்,
முல்லைத் தீம் பாணி' என்றாள்.
எனா அக்,
குரல் மந்தம் ஆக, இளி சமன் ஆக,
வரன்முறையே, துத்தம் வலியா, உரன் இலா
மந்தம் விளரி பிடிப்பாள், அவள் நட்பின்
பின்றையைப் பாட்டு எடுப்பாள்.

பாட்டு

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 1

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 2

கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 3

தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை-
அணி நிறம் பாடுகேம் யாம்.

இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்?
அறுவை ஒளித்தான் அயர, அயரும்
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்? 1

வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்?
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்? 2

தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்?
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி,
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்? 3

ஒன்றன் பகுதி

கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான்,
மதி புரையும் நறு மேனித் தம்முனோன் வலத்து உளாள்,
பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை: சீர் புறங்காப்பார்
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார். 1

மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள்,
பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள்,
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னைச் சீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் 2

ஆடுநர்ப் புகழ்தல்

மாயவன் தம்முன்னினொடும், வரிவளைக் கைப் பின்னையொடும்,
கோவலர் - தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம்சோர,
ஆய் வளைச் சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த,
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே.
எல்லா நாம்,
புள் ஊர் கடவுளைப் போற்றுதும், போற்றுதும்-
உள்வரிப் பாணி ஒன்று உற்று.

உள்வரி வாழ்த்து

கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம்,
தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே:
தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக்
கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால். 1

பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான்,
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்:
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால், 2

முந்நீரினுள் புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான்,
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்
கல் நவில் தோள் ஓச்சி, கடல் கடைந்தான் என்பரால். 3

முன்னிலைப் பரவல்

வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை
மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே! 1

'அறு பொருள் இவன்' என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த,
உறு பசி ஒன்று இன்றியே, உலகு அடைய உண்டனையே
உண்ட வாய் களவினால் உறி வெண்ணெய் உண்ட வாய்
வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே! 2

திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல
இரண்டு அடியால் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே;
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி;
மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே! 3

படர்க்கைப் பரவல்

மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே? 1

பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே? 2

மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
'நாராயணா!' என்னா நா என்ன நாவே? 3

வாழ்த்து

என்று, யாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம்
ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேத்தர்
மருள, வைகல் வைகல் மாறு அட்டு,
வெற்றி விளைப்பது மன்னோ-கொற்றத்து
இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித் தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே!

18. துன்ப மாலை
(கொச்சகக் கலி)

ஆங்கு,
ஆயர் முதுமகள், ஆடிய சாயலாள்,
பூவும், புகையும், புனை சாந்தும், கண்ணியும்,
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த,
தூவி, துறைபடியப் போயினாள், மேவிக் 5

குரவை முடிவில்-ஓர் ஊர் அரவம் கேட்டு,
விரைவொடு வந்தாள் உளள்.
அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான் 10

'எல்லா! ஓ!-
காதலன் காண்கிலேன்; கலங்கி நோய் கைம்மிகும்;
ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே;
ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின்,
ஏதிலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ! 15

நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும்;
அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே;
அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு ஆயின்,
மன்பதை சொன்னது எவன்? வாழியோ, தோழீ!
தஞ்சமோ! தோழீ! தலைவன் வரக் காணேன்; 20

வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு-அன்றே;
வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு ஆயின்,
எஞ்சலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ!'
சொன்னது:
'அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் 25

கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே.
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே,
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே!'
எனக் கேட்டு,
பொங்கி எழுந்தாள்; விழுந்தாள், பொழி கதிர்த் 30

திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டென;
செங் கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை,
'எங்கணா!' என்னா இனைந்து, ஏங்கி, மாழ்குவாள்;
'இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க,
துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35

மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ?
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி,
துறை பல திறம் மூழ்கித் துயர் உறு மகளிரைப் போல்,
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப, 40

அறன் எனும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?
தம் உறு பெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க,
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல்,
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப,
இம்மையும் இசை ஒரீஇ, இனைந்து, ஏங்கி, அழிவலோ?' 45

காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்;
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க;
பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி, 50

காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?'-
'கள்வனோ அல்லன்; கருங் கயல் கண் மாதராய்!
ஒள் எரி உண்ணும், இவ் ஊர்' என்றது ஒரு குரல்.

19. ஊர்சூழ் வரி
(கொச்சகக் கலி)

என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி
நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி
'முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்
நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று
பட்டேன், படாத துயரம், படுகாலை; 5

உற்றேன், உறாதது; உறுவனே? ஈது ஒன்று
கள்வனோ அல்லன் கணவன்; என் கால் சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே! ஈது ஒன்று
மாதர்த் தகைய மடவார்கள் முன்னரே,
காதல் கணவனைக் காண்பனே, ஈது ஒன்று 10

காதல் கணவனைக் கண்டால், அவன் வாயில்
தீது அறு நல் உரை கேட்பனே; ஈது ஒன்று
தீது அறு நல் உரை கேளாதொழிவனேல்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல்; இது ஒன்று'-என்று
அல்லல் உற்று, ஆற்றாது, அழுவாளைக் கண்டு, ஏங்கி, 15

மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி-
'களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி,
வளையாத செங்கோல் வளைந்தது! இது என்கொல்?
மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்தது! இது என்கொல்? 20

மண் குளிரச் செய்யும் மற வேல் நெடுந்தகை
தண் குடை வெம்மை விளைத்தது! இது என்கொல்?
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம்பொருட்டால்,
வம்பப் பெரும் தெய்வம் வந்தது! இது என்கொல்?
ஐ அரி உண் கண் அழுது, ஏங்கி, அரற்றுவாள் 25

தெய்வம் உற்றாள் போலும் தகையள்! இது என்கொல்?'-
என்பன சொல்லி, இனைந்து, ஏங்கி, ஆற்றவும்
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை-
கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட,
செம் பொன் கொடி அனையாள் கண்டாளைத் தான் காணான். 30

மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி, மா மலைமேல்,
செவ்வென் கதிர் சுருங்கி, செங் கதிரோன் சென்று ஒளிப்ப,
புல்லென் மருள் மாலைப் பூங் கொடியாள் பூசலிட,
ஒல்லென் ஒலி படைத்தது ஊர்.
வண்டு ஆர் இருங் குஞ்சி மாலை தன் வார் குழல்மேல் 35

கொண்டாள், தழீஇ, கொழுநன்பால், காலைவாய்;
புண் தாழ் குருதி புறம் சோர, மாலைவாய்,
கண்டாள், அவன் தன்னைக் காணாக் கடுந் துயரம்!
'என் உறு துயர் கண்டும், 'இடர் உறும் இவள்' என்னீர்!
பொன் உறு நறு மேனி பொடி ஆடிக் கிடப்பதோ? 40

மன் உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு,
'என் உறு வினை காண்; ஆ! இது' என உரையாரோ?
யாரும் இல் மருள் மாலை, இடர் உறு தமியேன் முன்,
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ?
பார் மிகு பழி தூற்ற, பாண்டியன் தவறு இழைப்ப, 45

'ஈர்வது ஓர் வினை காண்; ஆ! இது' என உரையாரோ?
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன்முன்,
புண் பொழி குருதியிராய்ப் பொடி ஆடிக் கிடப்பதோ?
மன்பதை பழி தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
'உண்பதோர் வினை காண்; ஆ! இது' என உரையாரோ? 50

பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் 55

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?
வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?'
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் 60

பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள,
நின்றான், எழுந்து: 'நிறை மதி வாள் முகம்
கன்றியது!' என்று, அவள் கண்ணீர் கையான் மாற்ற-
அழுது ஏங்கி, நிலத்தின் வீழ்ந்து, ஆய் இழையாள் தன் கணவன்
தொழுதகைய திருந்து அடியைத் துணை வளைக் கையால் பற்ற, 65

பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான்,
'எழுது எழில் மலர் உண் கண்! இருந்தைக்க' எனப் போனான்.
மாயம் கொல்? மற்று என்கொல்? மருட்டியதோர் தெய்வம்கொல்?
போய் எங்கு நாடுகேன்? பொருள் உரையோ இது அன்று;
காய் சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்; 70

தீ வேந்தன்-தனைக் கண்டு, இத் திறம் கேட்பல் யான்' என்றாள்-
என்றாள் எழுந்தாள்; இடர் உற்ற தீக் கனா
நின்றாள் நினைந்தாள், நெடுங் கயல் கண் நீர் சோர;
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையாச்
சென்றாள், அரசன் செழுங் கோயில் வாயில் முன்.

20. வழக்குரை காதை

ஆங்கு,
'குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா! 5

விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!'

கருப்பம்

செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன் தன் கொற்ற வாயில்
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்; 10

இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் உரைத்தும்' என-
ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,
வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர், 15

கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட
'ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க' என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த; 20

கோப்பெருந்தேவி சென்று தன் தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,
'வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து, 25

இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
'இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்' என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!' என-
வாயிலோன், 'வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி! 30

தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி, 35

வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்; 40

செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே' என-
'வருக, மற்று அவள் தருக, ஈங்கு' என- 45

வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
'நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!' என-
தேரா மன்னா! செப்புவது உடையேன்; 50

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் 55

பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு 60

என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே' என- 'பெண் அணங்கே!
கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்' என- ஒள்-இழை, 65

'நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே' என-
'தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக' எனத் தந்து, தான் முன் வைப்ப- 70

கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
'பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்; 75

மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்று 80

இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.

வெண்பா

'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்' என்னும்,
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே-பொல்லா
வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!
கடு வினையேன் செய்வதூஉம் காண். 1

காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,
ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!
காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும்-கண்டு, அஞ்சி,
கூடலான் கூடு ஆயினான். 2

மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,
கையில் தனிச் சிலம்பும், கண்ணீரும், வையைக் கோன்
கண்டளவே தோற்றான்; அக் காரிகை-தன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான், உயிர். 3

21. வஞ்சின மாலை
(கலிவெண்பா)

'கோவேந்தன் தேவி! கொடுவினை ஆட்டியேன்
யாவும் தெரிய இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய-காண் நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக 5

முன் நிறுத்திக் காட்டிய மொய் குழலாள்; பொன்னிக்
கரையில், 'மணல் பாவை நின் கணவன் ஆம்' என்று,
உரைசெய்த மாதரொடும் போகாள், திரை வந்து
அழியாது சூழ்போக, ஆங்கு உந்தி நின்ற
வரி ஆர் அகல் அல்குல் மாதர்; உரைசான்ற 10

மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்-
தன்னைப் புனல் கொள்ள, தான் புனலின் பின் சென்று,
'கல் நவில் தோளாயோ!' என்னக், கடல் வந்து,
முன் நிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக்கொண்டு,
பொன் அம் கொடி போலப் போதந்தாள்; மன்னி, 15

மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி,
கணவன் வரக் கல் உருவம் நீத்தாள்; இணை ஆய
மாற்றாள் குழவி விழ, தன் குழவியும் கிணற்று
வீழ்த்து, ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள்; வேற்றொருவன்
நீள் நோக்கம் கண்டு, 'நிறை மதி வாள் முகத்தைத் 20

தான் ஓர் குரக்கு முகம் ஆக!' என்று, போன
கொழுநன் வரவே, குரக்கு முகம் நீத்த
பழு மணி அல்குல் பூம் பாவை; 'விழுமிய,
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த
நுண் அறிவினோர் நோக்கம்; நோக்காதே, எண் இலேன், 25

வண்டல் அயர்விடத்து, யான் ஓர் மகள் பெற்றால்,
ஒண்-தொடி! நீ ஓர் மகன் பெறின், கொண்ட
கொழுநன் அவளுக்கு என்று, யான் உரைத்த மாற்றம்
கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தை நோய் கூரும், திருவிலேற்கு' என்று எடுத்து, 30

தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய், முந்தி, ஓர்
கோடிக் கலிங்கம் உடுத்து, குழல் கட்டி,
நீடித் தலையை வணங்கி, தலை சுமந்த
ஆடகப் பூம் பாவை-அவள்; போல்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன்; 35

பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ' என்னா, விட்டு அகலா-
'நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின் 40

யான் அமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்' என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து, 45

விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்- வட்டித்த
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
'மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள் 50

பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?' என்ன-
'பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க' என்று, காய்த்திய 55

பொன்-தொடி ஏவ, புகை அழல் மண்டிற்றே-
நல் தேரான் கூடல் நகர்.

வெண்பா

பொற்பு வழுதியும், தன் பூவையரும், மாளிகையும்,
வில் பொலியும் சேனையும், மா வேழமும், கற்பு உண்ண;
தீத் தரு வெங் கூடல் தெய்வக் கடவுளரும்
மாத்துவத்தான் மறைந்தார் மற்று.

22. அழற்படு காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது;
காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன;
அரைசர் பெருமான், அடு போர்ச் செழியன்
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து, ஆங்கு,
இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்ட, 5

புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
அரைசுக்கட்டிலில் துஞ்சியது அறியாது;
ஆசான், பெருங்கணி, அறக்களத்து அந்தணர்,
காவிதி, மந்திரக்கணக்கர்-தம்மொடு,
கோயில் மாக்களும், குறுந் தொடி மகளிரும், 10

ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப-
காழோர், வாதுவர், கடுந் தேர் ஊருநர்,
வாய் வாள் மறவர், மயங்கினர் மலிந்து,
கோமகன் கோயில் கொற்ற வாயில்
தீ முகம் கண்டு, தாம் விடைகொள்ள- 15

நித்திலப் பைம் பூண் நிலாத் திகழ் அவிர் ஒளி,
தண் கதிர் மதியத்தன்ன மேனியன்;
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து,
வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி, என்று
இன்னவை முடித்த நல் நிறச் சென்னியன்; 20

நுரை என விரிந்த நுண் பூங் கலிங்கம்
புலராது உடுத்த உடையினன்; மலரா
வட்டிகை, விளம்பொரி, வன்னிகை, சந்தனம்,
கொட்டமோடு அரைத்துக் கொண்ட மார்பினன்;
தேனும், பாலும், கட்டியும், பெட்பச் 25

சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன்;
தீர்த்தக் கரையும், தேவர் கோட்டமும்,
ஓத்தின் சாலையும், ஒருங்குடன் நின்று,
பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன்;
நண் பகல் வர அடி ஊன்றிய காலினன்; 30

விரி குடை, தண்டே, குண்டிகை, காட்டம்,
பிரியாத் தருப்பை, பிடித்த கையினன்;
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்;
முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ,
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு, 35

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்-
வென்றி வெங் கதிர் புரையும் மேனியன்;
குன்றா மணி புனை பூணினன்; பூணொடு
முடிமுதல் கலன்கள் பூண்டனன்; முடியொடு
சண்பகம், கருவிளை, செங் கூதாளம், 40

தண் கமழ் பூ நீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்,
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்;
அங்குலி கையெறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணம் கொண்ட மார்பினன்; 45

பொங்கு ஒளி அரத்தப் பூம் பட்டு உடையினன்;
முகிழ்த்த கைச்
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி,
ஏலும் நல் சுவை இயல்புளிக் கொணர்ந்து,
வெம்மையின் கொள்ளும் மடையினன்; செம்மையின் 50

பவளச் செஞ் சுடர் திகழ் ஒளி மேனியன்;
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின்,
முரைசொடு வெண்குடை, கவரி, நெடுங் கொடி,
உரைசால் அங்குசம், வடி வேல், வடிகயிறு,
என இவை பிடித்த கையினன் ஆகி, 55

எண்-அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி,
மண்ணகம் கொண்டு, செங்கோல் ஓச்சி
கொடுந் தொழில் கடிந்து, கொற்றம் கொண்டு;
நடும் புகழ் வளர்த்து, நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன 60

அரைச பூதத்து அரும் திறல் கடவுளும்-
செந் நிறப் பசும் பொன் புரையும் மேனியன்;
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர்
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன்;
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி, 65

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்;
உரைசால் பொன் நிறம் கொண்ட உடையினன்;
வெட்சி, தாழை, கள் கமழ் ஆம்பல்,
சேடல், நெய்தல், பூளை, மருதம்,
கூட முடித்த சென்னியன்; நீடு ஒளிப் 70

பொன் என விரிந்த நல் நிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன்
கொள்ளும், பயறும், துவரையும், உழுந்தும்,
நள்ளியம் பலவும் நயந்து உடன் அளைஇ,
'கொள்' எனக் கொள்ளும் மடையினன்; புடைதரு 75

நெல் உடைக் களனே, புள் உடைக் கழனி,
வாணிகப் பீடிகை, நீள் நிழல் காஞ்சி,
பாணி கைக்கொண்டு, முற்பகல் பொழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுவோனே; அவனே
நாஞ்சில் அம் படையும், வாய்ந்து உறை துலா முன் 80

சூழ் ஒளித் தாலும், யாழும் ஏந்தி,
விளைந்து பதம் மிகுந்து, விருந்து பதம் தந்து,
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து,
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து, ஆங்கு,
உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக் 85

கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளிப் பூத வியன் பெரும் கடவுளும்-
கருவிளை புரையும் மேனியன்; அரியொடு
வெள்ளி புனைந்த பூணினன்; தௌ஢ ஒளிக் 90

காழகம் செறிந்த உடையினன்; காழ் அகில்
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன்; ஏந்திய
கோட்டினும், கொடியினும், நீரினும், நிலத்தினும்,
காட்டிய பூவின் கலந்த பித்தையன்;
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்தி, 95

செம்மையின் வரூஉம் சிறப்புப் பொருந்தி,
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன்;
ஒண் நிறக் காழகம் சேர்ந்த உடையினன்;
ஆடற்கு அமைந்த அவற்றோடு பொருந்தி,
பாடற்கு அமைந்த பல துறை போகி, 100

கலி கெழு கூடல் பலி பெறு பூதத்
தலைவன் என்போன்-தானும்-தோன்றி,
கோமுறை பிழைத்த நாளில், இந் நகர்
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின், 105

யாம் முறை போவது இயல்பு அன்றோ?' என,
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன்
நாற் பால் பூதமும் பாற்பாற் பெயர-
கூல மறுகும், கொடித் தேர் வீதியும்,
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும், 110

உரக் குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன்
கா எரிஊட்டிய நாள் போல் கலங்க,
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது,
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட
கறவையும் கன்றும், கனல் எரி சேரா, 115

அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன;
மற வெங் களிறும், மடப் பிடி நிரைகளும்,
விரை பரிக் குதிரையும், புறமதில் பெயர்ந்தன:
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
மைத் தடங் கண்ணார், மைந்தர்-தம்முடன், 120

செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை
நறுமலர் அவிழ்ந்த நாறு இரு முச்சித்
துறு மலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்,
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங் காழ் ஆரம், பரிந்தன பரந்த 125

தூ மென் சேக்கை, துனிப் பதம் பாராக்
காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர்
குதலைச் செவ் வாய்க் குறு நடைப் புதல்வரொடு
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி, 130

வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத
வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டாப்
பெரு மனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி,
'இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து,
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை 135

கொங்கைப் பூசல் கொடிதோ அன்று' என,
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண்-நான்கு இரட்டி இருங் கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி,
தண்ணுமை, முழவம், தாழ்தரு தீம் குழல், 140

பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு,
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து, ஆங்கு,
'எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
இந் நாட்டு இவ் ஊர் இறைவனை இழந்து,
தேரா மன்னனைச் சிலம்பின் வென்று, இவ் 145

ஊர் தீ ஊட்டிய ஒரு மகள்' என்ன
அந்தி விழவும், ஆரண ஓதையும்,
செந் தீ வேட்டலும், தெய்வம் பரவலும்
மனை விளக்குறுத்தலும், மாலை அயர்தலும்,
வழங்கு குரல் முரசமும், மடிந்த மா நகர் 150

காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனள்; உயிர்த்து,
மறுகிடை மறுகும், கவலையில் கவலும்,
இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும்,
ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன், 155

கொந்து அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதி-என்.

வெண்பா

மாமகளும், நாமகளும், மா மயிடன் செற்று உகந்த
கோமகளும், தாம் படைத்த கொற்றத்தாள்; நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்-
மதுராபதி என்னும் மாது.

23. கட்டுரை காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்,
குவளை உண் கண் தவள வாள் முகத்தி;
கடை எயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி;
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும், 5

வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்;
இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும்,
வலக் கை அம் சுடர்க் கொடு வாள் பிடித்தோள்;
வலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால்
தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்; பனித்துறைக் 10

கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன்,
பொற்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன்,
குல முதல் கிழத்தி ஆதலின், அலமந்து
ஒரு முலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன் 15

முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்,
'கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை' என-
வாட்டிய திரு முகம் வலவயிற் கோட்டி,
'யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என- 20

'ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன்;
கட்டுரை ஆட்டியேன்; யான் நின் கணவற்குப்
பட்ட கவற்சியேன்; பைந்தொடி! கேட்டி
பெருந்தகைப் பெண்! ஒன்று கேளாய், என் நெஞ்சம் 25

வருந்திப் புலம்புறு நோய்
தோழி! நீ ஈது ஒன்று கேட்டி, எம் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதராய்! ஈது ஒன்று கேள், உன் கணவற்குத்
தீதுற வந்த வினை காதில் 30

மறை நா ஓசை அல்லது, யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே;
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது
குடி பழி தூற்றும் கோலனும் அல்லன்
இன்னும் கேட்டி; நல் நுதல் மடந்தையர் 35

மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு,
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப்படாஅது
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும்,
ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக் குடிப் பிறந்தோர்க்கு 40

இழுக்கம் தாராது இதுவும் கேட்டி,
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி,
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
"அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல்" என மொழிந்து, 45

மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி
இன்று அவ் வேலி காவாதோ? என,
செவிச் சூட்டு ஆணியில், புகை அழல் பொத்தி,
நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் கை அமரர் கோமான் 50

உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,
இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை
இன்னும் கேட்டி, நன் வாய் ஆகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை 55

திரு நிலைபெற்ற பெருநாள் இருக்கை,
அறன் அறி செங்கோல், மற நெறி நெடு வாள்,
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்,
பூம் புனல் பழனப் புகார் நகர் வேந்தன்,
தாங்கா விளையுள், நல் நாடு-அதனுள், 60

வலவைப் பார்ப்பான், பராசரன் என்போன்,
குலவு வேல் சேரன் கொடைத் திறம் கேட்டு,
'வண் தமிழ் மறையோர்க்கு வான் உறை கொடுத்த
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு' என,
காடும், நாடும், ஊரும், போகி, 65

நீடு நிலை மலயம் பிற்படச் சென்று, ஆங்கு,
ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி,
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும்
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க 70

நா வலம் கொண்டு, நண்ணார் ஓட்டி,
பார்ப்பன வாகை சூடி, ஏற்புற
நன் நலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன்-
செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்
தங்கால் என்பது ஊரே அவ் ஊர்ப் 75

பாசிலை பொதுளிய போதி மன்றத்து;
தண்டே, குண்டிகை, வெண்குடை, காட்டம்,
பண்டச் சிறு பொதி, பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன்; 'காவல் வெண்குடை
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி! 80

கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி!
விடர்ச் சிலை பொறித்த விறலோன் வாழி!
பூந் தண் பொருநைப் பொறையன் வாழி!
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க!' என;
குழலும், குடுமியும், மழலைச் செவ் வாய், 85

தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி,
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர;
'குண்டப் பார்ப்பீர்! என்னோடு ஓதி, என்
பண்டச் சிறு பொதி கொண்டு போமின்' என;
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90

ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன்,
பால் நாறு செவ் வாய்ப் படியோர் முன்னர்,
தளர் நா ஆயினும், மறைவிளி வழா அது,
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத,
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து, 95

முத்தப் பூணூல், அத்தகு புனை கலம்,
கடகம், தோட்டொடு கையுறை ஈத்து,
தன் பதிப் பெயர்ந்தனனாக- நன் கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅராகி,
வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி, 100

கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றி,
'படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன்' என,
இடு சிறைக் கோட்டத்து இட்டனராக,
வார்த்திகன் மனைவி, கார்த்திகை என்போள்,
அலந்தனள்; ஏங்கி அழுதனள், நிலத்தில்; 105

புலந்தனள்; புரண்டனள்; பொங்கினள்; அது கண்டு,
மை அறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவம் திறவாது ஆகலின்,
திறவாது அடைந்த திண் நிலைக் கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி 110

'கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக்கு உற்ற
இடும்பை யாவதும் அறிந்தீமின்' என,
ஏவல் இளையவர் காவலன் தொழுது,
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப,
'நீர்த்து அன்று இது' என நெடுமொழி கூறி, 115

'அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என்
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன்' என,
தடம் புனல் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர், 120

இரு நில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி, அவள்
தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே;
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின்
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப,
கலை அமர் செல்விக் கதவம் திறந்தது 125

'சிறைப்படு கோட்டம் சீமின், யாவதும்
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்மின்;
இடு பொருள் ஆயினும், படுபொருள் ஆயினும்,
உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்' என
யானை எருத்தத்து, அணி முரசு இரீஇ, 130

கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்
தான் முறை பிழைத்த தகுதியும் கேள், நீ
'ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து,
அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று,
வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண, 135

உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்' எனும்
உரையும் உண்டே, நிரை தொடியோயே!-
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு,
வடி வேல் தடக் கை வசுவும், குமரனும்,
தீம் புனல் பழனச் சிங்கபுரத்தினும், 140

காம்பு எழு கானக் கபிலபுரத்தினும்,
அரைசு ஆள் செல்வத்து, நிரை தார் வேந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
தாய வேந்தர்-தம்முள் பகையுற,
இரு-முக் காவதத்து இடைநிலத்து யாங்கணும், 145

செரு வெல் வென்றியின், செல்வோர் இன்மையின்,
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து,
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு,
சிங்கா வண் புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும் 150

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை,
முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்-
வெந் திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரதன் என்னும் பெயரன்; அக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்- 155

'ஒற்றன் இவன்' எனப் பற்றினன் கொண்டு,
வெற்றி வேல் மன்னர்க்குக் காட்டிக் கொல்வுழி;
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி,
நிலைக்களம் காணாள், நீலி என்போள்,
'அரசர், முறையோ? பரதர், முறையோ?' 160

ஊரீர், முறையோ? சேரியீர் முறையோ?' என,
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழு நாள் இரட்டி எல்லை சென்றபின்,
'தொழு நாள் இது' எனத் தோன்ற வாழ்த்தி,
மலைத் தலை ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியில் 165

கொலைத் தலைமகனைக் கூடுபு நின்றோள்,
'எம் உறு துயரம் செய்தோர் யாவதும்
தம் உறு துயரம் இற்று ஆகுக' என்றே
விழுவோள் இட்ட வழு இல் சாபம்
பட்டனிர் ஆதலின், கட்டுரை கேள் நீ 170

உம்மை வினை வந்து உருத்தகாலை,
செம்மையிலோர்க்குச் செய் தவம் உதவாது
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன் - தன்னை
ஈர்-ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை, 175

ஈனோர் வடிவில் காண்டல் இல்' என,
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு
விதி முறை சொல்லி, அழல்வீடு கொண்டபின்-
'கருத்து உறு கணவன் கண்டபின் அல்லது,
இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலன்' என, 180

கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து,
'கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்;
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு' என,
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவு நீர் வையை ஒரு கரைக் கொண்டு, ஆங்கு, 185

அவல என்னாள், அவலித்து இழிதலின்,
மிசைய என்னாள், மிசை வைத்து ஏறலின்;
கடல் வயிறு கிழித்து, மலை நெஞ்சு பிளந்து, ஆங்கு,
அவுணரைக் கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி- 190

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ், 'ஓர்
தீத் தொழில் ஆட்டியேன் யான்' என்று ஏங்கி
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
'தொழு நாள் இது' எனத் தோன்ற வாழ்த்தி,
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி, 195

வாடா மா மலர் மாரி பெய்து, ஆங்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த,
கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ-
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான்-என். 200

வெண்பா

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்-தெய்வம் ஆய்,
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

கட்டுரை

முடி கெழு வேந்தர் மூவருள்ளும்
படை விளங்கு தடக் கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும், 5

ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
வையைப் பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும்,
ஆரபடி, சாத்துவதி என்று இரு விருத்தியும், 10

நேரத் தோன்றும் வரியும் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
வட ஆரியர் படை கடந்து,
தென் தமிழ் நாடு ஒருங்கு காணப் 15

புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
அரைசுக் கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ் செழியனோடு ஒரு பரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று. 20

வஞ்சிக் காண்டம்
24. குன்றக் குரவை
(கொச்சகக் கலி)

'குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின், வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்; யாவிரோ?' என-முனியாதே,
'மண மதுரையோடு அரசு கேடுற வல் வினை வந்து உருத்தகாலை, 5

கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான்' என்றாள்.
என்றலும், இறைஞ்சி, அஞ்சி, இணை வளைக் கை எதிர் கூப்பி,
நின்ற எல்லையுள், வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப, கொழுநனொடு கொண்டு போயினார்;
இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந் தெய்வம் இல்லை; ஆதலின், 10

சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர்
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே! 15

தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்;
கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்;
குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்;
பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்;
பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்- 20

ஒரு முலை இழந்த நங்கைக்கு,
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே. 1

கொளுச் சொல்

ஆங்கு ஒன்று காணாய், அணி இழாய்! ஈங்கு இது காண்:
அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல்,
சிந்துரச் சுண்ணம் செறியத் தூய், தேம் கமழ்ந்து,
இந்திரவில்லின் எழில் கொண்டு,இழும் என்று
வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே.
ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி!
'அஞ்சல் ஓம்பு' என்று, நலன் உண்டு நல்காதான்
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே. 2

எற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக்
கல் தீண்டி வந்த புதுப் புனல்;
கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார்
உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 3

என் ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
பொன் ஆடி வந்த புதுப் புனல்;
பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
முன் ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 4

யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
போது ஆடி வந்த புதுப் புனல்;
போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 5

பாட்டு மடை

உரை இனி, மாதராய்! உண் கண் சிவப்ப,
புரை தீர் புனல் குடைந்து ஆடின், நோம் ஆயின்,
உரவுநீர் மா கொன்ற வேல்-ஏந்தி ஏத்திக்
குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா தோழி! 6

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே. 7

அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும்,
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே-
பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம்
மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே. 8

சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே-
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே. 9

பாட்டு மடை

'இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே,
வெறியாடல் தான் விரும்பி, 'வேலன், வருக' என்றாள்! 10

ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வரும் ஆயின் வேலன் மடவன்; அவனின்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன். 11

செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே-
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்;
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் ஆயின். 12

நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன்
மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்!
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன்,
கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின். 13

பாட்டு மடை

வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து,
நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும்
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால்,
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே! 14

கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்-
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. 15

மலைமகள் மகனை! நின் மதி நுதல் மடவரல்
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார்,
நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம்-
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே. 16

குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்,
அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்-
துறைமிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே. 17

பாட்டு மடை

என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி,
மன்றல் அம் கண்ணி மலைநாடன் போவான் முன்
சென்றேன்; அவன்-தன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்; வாழி, தோழி! 18

'கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி,
மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்:
அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை;
குறமகள் இல்லை; செறி தோள் இல்லை;
கடம் பூண் தெய்வமாக நேரார்
மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே.' 19

பாட்டு மடை

என்று, ஈங்கு,
அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு,
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்;
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி,
பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம். 20

பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்;
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால்,
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே. 21

பாடு உற்று,
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே;
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே. 22

வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த,
கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே. 23

மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட,
பெறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பெற்றி!
பெற்றி உடையதே, பெற்றி உடையதே,
பொற்றொடி மாதர் கணவன் மணம் காணப்
பெற்றி உடையது, இவ் ஊர். 24

வாழ்த்து

என்று, யாம்
கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக்
கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது
உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்-
வில் எழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே! 25

25. காட்சிக் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி, 5

'துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்' என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,
வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு 10

விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும், இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த 15

பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று;
கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட, 20

நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப-
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும், 25

தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்,
பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்,
கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும், 30

பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்,
இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப-
அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல;
யானை வெண் கோடும், அகிலின் குப்பையும்,
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும் 40

ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும்,
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி கொடியும், 45

கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும்,
பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும், 50

வரை ஆடு வருடையும், மட மான் மறியும்,
காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும்,
கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்;
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-ஆங்கு 55

ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்; 60

எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்!' என-
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த 65

தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்
'ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்,
திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்;
தீவினைச் சிலம்பு காரணமாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்; 70

வலம் படு தானை மன்னன் முன்னர்,
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்;
செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி,
'அம் சில் ஓதி! அறிக' எனப் பெயர்ந்து, 75

முதிரா முலைமுகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்;
'அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன், 80

மயங்கினன் கொல்' என மலர் அடி வருடி,
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள்,
'மன்னவன் செல்வுழிச் செல்க யான் என
தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல், 85

பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
'கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று' எனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல்,
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்,
நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை' என்று, 90

ஒழிவு இன்றி உரைத்து, 'ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்' என-
தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
'எம்மோரன்ன வேந்தர்க்கு' உற்ற 95

செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
'உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு' என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்; 100

பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புர உண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல்' என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த 105

நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-'ஆங்கு,
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்,
செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்?' என,
மன்னவன் உரைப்ப-மா பெருந்தேவி, 110

'காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்' என-
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி, 115

நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
'ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்,
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக்
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும், 120

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து' என-
'பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று; 125

புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின், 130

வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை 135

நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு' என, 140

'குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், 145

வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்' என-
'பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு!' என, 150

வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
'நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன; 155

கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் வேல் கட்டியர்,
வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது;
கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம், 160

எம் கோமகளை ஆட்டிய அந் நாள்,
ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய 165

இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் 170

தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என-
'நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே 175

தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை' என்றே அழும்பில் வேள் உரைப்ப-
நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்- 180

'வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழி உலகம் காக்க' என,
'வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் 185

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்; 190

தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்!' என வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி,
அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என்.

26. கால்கோள் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அறை பறை எழுந்தபின், அரிமான் எந்திய
உறை முதல் கட்டில் இறைமகன் ஏற;
ஆசான், பெருங்கணி,அரும் திறல் அமைச்சர்,
தானைத் தலைவர்-தம்மொடு குழீஇ,
'மன்னர்- மன்னன் வாழ்க!' என்று ஏத்தி, 5

முன்னிய திசையின் முறை மொழி கேட்ப-
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்
'இமயத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி 10

நம்பால் ஒழிகுவது ஆயின், ஆங்கு அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்:
வட திசை மருங்கின் மன்னர்- தம் முடித் தலைக்
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது,
வறிது மீளும், என் வாய் வாள், ஆகில்; 15

செறி கழல் புனைந்த செரு வெங் கோலத்துப்
பகை அரசு நடுக்காது, பயம் கெழு வைப்பின்
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக' என-
'ஆர் புனை தெரியலும், அலர் தார் வேம்பும்,
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால், 20

அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல்! நின்
வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ?
இமயவரம்ப! நின் இகழ்ந்தோர் அல்லர்;
அமைக நின் சினம்', என, ஆசான் கூற-
ஆறு- இரு மதியினும் காருக அடிப் பயின்று, 25

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து,
'வெந் திறல் வேந்தே, வாழ்க, நின் கொற்றம்!
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின்
திரு மலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்கு இது; முன்னிய திசைமேல் 30

எழுச்சிப்பாலை ஆக' என்று ஏத்த-
மீளா வென்றி வேந்தன் கேட்டு,
'வாளும் குடையும் வட திசைப் பெயர்க்க' என-
உரவு மண் சுமந்த அரவுத் தலை பனிப்ப,
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப; 35

இரவு இடங்கெடுத்த நிரை மணி விளக்கின்
விரவுக் கொடி அடுக்கத்து நிரயத் தானையொடு
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும், 40

தரும வினைஞரும், தந்திர வினைஞரும்;
'மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க!' என,
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும், மாலை வெண்குடையும்,
புறநிலைக் கோட்டப் புரிசையில் புகுத்தி; 45

புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விளங்கு அவையம் முறையிற் புகுதர-
அரும் படைத் தானை அமர் வேட்டுக் கலித்த
பெரும் படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி 50

வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து,
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும்
காலை- முரசம் கடைமுகத்து எழுதலும்,
நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி,
உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி 55

மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து,
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி, வலம் கொண்டு,
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த,
கடக் களி யானைப் பிடர்த்தலை ஏறினன்- 60

'குடக்கோ குட்டுவன் கொற்றம் கொள்க' என,
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின், 65

ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி-
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும்
கூடையின் பொலிந்து, 'கொற்ற வேந்தே!
வாகை, தும்பை, மணித் தோட்டுப் போந்தையோடு 70

ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க,
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து,
கண் களிகொள்ளும் காட்சியை ஆக' என-
'மாகதப் புலவரும், வைதாளி கரும்,
சூதரும், நல் வலம் தோன்ற, வாழ்த்த; 75

யானை வீரரும், இவுளித் தலைவரும்,
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த-
தானவர்- தம்மேல் தம் பதி நீங்கும்
வானவன் போல, வஞ்சி நீங்கி;
தண்டலைத் தலைவரும் தலைத் தார்ச் சேனையும் 80

வெண் தலைப் புணரியின் விளிம்பு சூழ் போத,
மலை முதுகு நெளிய, நிலை நாடு அதர்பட,
உலக மன்னவன் ஒருங்குடன் சென்று- ஆங்கு;
ஆலும் புரவி, அணித் தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு; 85

ஆடு இயல் யானையும், தேரும், மாவும்,
பீடு கெழு மறவரும் பிறழாக் காப்பின்
பாடி இருக்கை, பகல் வெய்யோன் தன்
இரு நிலமடந்தைக்குத் திருவடி அளித்து- ஆங்கு,
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த, 90

பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்-
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப,
விசும்பு இயங்கு முனிவர், 'வியல் நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குதும்' என்றே,
அந்தரத்து இழிந்து- ஆங்கு, அரசு விளங்கு அவையத்து, 95

மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற;
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-
செஞ் சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்;
மலயத்து ஏகுதும்; வான் பேர் இமய 100

நிலயத்து ஏகுதல் நின் கருத்துஆகலின்,
அரு மறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்;
பெரு நில மன்ன! காத்தல் நின் கடன்' என்று,
ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-
'வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க!' என, 105

கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும்
தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்;
இருள் படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி
மருள் படப் பரப்பிய ஒலியல் மாலையர்;
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை, 110

கருங் கயல் நெடுங் கண் காரிகையாரோடு;
'இருங் குயில் ஆல, இன வண்டு யாழ்செய,
அரும்பு அவிழ் வேனில் வந்தது; வாரார்
காதலர்' என்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்ற- 115

'கோல் வளை மாதே! கோலம் கொள்ளாய்;
காலம் காணாய்; கடிது இடித்து உரறிக்
காரோ வந்தது! காதலர் ஏறிய
தேரோ வந்தது, செய்வினை முடித்து! என,
காஅர்க் குரவையொடு கருங் கயல் நெடுங் கண் 120

கோல் தொடி மாதரொடு குடகர் தோன்ற-
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து,
'வாள்வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி!'என்று ஓவர் தோன்ற-
கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின் 125

ஏத்தினர் அறியா இருங் கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி-
நாடக மகளிர் ஈர்- ஐம்பத்திருவரும்,
கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்,
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை 130

நண்ணிய நூற்றுவர் நகை- வேழம்பரும்,
கொடுஞ்சி நெடுந் தேர் ஐம்பதிற்று இரட்டியும்,
கடுங் களி யானை ஓர் ஐஞ்ஞூறும்,
ஐ- ஈராயிரம் கொய் உளைப் புரவியும்
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் 135

கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்- ஐஞ்ஞூற்றுவரும்,
சேய் உயர் வில் கொடிச் செங்கோல் வேந்தே!
வாயிலோர்' என வாயில் வந்து இசைப்ப- 140

'நாடக மகளிரும், நலத்தகு மாக்களும்,
கூடு இசைக் குயிலுவக் கருவியாளரும்,
சஞ்சயன்- தன்னொடு வருக ஈங்கு' என-
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து,
சஞ்சயன் புகுந்து, தாழ்ந்து பல ஏத்தி, 145

ஆணையில் புகுந்த ஈர்- ஐம்பத்திருவரொடு
மாண் வினையாளரை வகை பெறக் காட்டி-
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே!
'வட திசை மருங்கின் வானவன் பெயர்வது 150

கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின்,
ஓங்கிய இமயத்துக் கல் கால்கொண்டு
வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்து- ஆங்கு,
யாம் தரும் ஆற்றலம்' என்றனர்' என்று,
'வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க!' என- 155

அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும்
கடல் அம் தானைக் காவலன் உரைக்கும்:
'பாலகுமரன் மக்கள், மற்று அவர்
காவா நாவின் கனகனும் விசயனும்,
விருந்தின் மன்னர்- தம்மொடும் கூடி, 160

அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்- ஆங்கு என,
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர்- கன்னர்க்குச் சாற்றி, ஆங்கு,
கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெரு நிரை செய்க- தாம்' என, 165

சஞ்சயன் போனபின்- கஞ்சுக மாக்கள்,
எஞ்சா நாவினர், ஈர்- ஐஞ்ஞூற்றுவர்;
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும்
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து;
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் 170

மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து- ஆங்கு,
ஆங்கு, அவர் ஏகிய பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன், ஓங்கிய
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த,
பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து; 175

கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வட மருங்கு எய்தி;
ஆங்கு அவர் எதிர்கொள, அந் நாடு கழிந்து- ஆங்கு,
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ,
பகைப் புலம் புக்கு, பாசறை இருந்த 180

தகைப்பு- அரும் தானை மறவோன்- தன் முன்-
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்,
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம்,
'தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்' என, 185

கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர-
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா
கரிமாப் பெரு நிரை கண்டு, உளம் சிறந்து
பாய்ந்த பண்பின், பல் வேல் மன்னர் 190

காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப;
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடிப் பந்தர்,
வடித் தோல் கொடும் பறை, வால் வளை, நெடு வயிர்,
இடிக் குரல் முரசம், இழும் என் பாண்டில்,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து 195

மயிர்க் கண் முரசமொடு, மாதிரம் அதிர;
சிலைத் தோள் ஆடவர், செரு வேல் தடக் கையர்,
கறைத் தோல் மறவர், கடுந் தேர் ஊருநர்,
வெண் கோட்டு யானையர், விரை பரிக் குதிரையர்,
மண் கண் கெடுத்த இம் மா நிலப் பெரும் துகள், 200

களம் கொள் யானைக் கவிழ் மணி நாவும்
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும்
நடுங்கு தொழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்செறிய;
தாரும் தாரும் தாம் இடை மயங்க;
தோளும் தலையும் துணிந்து வேறாகிய 205

சிலைத் தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து,
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம்
பறைக் கண் பேய்மகள் பாணிக்கு ஆட;
பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்
கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட; 210

அடும் தேர்த் தானை ஆரிய அரசர்
கடும் படை மாக்களைக் கொன்று, களம் குவித்து;
நெடுந் தேர்க் கொடுஞ்சியும், கடுங் களிற்று எருத்தமும்,
விடும் பரிக் குதிரையின் வெரிநும், பாழ்பட;
'எருமைக் கடும் பரி ஊர்வோன் உயிர்த் தொகை, 215

ஒரு பகல் எல்லையின், உண்ணும்' என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய,
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன்,
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலைய- 220

வாய் வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்,
ஐம்பத்திருவர் கடும் தேராளரொடு,
செங்குட்டுவன் - தன் சின வலைப் படுதலும்-
சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர், 225

பீடிகைப் பீலிப் பெரு நோன் பாளர்,
பாடு பாணியர், பல் இயத் தோளினர்,
ஆடு கூத்தர், ஆகி; எங்கணும்,
ஏந்து வாள் ஒழிய, தாம் துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர- 230

கச்சை யானைக் காவலர் நடுங்க,
கோட்டுமாப் பூட்டி, வாள் கோல் ஆக,
ஆள் அழி வாங்கி, அதரி திரித்த
வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி;
தொடி உடை நெடுங் கை தூங்கத் தூக்கி, 235

முடி உடைக் கருந் தலை முந்துற ஏந்தி;
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ்
இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன்
தேர் ஊர் செருவும், பாடி; பேர் இசை
முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி; 240

பின் தேர்க் குரவைப் பேய் ஆடு பறந்தலை-
முடித் தலை அடுப்பில், பிடர்த் தலைத் தாழி,
தொடித் தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு
மறப் பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட,
சிறப்பு ஊண் கடி இனம், 'செங்கோல் கொற்றத்து 245

அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க!' என-
மறக்களம் முடித்த வாய் வாள் குட்டுவன்,
'வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவுத் தீ அவியாத் தண் பெரு வாழ்க்கை,
காற்றூ தாளரை, போற்றிக் காமின்' என, 250

வில்லவன் கோதையொடு வென்று வினை முடித்த
பல் வேல் தானைப் படை பல ஏவி,
பொன் கோட்டு இமயத்து, பொரு அறு பத்தினிக்
கல் கால் கொண்டனன், காவலன் ஆங்கு- என். 255

27. நீர்ப்படைக் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் 5

அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள; 10

வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து
பால் படு மரபில் பத்தினிக் கடவுளை 15

நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து-
மன் பெரும் கோயிலும், மணி மண்டபங்களும்,
பொன் புனை அரங்கமும், புனை பூம் பந்தரும்,
உரிமைப் பள்ளியும், விரி பூஞ் சோலையும்,
திரு மலர்ப் பொய்கையும், வரி காண் அரங்கமும், 20

பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்,
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளு நீர்க் கங்கைத் தென் கரை ஆங்கண்,
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு-
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து, 25

வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர்;
உலையா வெஞ் சமம் ஊர்ந்து அமர் உழக்கி,
தலையும் தோளும் விலை பெறக் கிடந்தோர்;
நாள் விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்து,
வாள் வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்; 30

குழிக் கண் பேய்மகள் குரவையின் தொடுத்து,
வழி மருங்கு ஏத்த, வாளொடு மடிந்தோர்;
கிளைகள்- தம்மொடு, கிளர் பூண் ஆகத்து
வளையோர் மடிய, மடிந்தோர்; மைந்தர்-
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய, 35

தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்;
திண் தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ,
புண் தோய் குருதியிற் பொலிந்த மைந்தர்;
மாற்று- அரும் சிறப்பின் மணி முடிக் கருந் தலை,
கூற்றுக் கண்ணோட, அரிந்து களம் கொண்டோ ர்; 40

நிறம் சிதை கவயமொடு நிறப் புண் கூர்ந்து,
புறம்பெற, வந்த போர் வாள் மறவர்-
'வருக தாம்' என, வாகைப் பொலந் தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து, 45

பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன்,
ஆடு கொள் மார்போடு, அரசு விளங்கு இருக்கையின்;
மாடல மறையோன் வந்து தோன்றி,
'வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல் - பாணி கனக- விசயர்- தம் 50

முடித் தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே, வாழ்க!' என-
'பகைப் புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா
நகைத் திறம் கூறினை, நான்மறையாள!
யாது, நீ கூறிய உரைப் பொருள் ஈங்கு?' என- 55

மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்:
'கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள்
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு,
ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ,
கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன் 60

மாட மூதூர் மதுரை புக்கு, ஆங்கு,
இலைத் தார் வேந்தன் எழில் வான் எய்த,
கொலைக் களப் பட்ட கோவலன் மனைவி,
குடவர் கோவே! நின் நாடு புகுந்து
வட திசை மன்னர் மணி முடி ஏறினள். 65

இன்னும் கேட்டருள், இகல் வேல் தடக் கை
மன்னர் கோவே! யான் வரும் காரணம்
மா முனி பொதியின் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன்,
ஊழ்வினைப் பயன் கொல்? உரைசால் சிறப்பின் 70

வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்
'வலம் படு தானை மன்னவன்- தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை' என்றலும்,
தாது எரு மன்றத்து, மாதரி எழுந்து,
'கோவலன் தீது இலன்; கோமகன் பிழைத்தான்; 75

அடைக்கலம் இழந்தேன்; இடைக் குல மாக்காள்!
குடையும் கோலும் பிழைத்தவோ?' என,
இடை இருள் யாமத்து, எரிஅகம் புக்கதும்;
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் 80

போகு உயிர் தாங்க, பொறைசால் ஆட்டி,
'என்னோடு இவர் வினை உருத்ததோ?' என,
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்;
பொன் தேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு
உற்றதும்-எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு 85

என் பதிப் பெயர்ந்தேன் என் துயர் போற்றிச்,
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க;
மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும்,
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு;
கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி, 90

மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று,
துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்; 95

துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்;
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்; 100

தானம் புரிந்தோன் தன் மனைக் கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;
மற்று அது கேட்டு, மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு. 'நல் திறம் படர்கேன்;
மணிமேகலையை வான் துயர் உறுக்கும் 105

கணிகையர் கோலம் காணாதொழிக' என,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித் தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
என் வாய்க் கேட்டோ ர் இறந்தோர் உண்மையின்,
நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்; 110

மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு!' என-
'தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை,
'மன்னவன் இறந்த பின், வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை' என- 115

'நீடு வாழியரோ, நீள் நில வேந்து!' என,
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் 'நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்; 120

வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!
பழையன காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு
வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து, 125

போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி, 130

உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட 135

ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என- 140

மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை,
செந் தீப் பரந்த திசை முகம் விளங்க, 145

அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற;
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க;
இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன்,
'எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் வேந்தே வாழ்க!' என்று ஏத்த- 150

நெடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும்பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் 155

சித்திர விதானத்துச், செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,
வாயிலாளரின் மாடலன் கூஉய்,
'இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு 160

செங்கோல் தன்மை தீது இன்றோ?' என-
'எம் கோ வேந்தே, வாழ்க!' என்று ஏத்தி,
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
'வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப,
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்; 165

குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க,
அரிந்து உடம்பு இட்டோ ன் அறம் தரு கோலும்;
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை, செல்லற் காலையும், 170

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு' என்று
அரு மறை முதல்வன் சொல்லக் கேட்டே-
'பெருமகன் மறையோன் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை 175

மாடல மறையோன் கொள்க' என்று அளித்து- ஆங்கு,
ஆரிய மன்னர் ஐ- இருபதின்மரை,
சீர் கெழு நல் நாட்டுச் செல்க' என்று ஏவி-
'தாபத வேடத்து உயிர் உய்ந்துப் பிழைத்த
மா பெரும் தானை மன்ன-குமரர்; 180

சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல்,
அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங் கண்,
விரி வெண் தோட்டு, வெண் நகை, துவர் வாய்,
சூடக வரி வளை, ஆடு அமைப் பணைத் தோள்,
வளர் இள வன முலை, தளர் இயல் மின் இடை, 185

பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு;
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞூற்றுவர்,
அரி இல் போந்தை அருந்தமிழ் ஆற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை 190

இரு பெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி-
திருந்து துயில் கொள்ளா அளவை, யாங்கணும்,
பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயில் இளந் தாமரை, பல் வண்டு யாழ்செய,
வெயில் இளஞ் செல்வன் விரி கதிர் பரப்பி, 195

குண திசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்ற;
குட திசை ஆளும் கொற்ற வேந்தன்
வட திசைத் தும்பை வாகையொடு முடித்து,
தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-
நிதி துஞ்சு வியன் நகர், நீடு நிலை நிவந்து 200

கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை,
முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்து, செய் பூங் கைவினை,
இலங்கு ஒளி மணி நிரை இடைஇடை வகுத்த
விலங்கு ஒளி வயிரமொடு பொலந் தகடு போகிய, 205

மடை அமை செறிவின், வான் பொன் கட்டில்,
புடை திரள் தமனியப் பொன் கால் அமளிமிசை,
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த
துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு,
எறிந்து களம் கொண்ட இயல் தேர்க் கொற்றம் 210

அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்,
'தோள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக' என,
பாட்டொடு தொடுத்து, பல் யாண்டு, வாழ்த்தச்
சிறு குறுங் கூனும் குறளும் சென்று,
'பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; 215

நறு மலர்க் கூந்தல் நாள் அணி பெறுக' என-
அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉக் காவல் கைவிட,
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த, 220

'வாகை, தும்பை, வட திசைச் சூடிய
வேக யானையின் வழியோ, நீங்கு' என,
திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-
'வட திசை மன்னர் மன் எயில் முருக்கிக் 225

கவடி வித்திய கழுதை ஏர் உழவன்,
குடவர் கோமான், வந்தான்; நாளை,
படு நுகம் பூணாய், பகடே! மன்னர்
அடித் தளை நீக்கும் வெள்ளணி ஆம்' எனும்
தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும் 230

தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட,
வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,
வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் 235

முருகு விரி தாமரை முழு மலர் தோய,
குருகு அலர் தாழைக் கோட்டு மிசை இருந்து,
'வில்லவன் வந்தான்; வியன் பேர் இமயத்துப்
பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர்' என,
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ, 240

கோவலர் ஊதும் குழலின் பாணியும்
வெண் திரை பொருத வேலை வாலுகத்துக்
குண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை,
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து 245

வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி,
'வானவன் வந்தான், வளர் இள வன முலை
தோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும், மடவீர்! யாம்' எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் 250

ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,
மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள, 255

வஞ்சியுள் புகுந்தனன், செங்குட்டுவன் என்.

28. நடுகற் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தண் மதி அன்ன தமனிய நெடுங் குடை
மண்ணகம் நிழல் செய, மற வாள் ஏந்திய,
நிலம் தரு திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-
ஒண் தொடித் தடக் கையின் ஒண் மலர்ப் பலி தூஉய், 5

வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர்,
'உலக மன்னவன் வாழ்க!' என்று ஏத்தி,
பலர் தொழ, வந்த மலர் அவிழ் மாலை-
போந்தைக் கண்ணிப் பொலம் பூந் தெரியல்
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் 10

யானை வெண் கோடு அழுத்திய மார்பும்,
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்,
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்,
வை வாள் கிழித்த மணிப் பூண் மார்பமும்,
மைம்மலர் உண் கண் மடந்தையர் அடங்காக் 15

கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ;
'அகில் உண விரித்த, அம் மென் கூந்தல்
முகில் நுழை மதியத்து, முரி கருஞ் சிலைக் கீழ்,
மகரக் கொடியோன் மலர்க் கணை துரந்து,
சிதர் அரி பரந்த செழுங் கடைத் தூது 20

மருந்தும் ஆயது, இம்மாலை' என்று ஏத்த,
இருங் கனித் துவர் வாய் இள நிலா விரிப்ப,
கருங் கயல் பிறழும் காமர் செவ்வியின்
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்,
மாந்தளிர் மேனி மடவோர்-தம்மால் 25

ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து;
காசறைத் திலகக் கருங் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்டொடு சுருண்ட
குழலும், கோதையும், கோலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி; 30

வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ,
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர்,
குரல் குரலாக வரு முறைப் பாலையின்,
துத்தம் குரலாத் தொல் முறை இயற்கையின்,
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின், 35

மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து;
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன்
குடி புறந்தருங்கால் திரு முகம் போல,
உலகு தொழ, தோன்றிய மலர் கதிர் மதியம்
பலர் புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க 40

மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐங் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த
வெண் நிலா-முன்றிலும், வீழ் பூஞ் சேக்கையும்,
மண்ணீட்டு அரங்கமும், மலர்ப் பூம் பந்தரும்
வெண் கால் அமளியும், விதான வேதிகைகளும், 45

தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள-
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின்,
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிகைப் புனை மணி அரங்கின், 50

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம்,
பல்லாண்டு ஏத்த, பரந்தன, ஒருசார்,
மண் கணை முழவும், வணர் கோட்டு யாழும், 55

பண் கனி பாடலும், பரந்தன, ஒருசார்;
மான்மதச் சாந்தும், வரி வெண் சாந்தும்,
கூனும் குறளும், கொண்டன, ஒருசார்;
வண்ணமும் சுண்ணமும், மலர்ப் பூம் பிணையலும்,
பெண் அணிப் பேடியர் ஏந்தினர், ஒருசார்; 60

பூவும், புகையும், மேவிய விரையும்,
தூவி அம் சேக்கை சூழ்ந்தன, ஒருசார்;
ஆடியும், ஆடையும், அணிதரு கலன்களும்,
சேடியர் செல்வியின் ஏந்தினர், ஒருசார்-
ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் 65

வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்; 70

பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75

பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன்
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் -
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி,
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்தபின்,
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-
'தும்பை வெம்போர்ச் சூழ் கழல் வேந்தே!
செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு, ஆங்கு, 85

வச்சிரம், அவந்தி, மகதமொடு, குழீஇய
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று, தகை அடி வணங்க,
'நீள் அமர் அழுவத்து, நெடும் பேர் ஆண்மையொடு 90

வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று' என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை'- 95

ஆங்கு நின்று அகன்றபின், அறக்கோல் வேந்தே!
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண,
'ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல், ஆங்கு, 100

கயந் தலை யானையின் கவிகையிற் காட்டி,
இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து,
உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி,
அமர்க்களம் அரசனது ஆக, துறந்து,
தவப் பெரும் கோலம் கொண்டோ ர்-தம்மேல் 105

கொதி அழல் சீற்றம் கொண்டோ ன் கொற்றம்
புதுவது' என்றனன் போர் வேல் செழியன்' என்று,
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்-மொழி எல்லாம் நீலன் கூற-
தாமரைச் செங் கண் தழல் நிறம் கொள்ளக் 110

கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து, 'மன்னவர் மன்னே,
வாழ்க! நின் கொற்றம் வாழ்க! என்று ஏத்திக்
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்,
சிறு குரல் நெய்தல், வியலூர் எறிந்தபின்; 115

ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று;
நெடுந் தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து,
கொடும் போர் கடந்து; நெடுங் கடல் ஓட்டி;
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை, 120

கடும் புனல் கங்கைப் பேர் யாற்று, வென்றோய்!
நெடுந் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே!
புரையோர் தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண் ஆள் வேந்தே! நின் வாழ் நாட்கள் 125

தண் ஆன் பொருநை மணலினும் சிறக்க!
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய், வாழி!
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும்-
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி சென்றதன் பின்னும், 130

அறக்கள வேள்வி செய்யாது, யாங்கணும்,
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை;
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணி, நின் ஊங்கணோர் மருங்கின்,
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும், 135

விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
'போற்றி மன் உயிர் முறையின் கொள்க' என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும், 140

வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி, 145

இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோ ன் ஆயினும்,
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்,
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்- 150

மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின்
செல்வம் நில்லாது என்பதை வெல் போர்த்
தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ, காவல் வேந்தே?-
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு 155

உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா,
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை-
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்; 160

மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர்,
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர்
கலங்கு அஞர் நரகரைக் காணினும் காணும்;
ஆடும் கூத்தர்போல், ஆர் உயிர் ஒருவழி, 165

கூடிய கோலத்து ஒருங்கு நின்று, இயலாது;
'செய் வினை வழித்தாய் உயிர் செலும்' என்பது
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின்,
எழு முடி மார்ப! நீ ஏந்திய திகிரி
வழிவழிச் சிறக்க, வய வாள் வேந்தே! 170

அரும் பொருள் பரிசிலேன் அல்லேன், யானும்;
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர்
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி,
புலவரை இறந்தோய்! போகுதல் பொறேஎன்;
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும், 175

நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய,
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்,
'நாளைச் செய்குவம் அறம்' எனின், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்; 180

இது என வரைந்து வாழு நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை;
வேள்விக் கிழத்தி இவளொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற,
ஊழியோடு ஊழி உலகம் காத்து, 185

நீடு வாழியரோ, நெடுந்தகை!' என்று
மறையோன் மறை நா உழுது, வான் பொருள்
இறையோன் செவி செறு ஆக வித்தலின்-
வித்திய பெரும் பதம் விளைந்து, பதம் மிகுந்து,
துய்த்தல் வேட்கையின், சூழ் கழல் வேந்தன் 190

நான்மறை மரபின் நயம் தெரி நாவின்,
கேள்வி முடித்த, வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி, 195

பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்து,
தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி,
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்,
தம் பெரு நெடு நகர்ச் சார்வதும் சொல்லி, 'அம் 200

மன்னவர்க்கு ஏற்பன செய்க, நீ என,
வில்லவன்-கோதையை விருப்புடன் ஏவி-
சிறையோர் கோட்டம் சீமின்; யாங்கணும்,
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்' என,
அழும்பில் வேளோடு ஆயக்கணக்கரை 205

முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-
'அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது,
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது' என,
பண்டையோர் உரைத்த தண் தமிழ் நல் உரை,
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின், 210

ஆர் புனை சென்னி அரசர்க்கு அளித்து;
'செங்கோல் வளைய உயிர் வாழாமை,
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து;
'வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை, யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர்' என்பதை 215

வடதிசை மருங்கின் மன்னவர் அறிய,
குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து;
மதுரை மூதூர் மா நகர் கேடுற,
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து;
நல் நாடு அணைந்து, நளிர் சினை வேங்கைப் 220

பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-
'அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர்-தம்மொடும் சென்று;
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து, 225

இமையவர் உறையும் இமையச் செல் வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி,
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து,
வித்தகர் இயற்றிய, விளங்கிய கோலத்து,
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி, 230

பூப் பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள் மங்கலம் செய்க' என ஏவினன்-
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என்.

29. வாழ்த்துக் காதை
உரைப் பாட்டு மடை

குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்று மொழி நகையினராய்,
'தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர் ஈங்கு இல்லை போலும்' என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல்,
'இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்' என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி, அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி, பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து, நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி; வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால் பலர் தொழு படிமம் காட்டி,
தட முலைப் பூசல் ஆட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்னாள்-
கண்ணகி-தன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி-
அலம்வந்த மதி முகத்தில் சில செங் கயல் நீர் உமிழ,
பொடி ஆடிய கரு முகில் தன் புறம் புதைப்ப, அறம் பழித்து;
கோவலன், தன் வினை உருத்து, குறுமகனால் கொலையுண்ண;
காவலன்-தன் இடம் சென்ற கண்ணகி-தன் கண்ணீர் கண்டு,
மண்ணரசர் பெரும் தோன்றல் உள் நீர் அற்று, உயிர் இழந்தமை
மா மறையோன் வாய்க் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும்,
மனைக்கிழத்தி உயிர் இழப்பவும், எனைப் பெரும் துன்பம் எய்தி,
காவற்பெண்டும், அடித் தோழியும்,
கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடி
'சேயிழையைக் காண்டும்' என்று, மதுரை மா நகர் புகுந்து;
முதிரா முலைப் பூசல் கேட்டு, ஆங்கு, அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த
இடைக்குல மகள் இடம் எய்தி; ஐயை அவள் மகளோடும்
வையை ஒருவழிக்கொண்டு; மா மலை மீமிசை ஏறி,
கோமகள்-தன் கோயில் புக்கு; நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த
செங்குட்டுவற்குத் திறம் உரைப்பர் மன். 1

முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து,
கடு வரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த
தொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர்,
சோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர். 2

மடம் படு சாயலாள் மாதவி-தன்னைக்
கடம்படாள், காதல் கணவன் கைப் பற்றி,
குடம் புகாக் கூவல் கொடுங் கானம் போந்த
தடம் பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்,
தண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர். 3

தற்பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை;
கற்புக் கடம் பூண்டு, காதலன் பின் போந்த
பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்;
பூம் புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர். 4

செய் தவம் இல்லாதேன் தீக் கனாக் கேட்ட நாள்,
எய்த உணராது இருந்தேன், மற்று என் செய்தேன்?
மொய் குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்,
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ, தோழீ?
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ, தோழீ? 5

கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
'சாவது-தான் வாழ்வு' என்று, தானம் பல செய்து,
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ, அன்னை? 6

காதலன் தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,
ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு, ஏங்கி,
போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த
மாதவி-தன் துறவும் கேட்டாயோ, தோழீ?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ? 7

'ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல்' என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான், அம் மணம் பட்டிலா,
வை எயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழீ?
மாமி மட மகளைக் கண்டாயோ, தோழீ? 8

என்னே! இஃது என்னே! இஃது என்னே! இஃது என்னே கொல்!
பொன் அம் சிலம்பின், புனை மேகலை, வளைக் கை,
நல் வயிரப் பொன் தோட்டு, நாவல் அம் பொன் இழை சேர்,
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்! 9

தென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்;
என்னோடும், தோழிமீர்! எல்லீரும், வம், எல்லாம். 10

வஞ்சியீர், வஞ்சி இடையீர், மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர்! எல்லீரும், வம், எல்லாம்;
கொங்கையால் கூடல் பதி சிதைத்து, கோவேந்தைச்
செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம், எல்லாம்.
தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம், எல்லாம்
'செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர்' என்று
எம் கோ முறை நா இயம்ப, இந் நாடு அடைந்த
பைந் தொடிப் பாவையைப் பாடுதும்; வம், எல்லாம்;
பாண்டியன்-தன் மகளைப் பாடுதும்; வம், எல்லாம். 11

'வானவன், எம் கோ, மகள்' என்றாம்; வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள்; வானவனை
வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள். 12

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே! 13

மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே! 14

எல்லா! நாம்-
காவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும்,
பூ விரி கூந்தல்! புகார். 15

வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை. 16

புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 17

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை
கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 18

அம்மனை தம் கையில் கொண்டு, அங்கு அணி இழையார
தம் மனையில் பாடும் தகையேலோர், அம்மானை;
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலைமேல் கூடவே, அம்மானை;
கொம்மை வரி முலைமேல் கூடின், குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர், அம்மானை 19

பொன் இலங்கு பூங்கொடி! பொலம் செய் கோதை வில்லிட,
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 20

பின்னும் முன்னும், எங்கணும், பெயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;
மின்னு மின் இளங் கொடி வியல் நிலத்து இழிந்தென,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று பந்து அடித்துமே. 21

துன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீள் நிலம்-
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்லை-தான் என,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 22

வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ, ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு, ஒற்றை மேல் ஊக்க,
கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடி
குடங்கை நெடுங் கண் பிறழ, ஆடாமோ ஊசல்;
கொடு வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல். 23

ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன், பொறையன், மலையன், திறம் பாடி,
கார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;
கடம்பு எறிந்த வா பாடி, ஆடாமோ ஊசல். 24

வன் சொல் யவனர் வள நாடு, வன் பெருங்கல்,
தென் குமரி, ஆண்ட; செரு வில், கயல், புலியான்
மன்பதை காக்கும் கோமான், மன்னன், திறம் பாடி;
மின் செய் இடை நுடங்க, ஆடாமோ ஊசல்;
விறல் வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல். 25

தீங் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல். 26

பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் 27

சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல் 28

ஆங்கு, நீள் நில மன்னர், நெடு வில் பொறையன் நல்
தாள் தொழார், வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள், 'நீடூழி,
செங்குட்டுவன் வாழ்க!' என்று. 29

30. வரம் தரு காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வட திசை வணங்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க பின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
'வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? இங்கு, உரை' என- 5

'கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க' என்று ஏத்தி,
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும்
'மை ஈர் ஓதி வகை பெறு வனப்பின் 10

ஐ-வகை வகுக்கும் பருவம் கொண்டது;
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
அவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலள்;
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நகை நிரம்பா அளவின; 15

புணர் முலை விழுந்தன; புல் அகம் அகன்றது;
தளர் இடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது;
குறங்கு இணை திரண்டன; கோலம் பொறாஅ
நிறம் கிளர் சீறடி நெய் தோய் தளிரின;
தலைக்கோல் ஆசான் பின் உளனாக, 20

குலத் தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்;
யாது நின் கருத்து? என் செய்கோ?' என,
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-
'வருக, என் மட மகள் மணிமேகலை!' என்று,
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு 25

விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்-
ஆங்கு, அது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்- 30

தம்மில் துன்பம் தாம் நனி எய்த,
செம்மொழி மாதவர், 'சேயிழை நங்கை
தன் துறவு எமக்குச் சாற்றினள்' என்றே
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்
பருவம் அன்றியும் பைந் தொடி நங்கை 35

திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின்,
அரற்றினென்' என்று, ஆங்கு, அரசற்கு உரைத்தபின்-
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ;
துடித்தனள் புருவம்; துவர் இதழ்ச் செவ் வாய்
மடித்து, எயிறு அரும்பினள்; வரு மொழி மயங்கினள்; 40

திரு முகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள்; உயர் மொழி கூறித்
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்- 45

'கொய் தளிர்க் குறிஞ்சிக் கோமான்-தன் முன்
கடவுள்-மங்கலம் காணிய வந்த
மடமொழி நல்லார் மாண் இழையோருள்,
அரட்டன் செட்டி-தன் ஆய்-இழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும், 50

ஆடகமாடத்து அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்
மங்கல மடந்தை கோட்டத்து-ஆங்கண்
செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை, நிரம்பிய 55

அணி கயம் பல உள; ஆங்கு அவை இடையது,
கடிப்பகை நுண் கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனை; அதனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின், 60

ஆங்கு-அது கொணர்ந்து, ஆங்கு, ஆய்-இழை கோட்டத்து
ஓங்கு இருங் கோட்டி இருந்தோய்! உன் கை,
'குறிக்கோள் தகையது; கொள்க' எனத் தந்தேன்;
உறித் தாழ் கரகமும் உன் கையது அன்றே;
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை 65

முதிராது; அந்நீர் முத் திற மகளிரைத்
தெளித்தனை ஆட்டின், இச் சிறு குறுமகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;
பாசண்டன் யான்; பார்ப்பனி-தன்மேல்,
மாடல மறையோய்! வந்தேன்' என்றலும்- 70

மன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-
தன் முகம் நோக்கலும்-தான் நனி மகிழ்ந்து,
'கேள் இது, மன்னா! கெடுக நின் தீயது!
மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால் சுரந்து ஊட்ட, பழ வினை உருத்து, 75

கூற்று உயிர் கொள்ள, குழவிக்கு இரங்கி,
ஆற்றாத் தன்மையள், ஆர் அஞர் எய்தி,
பாசண்டன்பால் பாடுகிடந்தாட்கு,
'ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி
வந்தனன்; அன்னை! நீ வான் துயர் ஒழிக' என, 80

செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி,
பார்ப்பனி-தன்னொடு பண்டைத் தாய்பால்
காப்பியத் தொல் குடிக் கவின் பெற வளர்ந்து,
தேவந்திகையைத் தீவலம் செய்து,
நால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர், 85

மூவா இள நலம் காட்டி, 'என் கோட்டத்து,
நீ வா' என்றே நீங்கிய சாத்தன்,
மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண்,
அங்கு உறை மறையோனாகத் தோன்றி,
உறித் தாழ் கரகமும் என் கைத் தந்து, 90

குறிக்கோள் கூறிப் போயினன்; வாரான்
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்,
ஈங்கு இம் மறையோள்-தன்மேல் தோன்றி,
'அந் நீர் தெளி' என்று அறிந்தோன் கூறினன்-
மன்னர் கோவே! மடந்தையர்-தம்மேல் 95

தெளித்து ஈங்கு அறிகுவம்' என்று அவன் தெளிப்ப-
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின்,
'புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்;
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி, 100

காதலன்-தன்னொடு கடுந் துயர் உழந்தாய்;
யான் பெறு மகளே! என் துணைத் தோழீ!
வான் துயர் நீக்கும் மாதே, வாராய்!'-
'என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை-
தன்னோடு இடை இருள் தனித் துயர் உழந்து, 105

போனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;
யான் அது பொறேஎன்; என் மகன், வாராய்!-
'வரு புனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன்;
உருகெழு மூதூர் ஊர்க் குறுமாக்களின்
வந்தேன் கேட்டேன்; மனையில் காணேன்; 110

எந்தாய்! இளையாய்! எங்கு ஒளித்தாயோ?'-
என்று, ஆங்கு, அரற்றி, இனைந்துஇனைந்து ஏங்கி,
பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்,
குதலைச் செவ் வாய்க் குறுந் தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ- 115

தோடு அலர் போந்தைத் தொடு கழல் வேந்தன்
மாடல மறையோன்-தன் முகம் நோக்க,
'மன்னர் கோவே, வாழ்க!' என்று ஏத்தி,
முந்நூல் மார்பன் முன்னியது உரைப்போன்;
'மறையோன் உற்ற வான் துயர் நீங்க, 120

உறை கவுள் வேழக் கைஅகம் புக்கு,
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி-தன்மேல் காதலர் ஆதலின்,
மேல்நிலை உலகத்து அவருடன் போகும்
தாவா நல் அறம் செய்திலர்; அதனால், 125

அஞ் செஞ் சாயல் அஞ்சாது அணுகும்
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்,
பொன்-கொடி-தன்மேல் பொருந்திய காதலின்,
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் 130

உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்-
ஆயர் முதுமகள் ஆய்-இழை-தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின்,
ஆடிய குரவையின், அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள்- 135

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்,
அறப் பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவது அன்றே; தொன்று இயல் வாழ்க்கை- 140

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,
செய் தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,
கை அகத்தன போல், கண்டனை அன்றே;
ஊழிதோறு உழி உலகம் காத்து, 145

நீடு வாழியரோ, நெடுந்தகை!' என்ற
மாடல மறையோன்-தன்னொடும் மகிழ்ந்து-
பாடல்சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக்
கலி கெழு கூடல் கதழ் எரி மண்ட
முலைமுகம் திருகிய மூவா மேனி 150

பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,
'நித்தல் விழா அணி நிகழ்க' என்று ஏவி,
'பூவும், புகையும், மேவிய விரையும்,
தேவந்திகையைச் செய்க' என்று அருளி,
வலமுறை மும் முறை வந்தனன் வணங்கி, 155

உலக மன்னவன் நின்றோன் முன்னர்-
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், 160

'எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக' என்றே வணங்கினர் வேண்ட-
'தந்தேன் வரம்!' என்று எழுந்தது ஒரு குரல்-
ஆங்கு, அது கேட்ட அரசனும், அரசரும், 165

ஓங்கு இருந் தானையும், உரையோடு ஏத்த,
வீடு கண்டவர்போல், மெய்ந் நெறி விரும்பிய
மாடல மறையோன்-தன்னொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற,
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்- 170

யானும் சென்றேன்; என் எதிர் எழுந்து,
தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி,
'வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை
நுந்தை தாள் நிழல் இருந்தோய்! நின்னை
'அரைசு வீற்றிருக்கும் திருப் பொறி உண்டு' என்று, 175

உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி,
கொங்கு அவிழ் நறுந் தார்க் கொடித் தேர்த் தானைச்
செங்குட்டுவன்-தன் செல்லல் நீங்க,
பகல் செல் வாயில் படியோர்-தம்முன்,
அகலிடப் பாரம் அகல நீக்கி, 180

சிந்தை செல்லாச் சேண் நெடுந் தூரத்து,
அந்தம் இல் இன்பத்து, அரசு ஆள் வேந்து' என்று-
என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி-
தன் திறம் உரைத்த தகைசால் நல் மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!- 185

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்; 190

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகன்மின்; பொருள்-மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்; 195

அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது; 200

செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்.

கட்டுரை

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
குட திசை ஆளும் கொற்றம் குன்றா
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும், 5

விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியின் செல்வமும், கூழின் பெருக்கமும்,
வரியும், குரவையும், விரவிய கொள்கையின்,
புறத் துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய 10

மறத் துறை முடித்த வாய் வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று. 15

நூல் கட்டுரை

குமரி, வேங்கடம், குண குட கடலா,
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்,
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்,
ஐந்திணை மருங்கின், அறம், பொருள், இன்பம்,
மக்கள் தேவர் என இரு சார்க்கும் 5

ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர,
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும், எழாலும், பண்ணும், பாணியும் 10

அரங்கு, விலக்கே, ஆடல், என்று அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ, உடம்படக் கிடந்த
வரியும், குரவையும், சேதமும், என்று இவை
தெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில்,
ஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம் 15

காட்டுவார்போல், கருத்து வெளிப்படுத்து,
மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்.

No comments:

Post a Comment