Monday, August 3, 2009

Silappathigaram(Full Version) - Part I

பதிகம்
(இணைக் குறளாசிரியப்பா)

குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி
'பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு, 5

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு, எம்
கண்-புலம் காண, விண்-புலம் போயது
இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ' என-
அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன், 10

'யான் அறிகுவன் அது பட்டது' என்று உரைப்போன்,
'ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்,
பேராச் சிறப்பின் புகார் நகரத்துக்
கோவலன் என்பான் ஓர் வாணிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு 15

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடுஉற,
கண்ணகி என்பாள் மனைவி - அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு 20

மன்பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் கொல்லன்-தன் கைக் காட்ட
"கோப் பெருந் தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை; ஈங்கு இருக்க" - என்று ஏகி
பண்டு தான் கொண்ட "சில் அரிச் சிலம்பினைக் 25

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை" என
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
கன்றிய காவலர்க் கூஉய், "அக் கள்வனைக்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு" - என 30

கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள், நெடுங்கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் கேடுஉற,
முத்து ஆர மார்பின் முலைமுகம் திருகி,
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய 35

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்' என-
'வினை விளை காலம் என்றீர்; யாது அவர்
வினை விளைவு?' என்ன - 'விறலோய்! கேட்டி:
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்,
கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் 40

வெள்ளி அம்பலத்து, நள் இருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி,
'கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்!
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது; ஆகலின், 45

முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன்-தன்னை 50

ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்' எனக்
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான்' என
'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், 55

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்' என 60

'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,
அடிகள்! நீரே அருளுக' என்றாற்கு அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும், 65

அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,
கடல் ஆடு காதையும்,
மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீது உடைக் 70

கனாத் திறம் உரைத்த காதையும், வினாத் திறத்து
நாடு காண் காதையும், காடு காண் காதையும்,
வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை
ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை 75

அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின மாலையும் 80

அழல் படு காதையும், அரும் தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்று, இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காதையொடு 85

இவ் ஆறு ஐந்தும்
உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபுஎன். 90

உரை பெறு கட்டுரை

அன்று தொட்டு, பாண்டிய நாடு மழை வறம்
கூர்ந்து, வறுமை எய்தி, வெப்புநோயும் குருவும்
தொடர, கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று, களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய,
நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது. 1

அது கேட்டு, கொங்கு இளங்கோசர் தங்கள்
நாட்டகத்து, நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய,
மழை தொழில் என்றும் மாறாதாயிற்று. 2

அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக்
கயவாகு என்பான், நங்கைக்கு நாள் பலி - பீடிகைக்
கோட்டம் முத்துறுத்து-ஆங்கு, 'அரந்தை கெடுத்து,
வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகவையின்,
ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பன் முறை எடுப்ப,
மழை வீற்றிருந்து, வளம் பல பெருகிப் பிழையா
விளையுள் நாடு ஆயிற்று. 3

அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி
கோழி அகத்து, 'எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்
தினிக் கடவுள் ஆகும்' என, நங்கைக்குப் பத்தினிக்
கோட்டமும் சமைத்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே.

புகார்க் காண்டம்
1. மங்கல வாழ்த்துப் பாடல்
(சிந்தியல் வெண்பாக்கள்)

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அங்கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொற்கோட்டு 5

மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்! 10

வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.
ஆங்கு,
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய 15

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால், 20

நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது தன்னில்,
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர் ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும் தான், 25

போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.
ஆங்கு, 30

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்தான், 35

மண் தேய்த்த புகழினான்; மதிமுக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
'கண்டு ஏத்தும் செவ்வேள' என்று இசை போக்கிக் காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ.
அவரை, 40

இரு பெரும் குரவரும், ஒரு பெரு நாளால்,
மண அணி காண மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி,
யானை எருத்தத்து, அணி இழையார், மேல் இரீஇ,
மா நகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி, 45

முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன; முரை எழுந்தன பணிலம் வெண்குடை
அரசு எழுந்ததோர்படி எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து,
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் 50

சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!
விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர், 55

சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 60

'காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல்,
தீது அறுக!' என ஏத்தி, சின்மலர் கொடு தூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-'தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை 65

உப்பாலைப் பொன் கோட்டு உழையதா, எப்பாலும்
செரு மிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன்' எனவே. 68

2. மனையறம் படுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

உரைசால் சிறப்பின், அரைசு விழை திருவின்,
பரதர் மலிந்த, பயங்கெழு, மா நகர்-
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,
அரும் பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் 5

ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட
குலத்தில் குன்றாக் கொழுங் குடிச் செல்வர்,
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய 10

கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித் தன்ன மணிக் கால் அமளிமிசை,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து, இருந்துழி
கழுநீர், ஆம்பல், முழுநெறிக் குவளை,
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை, 15

வயற்பூ வாசம் அளைஇ; அயற்பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டுக்
கோதை மாதவி, சண்பகப் பொதும்பர்,
தாது தேர்ந்து உண்டு; மாதர் வாள் முகத்துப்
புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் 20

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து,
மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து,
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு, மகிழ்வு எய்தி, காதலில் சிறந்து, 25

விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி,
சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30

கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல,
வண்டு வாய் திறப்ப, நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கி, கையற்று, 35

தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை,
'குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின், 40

பெரியோன் தருக திரு நுதல் ஆக என
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க 45

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என
அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்,
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே 50

அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?
மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம், நல் நுதல்! மெல் நடைக்கு அழிந்து, 55

நல் நீர்ப் பண்ணை நனி மலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசுங் கிளியே -
குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மட நடை மாது! நின் மலர்க் கையின் நீங்காது 60

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின;
நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும்,
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சின்மலர் அன்றியும், 65

எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
நானம் நல் அகில் நறும் புகை அன்றியும்,
மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்? 70

திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?
மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! 75

பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை' என்று 80

உலவாக் கட்டுரை பல பாராட்டித்
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி,
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்
வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பு அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும், 85

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,
யாண்டு சில கழிந்தன, இற்பெருங் கிழமையின்
காண் தகு சிறப்பின் கண்ணகி தனக்கு என். 90

வெண்பா

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - மண்மேல்
நிலையாமை கண்டவர் போல், நின்று.

3. அரங்கேற்று காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தெய்வ மால் வரைத் திரு முனி அருள,
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய
மலைப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5

பிறப்பில் குன்றாப் பெரும் தோள் மடந்தை
தாது அவிழ் புரி குழல் மாதவி - தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் - ஆறு ஆண்டில் 10

சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி -
இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு, 15

ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை -
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்,
கொண்ட வகை அறிந்து, கூத்து வரு காலை -
கூடை செய்த கை வாரத்துக் களைதலும், 20

வாரம் செய்த கை கூடையில் களைதலும்,
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னொடும் - 25

யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து 30

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35

அசையா மரபின் இசையோன் - தானும் -
இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,
வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப் பிடித்து, 40

இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்து, ஆங்கு,
அசையா மரபின் அது பட வைத்து,
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,
நாத் தொலைவு இல்லா நன்னூல் புலவனும் -
ஆடல், பாடல், இசையே, தமிழே, 45

பண்ணே, பாணி, தூக்கே, முடமே,
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,
கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,
வார நிலத்தை வாங்குபு வாங்கி,
வாங்கிய வாரத்து, யாழும், குழலும், 50

ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,
கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,
சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் - 55

சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,
ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி, 60

பண் அமை முழவின் கண் எறி அறிந்து,
தண்ணுமை முதல்வன் - தன்னொடும் பொருந்தி,
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து - ஆங்கு,
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து, வருவது ஒற்றி, 65

இன்புற இயக்கி, இசைபட வைத்து,
வார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,
வழு இன்று இசைக்கும் குழலோன் - தானும் -
ஈர்-ஏழ் தொடுத்த செம் முறைக் கேள்வியின் 70

ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி,
வன்மையில் கிடந்த தார பாகமும்,
மென்மையில் கிடந்த குரலின் பாகமும்,
மெய்க் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள,
கைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்பு உடைத் 75

தளராத் தாரம் விளரிக்கு ஈத்து,
கிளைவழிப் பட்டனள்; ஆங்கே, கிளையும்
தன் கிளை அழிவு கண்டு அவள்வயிற் சேர,
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர,
மேலது உழைஇளி, கீழது கைக்கிளை 80

வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக, ஆங்கு அவை
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது,
படுமலை, செவ்வழி, பகர் அரும்பாலை என,
குரல் குரலாகத் தற்கிழமை திரிந்த பின், 85

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து - ஆங்கு,
இளி முதலாகிய எதிர்படு கிழமையும்,
கோடி, விளரி, மேற்செம்பாலை என
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்,
இணை நரம்பு உடையன அணைவுறக் கொண்டு - ஆங்கு, 90

யாழ் மேற்பாலை இட முறை மெலிய,
குழல்மேல் கோடி வல முறை மெலிய,
வலிவும், மெலிவும், சமனும், எல்லாம்
பொலியக் கோத்த புலமையோனுடன் -
எண்ணிய நூலோர் இயல்பினின் வழா அது, 95

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடு வரைப் போகிய நெடுங் கழைக்
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு,
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக, 100

எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,
ஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி,
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடை நிலம் நாற் கோல் ஆக,
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய, 105

தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த;
பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;
தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து ஆங்கு,
ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,
கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு; 110

ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;
விருந்து படக் கிடந்த அருந் தொழில் அரங்கத்து -
பேர் இசை மன்னர் பெயர் புறத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு, 115

கண் இடை நவ மணி ஒழுக்கி, மண்ணிய
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி,
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல் 120

புண்ணிய நல் நீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர், மாலை அணிந்து,
நலம் தரு நாளால், பொலம் பூண் ஓடை
அரசு உவாத் தடக் கையில் பரசினர் கொண்டு,
முரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப, 125

அரைசொடு பட்ட ஐம் பெருங்குழுவும்
தேர் வலம் செய்து, கவி கைக் கொடுப்ப,
ஊர் வலம் செய்து புகுந்து, முன்வைத்து - ஆங்கு -
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்,
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130

வலக் கால் முன் மிதித்து ஏறி, அரங்கத்து,
வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி,
இந் நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த
தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க, 135

வாரம் இரண்டும் வரிசையில் பாட,
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் -
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப் 140

பின் வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.
ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி,
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி, 145

வந்த முறையின் வழிமுறை வழாமல்,
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,
பாற்பட நின்ற பாலைப்பண் மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து, 150

மூன்று அளந்து, ஒன்று கொட்டி, அதனை
ஐந்து மண்டிலத்தால் கூடை போக்கி,
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கி,
கூறிய ஐந்தின் கொள்கை போல, 155

பின்னையும், அம்முறை பேரிய பின்றை,
பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப் பூங் கோதை, இயல்பினின் வழாமை, 160

தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி,
விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள் - 'அதுவே
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த,
வீறு உயர் பசும் பொன் பெறுவது; இம் மாலை, 165

மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு' என,
மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில்,
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த -
மா மலர் நெடுங் கண் மாதவி மாலை 170

கோவலன் வாங்கிக் கூனி - தன்னொடு
மணமனை புக்கு, மாதவி - தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி -
விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன் -
வடு நீங்கு சிறப்பின் தன் மனை, அகம் மறந்து - என். 175

வெண்பா

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்,
பண் நின்ற கூத்துப் பதினொன்றும், மண்ணின்மேல்
போக்கினாள் - பூம் புகார்ப் பொற்றொடி மாதவி, தன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து.

4. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

விரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட
ஒரு தனித் திகிரி உரவோன் காணேன்
அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்?' என,
திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள் 5

முழு நீர் வார, முழு மெயும் பனித்து,
திரை நீர் ஆடை இரு நில மடந்தை
அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லற் காலை-
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப,
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி, 10

வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்,
தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;
காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;
குழல் வளர் முல்லையில் கோவலர் - தம்மொடு 15

மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;
அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம்
சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற;
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென - 20

இளையர் ஆயினும் பகை அரசு கடியும்,
செரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்தி வானத்து, வெண் பிறை தோன்றி,
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி,
பான்மையில் திரியாது பாற் கதிர் பரப்பி, 25

மீன் - அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல் பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து,
செந் துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல்
அம் துகில் மேகலை அசைந்தன வருந்த 30

நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா - முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,
கோலம் கொண்ட மாதவி அன்றியும் -
குட திசை மருங்கின் வெள் அயிர் - தன்னொடும் 35

குண திசை மருங்கின் கார் அகில் துறந்து;
வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து,
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக;
தாமரைக் கொழு முறித்தாதுபடு செழு மலர்,
காமரு குவளை, கழுநீர் மா மலர், 40

பைந் தளிர்ப் படலை; பரூஉக் காழ் ஆரம்;
சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்
சிந்துபு பரிந்த செழும் பூஞ் சேக்கை,
மந்த - மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு,
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி, 45

காவி அம் கண்ணார் களித் துயில் எய்த -
அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய,
மென் துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள், 50

கொடுங் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்,
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிரிய,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள் நகை கோவலன் இழப்ப, 55

மை இருங் கூந்தல் நெய் அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் -
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி,
வேனிற் பள்ளி மேவாது கழிந்து, 60

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து,
மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும்
அலர் முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண் செங்கழுநீர்
வீழ் பூஞ் சேக்கை மேவாது கழியத் 65

துணை புணர் அன்னத் தூவியிற் செறித்த
இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது,
உடைப் பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக் குமிழ் எறிந்து, கடைக் குழை ஓட்டி,
கலங்கா உள்ளம் கலங்க, கடை சிவந்து 70

விலங்கி நிமிர் நெடுங் கண் புலம்பு, முத்து உறைப்ப -
அன்னம் மெல் நடை - நல் நீர்ப் பொய்கை -
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத்
தாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்;
பாண் வாய் வண்டு நோதிறம் பாடக் 75

காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப;
புள் வாய் முரசமொடு, பொறி மயிர் வாரணத்து
முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப;
உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,
இரவுத் தலைபெயரும் வைகறைகாறும் - 80

அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான்,
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி,
மகர வெல் கொடி மைந்தன், திரிதர -
நகரம் காவல் நனி சிறந்தது - என்.

வெண்பா

கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.

5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து,
ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல்,
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதை இருள் படாஅம் போக நீக்கி,
உதய மால் வரை உச்சித் தோன்றி, 5

உலகு விளங்கு அவிர் ஒளி மலர்கதிர் பரப்பி
வேயா மாடமும்; வியன் கல இருக்கையும்;
மான் கண் காதலர் மாளிகை இடங்களும்;
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்; 10

கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்து, இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும்;
வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
பூவும், புகையும், மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்; 15

பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்,
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும், துகிரும், ஆரமும், அகிலும்,
மாசு அறு முத்தும், மணியும், பொன்னும்,
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா 20

வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
காழியர், கூவியர், கள் நொடை ஆட்டியர்,
மீன் விலைப் பரதவர், வெள் உப்புப் பகருநர், 25

பாசவர், வாசவர், பல் நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்;
கஞ்ச காரரும், செம்பு செய்குநரும்,
மரம் கொல் தச்சரும், கருங் கைக் கொல்லரும்,
கண்ணுள் வினைஞரும், மண்ணீட்டு ஆளரும், 30

பொன் செய் கொல்லரும், நன்கலம் தருநரும்,
துன்ன காரரும், தோலின் துன்னரும்,
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி,
பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும்;
குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும், 35

வழுவின்றி இசைத்து, வழித் திறம் காட்டும்
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு
மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் -
கோ வியன் வீதியும்; கொடித் தேர் வீதியும்; 40

பீடிகைத் தெருவும்; பெருங்குடி வாணிகர்
மாட மறுகும்; மறையோர் இருக்கையும்;
வீழ்குடி, உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும், காலக் கணிதரும்,
பால் வகை தெரிந்த பன் முறை இருக்கையும்; 45

திரு மணி குயிற்றுநர், சிறந்த கொள்கையொடு
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும்;
சூதர், மாகதர், வேதாளி கரொடு
நாழிகைக் கணக்கர், நலம் பெறு கண்ணுளர்,
காவல் கணிகையர், ஆடல் கூத்தியர், 50

பூ விலை மடந்தையர், ஏவல் சிலதியர்,
பயில் தொழில் குயிலுவர், பன் முறைக் கருவியர்,
நகை வேழம்பரொடு வகைதெரி இருக்கையும்;
கடும் பரி கடவுநர், களிற்றின் பாகர்,
நெடுந் தேர் ஊருநர், கடுங் கண் மறவர், 55

இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும்;
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும் -
இரு பெரு வேந்தர் முனையிடம் போல
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய 60

கடை கால் யாத்த மிடை மரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும்,
நடுக்கு இன்றி நிலைஇய நாள் அங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,
'வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க' எனத் 65

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகைப்
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து
துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி; 70

'பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும்
பசியும், பிணியும், பகையும், நீங்கி;
வசியும், வளனும், சுரக்க' என வாழ்த்தி;
மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும்,
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர- 75

மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும்,
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும்,
முந்தச் சென்று, முழுப் பலி-பீடிகை,
'வெந் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க' எனப்
பலிக் கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக' என - 80

கல் உமிழ் கவணினர், கழிப் பிணிக் கறைத் தோல்,
பல் வேல் பரப்பினர் மெய் உறத் தீண்டி,
ஆர்த்து, களம் கொண்டோ ர் ஆர் அமர் அழுவத்து,
சூர்த்து, கடை சிவந்த சுடு நோக்குக் கருந்தலை,
'வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க' என, 85

நற் பலி-பீடிகை நலம் கொள வைத்து, ஆங்கு,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து
மயிர்க் கண் முரசொடு வான் பலி ஊட்டி-
இரு நிலமருங்கின் பொருநரைப் பெறாஅச்
செரு வெங் காதலின், திருமாவளவன், 90

வாளும், குடையும், மயிர்க் கண் முரசும்,
நாளொடு பெயர்த்து, 'நண்ணார்ப் பெறுக இம்
மண்ணக மருங்கின், என் வலி கெழு தோள் எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந் நாள்-
'அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய, 95

பகை விலக்கியது இப் பயம் கெழு மலை' என,
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை,
கொடுவரி ஒற்றி, கொள்கையின் பெயர்வோற்கு,
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும், 100

மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன்
பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்,
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும், 105

நுண்வினைக் கம்மியர் காணா மரபின;
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின இவை தாம்
ஒருங்குடன் புணர்ந்து, ஆங்கு, உயர்ந்தோர் ஏத்தும்
அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும், 110

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக்
கடைமுக வாயிலும், கருந் தாழ்க் காவலும்,
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர் எனின், கடுப்பத் தலை ஏற்றிக் 115

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது,
உள்ளுநர்ப் பனிக்கும் வெள் இடை மன்றமும்-
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி,
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று, 120

வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்-
வஞ்சம் உண்டு மயல்-பகை உற்றோர்,
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர்,
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர்,
கழல் கண் கூளிக் கடு நவைப் பட்டோ ர், 125

சுழல வந்து, தொழத் துயர் நீங்கும்,
நிழல் கால் நெடுங் கல் நின்ற மன்றமும்-
'தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்,
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர், 130

பொய்க் கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர்' என,
காதம் நான்கும் கடுங் குரல் எடுப்பிப்
பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்
அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து, 135

உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,
நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,
பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்-
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐ வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ- 140

வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால் வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள், விழவின், கடைநிலை, சாற்றி-
தங்கிய கொள்கைத் தரு நிலைக் கோட்டத்து, 145

மங்கல நெடுங் கொடி வான் உற எடுத்து-
மரகதமணியொடு வயிரம் குயிற்றி,
பவளத் திரள் கால், பைம் பொன் வேதிகை,
நெடு நிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்,
கிம்புரிப் பகு வாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து, 150

மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய, தோம் அறு பசும் பொன்
பூரண கும்பத்து, பொலிந்த பாலிகை,
பாவை விளக்கு, பசும் பொன் படாகை,
தூ மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து, 155

மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு-
ஐம் பெருங் குழுவும், எண் பேர் ஆயமும்,
அரச குமரரும், பரத குமரரும்;
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்,
இவர் பரித் தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி; 160

அரைசு மேம்படீ இய, அகநிலை மருங்கில்,
'உரைசால் மன்னன் கொற்றம் கொள்க' என,
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக் கொண்ட
தண் நறுங் காவிரி, தாது மலி பெருந்துறை, 165

புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி,
மண்ணகம் மருள, வானகம் வியப்ப,
விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி-
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும், 170

வால் வளை மேனி வாலியோன் கோயிலும்,
நீல மேனி நெடியோன் கோயிலும்,
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்,
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்- 175

நால் வகைத் தேவரும், மூவறு கணங்களும்,
பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்-
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்,
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும், 180

திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால்-
கொடித் தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித் தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்-
கண்ணுளாளர், கருவிக் குயிலுவர்,
பண் யாழ்ப் புலவர், பாடல் பாணரொடு, 185

எண் அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால்-
முழவுக் கண் துயிலாது, முடுக்கரும், வீதியும்,
விழவுக் களி சிறந்த வியலுள் ஆங்கண்-
காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதர்க் கொடுங் குழை மாதவி தன்னோடு 190

இல் வளர் முல்லை, மல்லிகை, மயிலை,
தாழிக் குவளை, சூழ் செங்கழுநீர்,
பயில் பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து,
காமக் களி மகிழ்வு எய்தி, காமர்
பூம் பொதி நறு விரைப் பொழில் ஆட்டு அமர்ந்து, 195

நாள் மகிழ் இருக்கை நாள் அங்காடியில்
பூ மலி கானத்துப் புது மணம் புக்கு,
புகையும் சாந்தும் புலராது சிறந்து,
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்துக்
குரல் வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு, 200

திரிதரு மரபின் கோவலன் போல,
இளி வாய் வண்டினொடு, இன் இள வேனிலொடு,
மலய மாருதம் திரிதரு மறுகில்
கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு,
இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி, 205

அங்கண் வானத்து அரவுப் பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின்
சீர் வாய் துவலைத் திரு நீர் மாந்தி,
மீன் ஏற்றுக் கொடியோன், மெய் பெற, வளர்த்த, 210

வான-வல்லி வருதலும் உண்டு கொல்!
'இரு நில மன்னற்குப் பெரு வளம் காட்ட,
திருமகள் புகுந்தது இச் செழும்பதி ஆம்' என,
எரி நிறத்து இலவமும், முல்லையும், அன்றியும்
கரு நெடுங் குவளையும், குமிழும், பூத்து, ஆங்கு 215

உள்வரிக் கோலத்து உறு துணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்!-
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல் உயிர் பருகும் பகு வாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்து, தன் அருந் தொழில் திரியாது, 220

நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி,
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு!-என
உருவிலாளன் ஒரு பெரும் சேனை
இகல் அமர் ஆட்டி, எதிர் நின்று விலக்கி, அவர் 225

எழுது வரிக் கோலம் முழு மெயும் உறீஇ,
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு-
உடன் உறைவு மரீஇ, ஒழுக்கொடு புணர்ந்த,
வடமீன் கற்பின், மனை உறை மகளிர்;
'மாதர் வாள் முகத்து, மணித் தோட்டுக் குவளைப் 230

போது புறங்கொடுத்துப் போகிய செங் கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின், யாவதும்
மருந்தும் தரும் கொல், இம் மாநில வரைப்பு?' என
கையற்று நடுங்கும் நல் வினை நடு நாள்-
உள்ளக நறுந் தாது உறைப்ப, மீது அழிந்து, 235

கள் உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங் கணும், மாதவி செங் கணும்,
உள் நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன;
எண்ணு முறை, இடத்தினும் வலத்தினும் துடித்தன-
விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து என். 240

6. கடல் ஆடு காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெள்ளி மால் வரை, வியன் பெரும் சேடி,
கள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு,
கருங் கயல் நெடுங் கண் காதலி-தன்னொடு
விருந் தாட்டு அயரும் ஓர் விஞ்சைவீரன்-
'தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் 5

இந்திர விழவு கொண்டு எடுக்கும் நாள் இது' என-
'கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோ-நகர் காத்த
தொடு கழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி,
நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட 10

வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம்
திருந்து வேல் அண்ணற்குத் தேவன் ஏவ
இருந்து, பலி உண்ணும் இடனும் காண்கும்;
அமராபதி காத்து, அமரனின் பெற்று,
தமரில் தந்து, தகைசால் சிறப்பின் 15

பொய் வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐ-வகை மன்றத்து அமைதியும் காண்குதும்;
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்,
தோரிய மடந்தை வாரம் பாடலும்,
ஆயிரம் கண்ணோன் செவிஅகம் நிறைய 20

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி,
மங்கலம் இழப்ப வீணை, "மண்மிசைத்
தங்குக இவள்" எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய,
அங்கு, அரவு-அல்குல் ஆடலும் காண்குதும்; 25

துவர் இதழ்ச் செவ் வாய்த் துடி இடையோயே!
அமரர் தலைவனை வணங்குதும் யாம்? என-
சிமையத்து இமயமும், செழு நீர்க் கங்கையும்,
உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்,
வேங்கட மலையும், தாங்கா விளையுள் 30

காவிரி நாடும், காட்டிப் பின்னர்,
பூ விரி படப்பைப் புகார் மருங்கு எய்தி,
சொல்லிய முறைமையின் தொழுதனன் காட்டி;
மல்லல் மூதூர் மகிழ் விழாக் காண்போன்,
'மாயோன் பாணியும், வருணப் பூதர் 35

நால் வகைப் பாணியும், நலம் பெறு கொள்கை
வான் ஊர் மதியமும் பாடி, பின்னர்-
சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க-
பாரதி ஆடிய பாரதி-அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட, 40

எரி முகப் பேர் அம்பு ஏவல் கேட்ப,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்;
தேர் முன் நின்ற திசைமுகன் காண,
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்; 45

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன-வண்ணன் ஆடிய ஆடலுள்,
அல்லியத் தொகுதியும்; அவுணன் கடந்த
மல்லின் ஆடலும்; மாக் கடல் நடுவண்,
நீர்த் திரை அரங்கத்து, நிகர்த்து முன் நின்ற 50

சூர்த் திறம் கடந்தோன் ஆடிய துடியும்;
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த,
குடை வீழ்த்து, அவர் முன் ஆடிய குடையும்;
வாணன் பேர் ஊர் மறுகிடை நடந்து,
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்; 55

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்;
காய் சின அவுணர் கடுந் தொழில் பொறாஅள்,
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்:
செரு வெங் கோலம் அவுணர் நீங்க, 60

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்;
வயலுழை நின்று, வடக்கு வாயிலுள்,
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்-
அவரவர் அணியுடன்; அவரவர் கொள்கையின்;
நிலையும், படிதமும், நீங்கா மரபின்; 65

பதினோர் ஆடலும், பாட்டின் பகுதியும்,
விதி மாண் கொள்கையின் விளங்கக் காணாய்;
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்' எனக்
காதலிக்கு உரைத்து, கண்டு, மகிழ்வு எய்திய 70

மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்
அந்தரத்துள்ளோர், அறியா மரபின்,
வந்து காண்குறூஉம் வானவன் விழவும்,
ஆடலும், கோலமும், அணியும், கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப; 75

பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,
முப்பத்து-இரு வகை ஓமாலி கையினும்,
ஊறின நல் நீர், உரைத்த நெய் வாசம்
நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி;
புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை 80

வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி;
அலத்தகம் ஊட்டிய அம் செஞ் சீறடி
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇப்;
பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,
அரியகம், காலுக்கு அமைவுற அணிந்து; 85

குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து;
பிறங்கிய முத்தரை முப்பத்து இரு காழ்
நிறம் கிளர் பூந் துகில் நீர்மையின் உடீஇ;
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணித் தோள்வளை தோளுக்கு அணிந்து; 90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கைவளை,
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை,
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து;
வாளைப் பகு வாய் வணக்கு உறு மோதிரம், 95

கேழ் கிளர் செங் கேழ் கிளர் மணி மோதிரம்,
வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்செறி,
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து;
சங்கிலி, நுண்-தொடர், பூண் ஞாண், புனைவினை,
அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து; 100

கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு;
இந்திர-நீலத்து இடை இடை திரண்ட
சந்திர பாணித் தகை பெறு கடிப்பு இணை
அம் காது அகவயின் அழகுற அணிந்து; 105

தெய்வ உத்தியொடு, செழு நீர் வலம்புரி,
தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கு-அணி,
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து;
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து,
பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்- 110

உரு கெழு மூதூர் உவவுத் தலைவந்தெனப்
பெரு நீர் போகும் இரியல் மாக்களொடு
மடல் அவிழ் கானல் கடல்-விளையாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினன் ஆகி-
பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப, 115

வைகறை யாமம் வாரணம் காட்ட,
வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய;
தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து;
வான வண் கையன் அத்திரி ஏற,
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி- 120

கோடி பல அடுக்கிய கொழு நிதிக் குப்பை
மாடம் மலி மறுகின், பீடிகைத் தெருவின்,
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து, ஆங்கு
அலர், கொடி-அறுகும், நெல்லும், வீசி,
மங்கலத் தாசியர் தம் கலன் ஒலிப்ப, 125

இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து;
மகர வாரி வளம் தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி;
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் 130

வேலை வாலுகத்து, விரி திரைப் பரப்பின்,
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்கு சென்று எய்தி-
வண்ணமும், சாந்தும், மலரும், சுண்ணமும்,
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்; 135

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்;
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்;
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்;
நொடை நவில் மகடூஉக் கடை கெழு விளக்கமும்;
இடை இடை, மீன் விலை பகர்வோர் விளக்கமும்; 140

இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை-விளக்கமும்;
விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும்;
மொழி பெயர் தேஎத்தோர் ஒழியா விளக்கமும்;
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும்;
எண்ணு வரம்பு அறியா இயைந்து, ஒருங்கு ஈண்டி; 145

இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சி-அது ஆகிய
விரை மலர்த் தாமரை வீங்கு நீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல் அம் கானல்- 150

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி;
நிரை நிரை எடுத்த புரை தீர் காட்சிய
மலைப் பல் தாரமும், கடல் பல் தாரமும்,
வளம் தலைமயங்கிய துளங்கு கல-இருக்கை-
அரசு இளங் குமரரும், உரிமைச் சுற்றமும்; 155

பரத குமரரும், பல் வேறு ஆயமும்;
ஆடு கள மகளிரும்; பாடு கள மகளிரும்;
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்-
விண் பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலை நாள் போல, 160

வேறு வேறு கோலத்து, வேறு வேறு கம்பலை,
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி-
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப- 165

கடல் புலவு கடிந்த மடல் பூந் தாழைச்
சிறை செய் வேலி அகவயின், ஆங்கு, ஓர்
புன்னை நீழல், புது மணல் பரப்பில்,
ஓவிய எழினி சூழ உடன் போக்கி,
விதானித்துப் படுத்த வெண் கால் அமளிமிசை, 170

வருந்துபு நின்ற வசந்தமாலை கைத்
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள்,
மா மலர் நெடுங் கண் மாதவி-தான்- என்.

வெண்பா

வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு
மாலைத் துயின்ற மணி வண்டு காலைக்
களி நறவம் தாது ஊத, தோன்றிற்றே-காமர்
தெளி நிற வெங் கதிரோன் தேர்.

7. கானல் வரி
கட்டுரை

சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,
மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி,
பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று
இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல்,தைவரல்,
கண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ்,
நண்ணிய குறும்போக்கு, என்று நாட்டிய
எண் வகையால் இசை எழீஇ;
பண் வகையான் பரிவு தீர்ந்து;
மரகதமணித் தாள் செறிந்தமணிக் காந்தள் மெல் விரல்கள்,
பயிர் வண்டின் கிளை போல, பல் நரம்பின்மிசைப் படர;
வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்,
சீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல்,
ஏர் உடைப் பட்டடை, என இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக் கரணத்துப்
பட்ட வகை தன் செவியின் ஓர்த்து-
'ஏவலன்; பின்,பாணி யாது?' என,
கோவலன் கை யாழ் நீட்ட-அவனும்,
காவிரியை நோக்கினவும், கடல் கானல் வரிப் பாணியும்,
மாதவி-தன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்கும்- மன். 1

(வேறு)

திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னி, செங்கோல்-அது ஓச்சிக்
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
அறிந்தேன்; வாழி, காவேரி! 2

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல்-அது ஓச்சி,
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காவேரி!
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று
அறிந்தேன்; வாழி, காவேரி! 3

உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!- 4

கரிய மலர் நெடுங் கண் காரிகைமுன்
கடல் தெய்வம் காட்டி காட்டி,
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று,
ஏழையம் யாங்கு அறிகோம், ஐய?
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும்
ஆம் என்றே, விளங்கும் வெள்ளைப்
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல்
பொதி அவிழ்க்கும் புகாரே, எம் ஊர். 5

காதலர் ஆகி, கழிக் கானல்,
கையுறை கொண்டு, எம் பின் வந்தார்
ஏதிலர்-தாம் ஆகி, யாம் இரப்ப,
நிற்பதை யாங்கு அறிகோம், ஐய?
மாதரார் கண்ணும், மதி நிழல் நீர்
இணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும், அறியாது வண்டு ஊசலாடும்
புகாரே, எம் ஊர். 6

மோது முது திரையான் மொத்துண்டு,
போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம்
மாதர் வரி மணல்மேல் வண்டல்
உழுது அழிப்ப, மாழ்கி, ஐய!
கோதை பரிந்து அசைய, மெல் விரலால்
கொண்டு ஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்ப, போவார் கண்
போகாப் புகாரே, எம் ஊர். 7

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல், உழுத
தோற்றம் மாய்வான்,
பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து, நுண் தாது
போர்க்கும் கானல்,
நிறை மதி வாள் முகத்து நேர் கயல்
கண் செய்த
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு
மென் முலையே தீர்க்கும் போலும். 8

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று, புள்
ஓப்புதல் தலைக்கீடு ஆக,
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம், கன்னி
நறு ஞாழல் கையில் ஏந்தி,
மணம் கமழ் பூங் கானல் மன்னி,
மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன்; அறிவேனேல்,
அடையேன் மன்னோ. 9

வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில்,
மலர் கை ஏந்தி,
விலை மீன் உணங்கல் பொருட்டாக
வேண்டு உருவம் கொண்டு, வேறு ஓர்
கொலை வேல் நெடுங் கண்
கொடுங் கூற்றம் வாழ்வது
அலை நீர்த் தண் கானல் அறியேன்; அறிவேனேல்,
அடையேன் மன்னோ. 10

(வேறு)

கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதி, தீர்த்த முகம் திங்களோ, காணீர்!
திங்களோ, காணீர்-திமில் வாழ்நர் சீறூர்க்கே
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே! 11

எறி வளைகள் ஆர்ப்ப, இரு மருங்கும் ஓடும்,
கறை கெழு வேல் கண்ணோ கடுங் கூற்றம், காணீர்!
கடுங் கூற்றம், காணீர்-கடல் வாழ்நர் சீறூர்க்கே
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே! 12

புலவு மீன் வௌ஢ உணங்கல் புள் ஓப்பி, கண்டார்க்கு
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ, காணீர்!
அணங்கு இதுவோ, காணீர்-அடும்பு அமர் தண் கானல்
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே! 13

(வேறு)

பொழில் தரு நறு மலரே, புது மணம் விரி மணலே,
பழுது அறு திரு மொழியே, பணை இள வன முலையே,
முழு மதி புரை முகமே, முரி புரு வில் இணையே,
எழுது-அரு மின் இடையே-எனை இடர் செய்தவையே. 14

திரை விரிதரு துறையே, திரு மணல் விரி இடமே,
விரை விரி நறு மலரே, மிடைதரு பொழில் இடமே,
மரு விரி புரி குழலே, மதி புரை திரு முகமே,
இரு கயல் இணை விழியே-எனை இடர் செய்தவையே. 15

வளை வளர்தரு துறையே, மணம் விரிதரு பொழிலே,
தளை அவிழ் நறு மலரே, தனியவள் திரி இடமே,
முளை வளர் இள நகையே, முழு மதி புரை முகமே,
இளையவள் இணை முலையே-எனை இடர் செய்தவையே. 16

(வேறு)

கடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வர் நின் ஐயர்;
உடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வைமன் நீயும்;
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்;
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்! 17

கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை;
நெடுங் கண் வலையால் உயிர் கொல்வைமன் நீயும்;
வடம் கொள் முலையான் மழை மின்னுப் போல
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்! 18

ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்;
கோடும் புருவத்து உயிர் கொல்வைமன் நீயும்
பீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்! 19

(வேறு)

பவள உலக்கை கையால் பற்றி,
தவள முத்தம் குறுவாள் செங் கண்,
தவள முத்தம் குறுவாள் செங் கண்
குவளை அல்ல! கொடிய, கொடிய! 20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்,
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்
கொன்னே வெய்ய! கூற்றம், கூற்றம்! 21

கள் 'வாய் நீலம் கையின் ஏந்தி,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்
வெள் வேல் அல்ல! வெய்ய, வெய்ய! 22

(வேறு)

சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய். 23

கட்டுரை

ஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்,
'மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான்' என,
கலவியால் மகிழ்ந்தாள்போல்,புலவியால் யாழ் வாங்கி,
தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப் பாடல்-பாணி,
நிலத் தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மன். 24

(வேறு)

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப் பூ ஆடை-அது போர்த்துக்
கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
நடந்தாய்; வாழி, காவேரி!
கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை;
அறிந்தேன்; வாழி, காவேரி! 25

பூவர் சோலை மயில் ஆலப்
புரிந்து குயில்கள் இசை பாட,
காமர் மாலை அருகு அசைய,
நடந்தாய்; வாழி, காவேரி!
காமர் மாலை அருகு அசைய,
நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறம் கண்டே;
அறிந்தேன், வாழி, காவேரி! 26

வாழி அவன்-தன் வள நாடு
மகவாய், வளர்க்கும் தாய் ஆகி,
ஊழி உய்க்கும் பேர் உதவி
ஒழியாய்; வாழி, காவேரி!
ஊழி உய்க்கும் பேர் உதவி
ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி ஆள்வான், பகல் வெய்யோன்
அருளே; வாழி, காவேரி! 27

(வேறு)

தீங்கதிர் வாள் முகத்தாள் செவ் வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும்,
'வாங்கும் நீர், முத்து' என்று, வைகலும், மால்-மகன் போல் வருதிர், ஐய!
வீங்கு ஓதம் தந்து, விளங்கு ஒளிய வெண் முத்தம்; விரை சூழ் கானல்
பூங் கோதை கொண்டு; விலைஞர் போல் மீளும் புகாரே, எம் ஊர். 28

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செங் கை
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்-யாங்கு அறிகோம்? ஐய!
நிறை மதியும் மீனும் என, அன்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த
பொறை மலி பூங் கொம்பு ஏற, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே, எம் ஊர். 29

உண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள், உறை ஒன்று இன்றித்
தண்டா நோய் மாதர் தலைத் தருதி என்பது யாங்கு அறிகோம்? ஐய!
வண்டால் திரை அழிப்ப, கையான் மணல் முகந்து, மதிமேல் நீண்ட,
புண் தோய் வேல் நீர் மல்க, மாதர் கடல் தூர்க்கும் புகாரே, எம் ஊர். 30

(வேறு)

புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி,
இணர் ததையும் பூங் கானல் என்னையும் நோக்கி,
உணர்வு ஒழியப் போன, ஒலி திரை நீர்ச் சேர்ப்பன்,
வணர் சுரி ஐம்பாலோய்! வண்ணம் உணரேனால். 31

தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான் தேரும்,
எம்மை நினையாது, விட்டாரோ? விட்டு அகல்க;
அம் மென் இணர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால். 32

புன்கண் கூர் மாலைப் புலம்பும் என் கண்ணே போல்,
துன்பம் உழவாய், துயிலப் பெறுதியால்;
இன் கள் வாய் நெய்தால்! நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக் கண்டறிதியோ? 33

புள் இயல் மான் தேர்-ஆழி போன வழி எல்லாம்,
தெள்ளு நீர் ஓதம்! சிதைத்தாய்; மற்று என் செய்கோ?
தெள்ளு நீர் ஓதம்! சிதைத்தாய்; மற்று எம்மோடு ஈங்கு
உள்ளாரோடு உள்ளாய்; உணராய்; மற்று என் செய்கோ? 34

நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற, ஓதமே;
பூந் தண் பொழிலே! புணர்ந்து ஆடும் அன்னமே!
ஈர்ந் தண் துறையே! 'இது தகாது' என்னீரே. 35

நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; வாழி, கடல் ஓதம்!
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! 36

(வேறு)

நல் நித்திலத்தின் பூண் அணிந்து,
நலம் சார் பவளக் கலை உடுத்து
செந்நெல் பழனக் கழனிதொறும்
திரை உலாவு கடல் சேர்ப்ப!
புன்னைப் பொதும்பர் மகரத் திண்
கொடியோன் எய்த புதுப் புண்கள்
என்னைக் காணாவகை மறைத்தால்,
அன்னை காணின், என் செய்கோ? 37

வாரித் தரள நகை செய்து,
வண் செம் பவள வாய் மலர்ந்து,
சேரிப் பரதர் வலை முன்றில்
திரை உலாவு கடல் சேர்ப்ப!
மாரிப் பீரத்து அலர் வண்ணம்
மடவாள் கொள்ள, கடவுள் வரைந்து
'ஆர் இக் கொடுமை செய்தார்?' என்று
அன்னை அறியின், என் செய்கோ? 38

புலவு உற்று, இரங்கி, அது நீங்கப்
பொழில்-தண்டலையில் புகுந்து உதிர்ந்த
கலவைச் செம்மல் மணம் கமழ
திரை உலாவு கடல் சேர்ப்ப!
பல உற்று, ஒரு நோய் துணியாத
படர் நோய் மடவாள் தனி உழப்ப,
அலவுற்று, இரங்கி, அறியா நோய்
அன்னை அறியின், என் செய்கோ? 39

(வேறு)

இளை இருள் பரந்ததுவே; எல் செய்வான் மறைந்தனனே;
களைவு-அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே;
தளை அவிழ் மலர்க் குழலாய்! தணந்தார் நாட்டு உளதாம் கொல்-
வளை நெகிழ, எரி சிந்தி, வந்த இம் மருள் மாலை? 40

கதிரவன் மறைந்தனனே; கார் இருள் பரந்ததுவே;
எதிர் மலர் புரை உண் கண் எவ்வ நீர் உகுத்தனவே
புது மதி புரை முகத்தாய்! போனார் நாட்டு உளதாம் கொல்-
மதி உமிழ்ந்து, கதிர் விழுங்கி, வந்த இம் மருள் மாலை? 41

பறவை பாட்டு அடங்கினவே; பகல் செய்வான் மறைந்தனனே;
நிறை நிலா நோய் கூர, நெடுங் கண் நீர் உகுத்தனவே;
துறு மலர் அவிழ் குழலாய்! துறந்தார் நாட்டு உளதாம்கொல்-
மறவை ஆய், என் உயிர்மேல் வந்த இம் மருள் மாலை? 42

(வேறு)

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர். 43

கானல் வேலிக் கழிவாய் வந்து,
'நீ நல்கு' என்றே நின்றார் ஒருவர்
'நீ நல்கு' என்றே நின்றார், அவர் நம்
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர். 44

அன்னம் துணையோடு ஆடக்கண்டு,
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார், அவர் நம்
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர். 45

(வேறு)

அடையல், குருகே! அடையல் எம் கானல்,
அடையல், குருகே! அடையல் எம் கானல்,
உடை திரை நீர்ச் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய்;
அடையல், குருகே! அடையல் எம் கானல். 46

(வேறு)

ஆங்கனம் பாடிய ஆய்-இழை, பின்னரும்,
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல்
தீம் தொடைச் செவ்வழிப்பாலை இசை எழீஇ,
பாங்கினில் பாடி, ஓர் பண்ணுப் பெயர்த்தாள். 47

(வேறு)

நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால், மாலை!
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்,
கொளை வல்லாய்! என் ஆவி கொள்; வாழி, மாலை! 48

பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல்
இருந்து, ஏங்கி, வாழ்வார் உயிர்ப் புறத்தாய், மாலை!
உயிர்ப் புறத்தாய் நீ ஆகில், உள் ஆற்றா வேந்தன்
எயில்-புறத்து வேந்தனோடு என் ஆதி, மாலை? 49

பையுள் நோய் கூர, பகல் செய்வான் போய் வீழ,
வையமோ கண் புதைப்ப, வந்தாய், மருள் மாலை!
மாலை நீ ஆயின், மணந்தார் அவர் ஆயின்,
ஞாலமோ நல்கூர்ந்தது; வாழி, மாலை! 50

(வேறு)

'தீத் துழைஇ வந்த இச் செல்லல் மருள் மாலை
தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால்,
பூக் கமழ் கானலில் பொய்ச் சூள் பொறுக்க' என்று,
மாக் கடல்-தெய்வம்! நின் மலர் அடி வணங்குதும். 51

கட்டுரை

எனக் கேட்டு,
'கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்' என
யாழ்-இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்,
'பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின், எழுதும்' என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன்-தான் போன பின்னர்-
தாது அவிழ் மலர்ச் சோலை, ஓதை ஆயத்து ஒலி அவித்து,
கையற்ற நெஞ்சினளாய், வையத்தின் உள் புக்கு,
காதலனுடன் அன்றியே, மாதவி தன் மனை புக்காள்-
'ஆங்கு,
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும்,
சூழி யானை, சுடர் வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப,
ஆழி மால் வரை அகவையா' எனவே. 52

8. வேனிற் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

'நெடியோன் குன்றமும், தொடியோள் பௌவமும்,
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்,
கலி கெழு வஞ்ச்஢யும், ஒலி புனல் புகாரும்,
அரைசு வீற்றிருந்த, உரைசால் சிறப்பின், 5

மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளவேனில் வந்தது இவண்' என,
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த
இளங்கால்-தூதன் இசைத்தனன். ஆதலின்,
மகர வெல் கொடி மைந்தன் சேனை! 10

புகர் அறு கோலம் கொள்ளும்' என்பது போல்,
கொடி மிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணி மொழி கூற-
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள்
கோவலன் ஊட, கூடாது ஏகிய, 15

மா மலர் நெடுங் கண் மாதவி விரும்பி;
வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில்-பள்ளி ஏறி; மாண்- இழை,
தென் கடல் முத்தும், தென் மலைச் சந்தும்,
தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின், 20

கொங்கை முன்றில் குங்கும வளாகத்து,
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி,
அதிரா மரபின் யாழ் கை வாங்கி,
மதுர கீதம் பாடினள், மயங்கி-
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி 25

நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி,
இடக்கை நால் விரல் மாடகம் தழீஇச்
செம்பகை, ஆர்ப்பே, கூடம், அதிர்வே,
வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30

பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை
உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி,
இணை, கிளை, பகை, நட்பு, என்று இந் நான்கின்
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி,
குரல்வாய், இளிவாய்க் கேட்டனள்; அன்றியும், 35

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்,
உழை முதல் ஆகவும், உழை ஈறு ஆகவும்;
குரல் முதல் ஆகவும்,குரல் ஈறு ஆகவும்;
அகநிலை மருதமும், புறநிலை மருதமும்,
அருகியல் மருதமும், பெருகியல் மருதமும்; 40

நால் வகைச் சாதியும் நலம் பெற நோக்கி,
மூ-வகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்து
திறத்து வழிப்படூ உம் தெள் இசைக் கரணத்துப்
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கிச்
சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை, 45

வெண் பூ மல்லிகை, வேரொடு மிடைந்த
அம் செங்கழுநீர், ஆய் இதழ்க் கத்திகை
எதிர் பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர் பூந்தாழை முடங்கல் வெண் தோட்டு-
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட 50

ஒரு தனிச் செங்கோல் ஒரு மகன் ஆணையின்,
ஒரு முகம் அன்றி, உலகு தொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி-
அலத்தகக் கொழுஞ் சேறு அளைஇ, அயலது
பித்திகைக் கொழு முகை ஆணி கைக்கொண்டு, 55

'மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இளவேனில் இளவரசாளன்;
அந்திப் போதகத்து அரும் பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும், 60

தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின்' என,
எண்-எண் கலையும் இசைந்து உடன் போகப்
பண்ணும் திறனும் புறங்கூறு நாவில் 65

தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்து உரை எழுதிப்
பசந்த மேனியள் படர் உறு மாலையின்,
வசந்தமாலையை, 'வருக' எனக் கூஉய்த்
'தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் 70

கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்கு' என-
மாலை வாங்கிய வேல் அரி நெடுங் கண்,
கூல மறுகிற், கோவலற்கு அளிப்ப-
திலகமும், அளகமும், சிறு கருஞ் சிலையும்,
குவளையும், குமிழும், கொவ்வையும், கொண்ட 75

மாதர் வாள் முகத்து, மதைஇய நோக்கமொடு,
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்;
புயல் சுமந்து வருந்திப் பொழி கதிர் மதியத்துக்
கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்,
பாகு பொதி பவளம் திறந்து, நிலா உதவிய 80

நாகு இள முத்தின் நகை நலம் காட்டி,
'வருக' என, வந்து 'போக' எனப் போகிய
கரு நெடுங் கண்ணி காண் வரிக் கோலமும்;
அந்தி-மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கிக் 85

கிளி புரை கிளவியும், மட அன நடையும்,
களி மயில் சாயலும், கரந்தனள் ஆகிச்
செரு வேல் நெடுங் கண் சிலதியர் கோலத்து
ஒரு தனி வந்த உள் வரி ஆடலும்;
சிலம்பு வாய் புலம்பவும், மேகலை ஆர்ப்பவும், 90

கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும்,
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும்;
கோதையும், குழலும், தாது சேர் அளகமும்,
ஒரு காழ் முத்தமும், திரு முலைத் தடமும், 95

மின் இடை வருத்த நல் நுதல் தோன்றி,
சிறுகுறுந் தொழிலியர் மறு மொழி உய்ப்ப,
புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்
இரு புற மொழிப் பொருள் கேட்டனள் ஆகி,
தளர்ந்த சாயல், தகை மென் கூந்தல் 100

கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரிக் கோலமும்;
பிரிந்து உறை காலத்து, பரிந்தனள் ஆகி,
என் உறு கிளைகட்குத் தன் உறு துயரம்
தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி; அன்றியும்,
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி, 105

கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்;
அடுத்து அடுத்து, அவர் முன் மயங்கிய மயக்கம்
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக் கோள் வரியும்;
ஆடல் மகளே ஆதலின், ஆய்-இழை!
பாடு பெற்றன அப் பைந்தொடி-தனக்கு' என- 110

அணித் தோட்டுத் திரு முகத்து ஆய்-இழை எழுதிய
மணித் தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி,
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடு அலர் கோதைக்குத் துனைந்து சென்று உரைப்ப-
'மாலை வாரார் ஆயினும், மாண்-இழை! 115

காலை காண்குவாம்' என, கையறு நெஞ்சமொடு
பூ மலர்-அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்-
மா மலர் நெடுங் கண் மாதவி-தான்- என்.

வெண்பா

செந்தாமரை விரிய, தேமாங் கொழுந்து ஒழுக,
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ, கொந்து ஆர்
இளவேனில் வந்ததால்; என் ஆம் கொல்-இன்று,
வள வேல் நல் கண்ணி மனம்? 1

'ஊடினீர் எல்லாம், உருவிலான்-தன் ஆணை!
கூடுமின்' என்று குயில் சாற்ற, நீடிய
வேனல்-பாணிக் கலந்தாள் மென் பூந் திருமுகத்தை,
கானல்-பாணிக்கு அலந்தாய்! காண். 2

9. கனாத்திறம் உரைத்த காதை
(கலிவெண்பா)

அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை
நிகர் மலர் நெல்லொடு தூஉய், பகல் மாய்ந்த
மாலை மணி விளக்கம் காட்டி, இரவிற்கு ஓர்
கோலம் கொடி-இடையார்-தாம் கொள்ள-மேல் ஓர் நாள்
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க, 5

பால் விக்கிப் பாலகன்-தான் சோர, மாலதியும்,
'பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன விட்டு
ஏற்பன கூறார்' என்று ஏங்கி, மகக் கொண்டு,
அமரர் தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்,
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம், பகல் வாயில் 10

உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேற்கோட்டம்,
வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்,
நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், புக்கு எங்கும்
'தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம்' என்று மேவி-ஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு, 15

ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், 'ஆசு இலாய்!
செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;
பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்
படு பிணம் தா' என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,
சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்கு 20

இடு பிணம் தின்னும் இடாகினிப் பேய் வாங்கி,
மடி அகத்து இட்டாள், மகவை-இடியுண்ட
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு, அச் சாத்தன்
'அஞ்ஞை! நீ ஏங்கி அழல்' என்று, 'முன்னை
உயிர்க் குழவி காணாய்' என்று, அக் குழவி ஆய், ஓர் 25

குயில்-பொதும்பர் நீழல் குறுக, அயிர்ப்பு இன்றி,
மாயக் குழவி எடுத்து, மடித் திரைத்துத்
தாய் கைக் கொடுத்தாள், அத் தையலாள் தூய
மறையோன் பின் மாணி ஆய், வான் பொருள் கேள்வித்
துறைபோய், அவர் முடிந்தபின்னர், இறையோனும் 30

தாயத்தாரோடும் வழக்கு உரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து, மேய நாள்,
தேவந்தி என்பாள் மனைவி, அவளுக்குப்
'பூ வந்த உண் கண் பொறுக்க' என்று மேவி, தன்
மூவா இள நலம் காட்டி, 'எம் கோட்டத்து 35

நீ வா' என உரைத்து, நீங்குதலும்-தூ-மொழி,
ஆர்த்த கணவன் அகன்றனன், 'போய் எங்கும்
தீர்த்தத் துறை படிவேன்' என்று; அவனைப் போர்த்து இங்ஙன்
மீட்டுத் தருவாய்' என ஒன்றன் மேல் இட்டு,
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள், வாட்டு-அரும் சீர்க் 40

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
'பெறுக, கணவனோடு!' என்றாள்- 'பெறுகேன்;
கடுக்கும் என் நெஞ்சம்; கனவினால், என் கை 45

பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம்;
பட்ட பதியில், படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு, என்-தன்மேல்;
"கோவலற்கு உற்றது ஓர் தீங்கு" என்று அது கேட்டுக்
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்; காவலனொடு 50

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்; உரையாடேன்;
தீக் குற்றம் போலும், செறி-தொடீஇ! தீக் குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற
நல் திறம் கேட்கின் நகை ஆகும்'- பொன்-தொடீஇ!
கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒரு நோன்பு 55

பொய்த்தாய் பழம் பிறப்பில்; போய்க் கெடுக! உய்த்துக்
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்,
மடல் அவிழ் நெய்தல் அம் கானல், தடம் உள,
சோம குண்டம், சூரிய குண்டம், துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு 60

தாம் இன்புறுவர் உலகத்து, தையலார்;
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள்
ஆடுதும்' என்ற அணி-இழைக்கு-அவ் ஆய்-இழையாள்,
'பீடு அன்று' என இருந்தபின்னரே-'நீடிய
காவலன் போலும், கடைத்தலையான் வந்து-நம் 65

கோவலன்!' என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்கு, தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு, 'யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள்-குன்றம் தொலைந்த; 70

இலம்பாடு நாணுத் தரும் எனக்கு' என்ன-
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
'சிலம்பு உள; கொண்ம்' என-'சேயிழை! கேள்; இச்
சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர் 75

மாட மதுரை அகத்துச் சென்று; என்னோடு இங்கு,
ஏடு அலர் கோதாய்! எழுக' என்று, நீடி
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

வெண்பா

காதலி கண்ட கனவு கரு நெடுங் கண்
மாதவி-தன் சொல்லை வறிதாக்க, மூதை-
வினை கடைக் கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

10. நாடுகாண் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வான்கண் விழியா வைகறை யாமத்து,
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க,
கார் இருள் நின்ற கடைநாள் கங்குல்-
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப,
ஏழகத் தகரும், எகினக் கவரியும், 5

தூ மயிர் அன்னமும், துணை எனத் திரியும்,
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து-ஆங்கு-
அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து, 10

பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி-
புலவு ஊண் துறந்து, பொய்யா விரதத்து, 15

அவலம் நீத்து, அறிந்து, அடங்கிய கொள்கை,
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐ-வகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து, தலை மயங்கிய வான் பெரு மன்றத்து, 20

பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல்,
நீர் அணி விழவினும், நெடுந் தேர் விழவினும்,
சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம் தொழுது, வலம் கொண்டு- 25

மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கிக்
கலையிலாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும்,
பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர் 30

இலவந்திகையின் எயில் புறம் போகி-
தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து 35

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி-ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க, 40

'மதுரை மூதூர் யாது?' என வினவ-
'ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து' என நக்கு
தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்- 45

'உருவும், குலனும், உயர் பேர் ஒழுக்கமும்,
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்,
உடையீர்! என்னோ, உறு கணாளரின்
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு?' என-
'உரையாட்டு இல்லை; உறு தவத்தீர்! யான் 50

மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்'-
"பாடகச் சீறடி பரல் பகை உழவா;
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ?
"உரியது அன்று; ஈங்கு ஒழிக" என, ஒழியீர்; 55

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்
அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,
தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்,
போதுவல் யானும்; போதுமின்' என்ற 60

காவுந்தி ஐயையைக் கை தொழுது, ஏத்தி,
'அடிகள்! நீரே அருளுதிர் ஆயின், இத்
தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன்' எனக்
'கோவலன்! காணாய்; கொண்ட இந் நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல; கேண்மோ 65

வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் கொண்டு
பயில் பூந் தண்டலைப் படர்குவம் எனினே
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்
பொய்யறைப் படுத்து, போற்றா மாக்கட்குக் 70

கையறு துன்பம் காட்டினும் காட்டும்;
உதிர் பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும்;
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்துச்
செஞ் சுளைப் பலவின் பரல் பகை உறுக்கும் 75

கயல் நெடுங் கண்ணி காதல் கேள்வ!
வயல் உழைப் படர்குவம் எனினே, ஆங்குப்
பூ நாறு இலஞ்சிப் பொரு கயல் ஓட்டி,
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை
மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின், 80

கலங்கலும் உண்டு இக் காரிகை; ஆங்கண்,
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து,
சுரும்பு சூழ் பொய்கைத் தூ நீர் கலக்கும்;
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி,
குடங்கையின் நொண்டு, கொள்ளவும் கூடும்; 85

குறுநர் இட்ட குவளை அம் போதொடு
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை,
நெறி செல் வருத்தத்து, நீர் அஞர் எய்தி,
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்;
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் 90

பொறி மாண் அலவனும், நந்தும், போற்றாது,
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின்,
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது, யாங்கணும்,
அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை; 95

நெறி இருங் குஞ்சி! நீ வெய்யோளொடு
குறி அறிந்து, அவை அவை குறுகாது ஓம்பு' என-
தோம் அறு கடிஞையும், சுவல் மேல் அறுவையும்,
கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
'மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக' எனப் 100

பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர்-
கரியவன் புகையினும், புகைக் கொடி தோன்றினும்,
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
கால் பொரு நிவப்பின் கடுங் குரல் ஏற்றொடும்
சூல் முதிர் கொண் மூப் பெயல் வளம் சுரப்ப, 105

குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு
கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை,
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,
ஆம்பியும், கிழாரும், வீங்கு இசை ஏத்தமும், 110

ஓங்கு நீர்ப் பிழாவும், ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல், கரும்பு சூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம் பூங் கானத்து,
கம்புள் கோழியும், கனை குரல் நாரையும்,
செங் கால் அன்னமும், பைங் கால் கொக்கும், 115

கானக் கோழியும், நீர் நிறக் காக்கையும்,
உள்ளும், ஊரலும், புள்ளும், புதாவும்,
வெல் போர் வேந்தர் முனையிடம் போல,
பல் வேறு குழூஉக் குரல் பரந்த ஓதையும்;
உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய 120

கழாஅ மயிர் யாக்கைச் செங் கண் காரான்
சொரி புறம் உரிஞ்ச, புரி ஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும் பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய,
கருங் கை வினைஞரும் களமரும் கூடி 125

ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்;
கடி மலர் களைந்து, முடி நாறு அழுத்தித்
தொடி வளைத் தோளும் ஆகமும் தோய்ந்து,
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றிச்
செங் கயல் நெடுங் கண் சில் மொழிக் கடைசியர் 130

வெங் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்;
கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து,
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி,
பார் உடைப்பனர் போல், பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்; 135

அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த
பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்;
தெண் கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்;
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு, ஆங்கு, 140

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்-
உழைப் புலிக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு
மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்,
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து, 145

மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை; அன்றியும்,
பரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர்,
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும், 150

பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து,
மங்குல் வானத்து மலையின் தோன்றும்,
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு,
காவதம் அல்லது கடவார் ஆகி,
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்- 155

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160

இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-
'பண்டைத் தொல் வினை பாறுக, என்றே
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் 165

வந்த காரணம், வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கின், தெரிந்தோன் ஆயினும்,
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின், விழுமம் கொள்ளான்-
'கழி பெரும் சிறப்பின் கவுந்தி! காணாய், 170

ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை;
இட்ட வித்தின் எதிர் வந்து எய்தி,
ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்; 175

அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன்,
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்,
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன், 180

பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்,
தத்துவன், சாதுவன், சாரணன், காரணன்,
சித்தன், பெரியவன், செம்மல், திகழ் ஒளி
இறைவன், குரவன், இயல் குணன், எம் கோன்,
குறைவு இல் புகழோன், குணப் பெரும் கோமான், 185

சங்கரன், ஈசன், சுயம்பு, சதுமுகன்,
அங்கம் பயந்தோன், அருகன், அருள் முனி,
பண்ணவன், எண் குணன், பாத்து இல் பழம் பொருள்,
விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி,
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது, 190

போதார், பிறவிப் பொதி-அறையோர்' என-
சாரணர் வாய்மொழி கேட்டு, தவ முதல்
காவுந்திகை தன் கை தலைமேல் கொண்டு,
'ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லது, என் செவிஅகம் திறவா; 195

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது, என் நா;
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது,
கைவரக் காணினும், காணா என் கண்;
அருள் அறம் பூண்டோ ன் திரு மெய்க்கு அல்லது, என் 200

பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது;
அருகர், அறவன், அறிவோற்கு அல்லது, என்
இரு கையும் கூடி ஒரு வழிக் குவியா;
மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது, என்
தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது; 205

இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது,
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது'
என்று அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு, அதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி,
நிவந்து, ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கிப் 210

'பவம் தரு பாசம் கவுந்தி கெடுக' என்று,
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது,
'பந்தம் அறுக' எனப் பணிந்தனர் போந்து-
கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி-மாடத்து நெடுந் துறை போகி, 215

மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்திப்,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர், 220

'காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்' என்றே-
'நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோ ர் ஆர்?' என வினவ-என்
மக்கள் காணீர்; மானிட யாக்கையர்; 225

பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்' என-
'உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந்தீர்!' என-
தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க- 230

'எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக' என-
கவுந்தி இட்டது தவம் தரு சாபம்;
கட்டியதுஆதலின், பட்டதை அறியார்,
குறு நரி நெடுங்குரல் கூவிளி கேட்டு, 235

நறு மலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
'நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்,
அறியாமை என்று அறியல் வேண்டும்;
செய் தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீரோ!' என- 240

அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்,
முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்' எனச்
சாபவிடை செய்து, தவப் பெரும் சிறப்பின் 245

காவுந்தி ஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என்.

கட்டுரை

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும், 5

ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,
பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்;
அரங்கும், ஆடலும், தூக்கும், வரியும் 10

பரந்து இசை எய்திய பாரதி-விருத்தியும்,
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்,
ஈர்-ஏழ் சகோடமும், இடைநிலைப் பாலையும்,
தாரத்து ஆக்கமும், தான் தெரி பண்ணும், 15

ஊர் அகத்து ஏரும், ஒளி உடைப் பாணியும்,
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்;
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.

வெண்பா

காலை அரும்பி மலரும் கதிரவனும்,
மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

மதுரைக் காண்டம்
11. காடுகாண் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் 5

அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நல் மொழி
மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு,
அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி,
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று, 10

வைகறை யாமத்து வாரணம் கழிந்து,
வெய்யவன் குண திசை விளங்கித் தோன்ற,
வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மரக் கானத்து இருக்கை புக்குழி-
'வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை! 15

ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க!
அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி,
வடி வேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள 20

வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
திங்கள் செல்வன் திருக் குலம் விளங்க,
செங் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம்
பொங்கு ஒளி மார்பில் பூண்டோ ன் வாழி! 25

'முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி' என்று
இடி உடைப் பெரு மழை எய்தாது ஏக,
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப,
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க!' என,
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி, 30

மா முது மறையோன் வந்திருந்தோனை-
'யாது நும் ஊர்? ஈங்கு என் வரவு?' எனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மா மறையாளன் வருபொருள் உரைப்போன்
'நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப் 35

பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தித்
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்- 40

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கொடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, 45

நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய 50

செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்-
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற
வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன்
தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்,
கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின், 55

வாழ்த்தி வந்திருந்தேன்; இது என் வரவு' என,
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு-
'மா மறை முதல்வ! மதுரைச் செந் நெறி
கூறு நீ' எனக் கோவலற்கு உரைக்கும்
'கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி, 60

வேத்தியல் இழந்த வியல் நிலம் போல,
வேனல் அம் கிழவனொடு வெங் கதிர் வேந்தன்
தான் நலம் திருக, தன்மையில் குன்றி,
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப், 65

பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை-தன்னுடன்;
அறையும், பொறையும், ஆர் இடை மயக்கமும்,
நிறை நீர் வேலியும் முறைபடக் கிடந்த இந்
நெடும் போர் அத்தம் நீந்திச் சென்று- 70

கொடும்பை நெடுங் குளக் கோட்டகம் புக்கால்-
பிறை முடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறை வாய்ச் சூலத்து அரு நெறி கவர்க்கும்-
வலம்படக் கிடந்த வழி நீர் துணியின்,
அலறு தலை மராமும், உலறு தலை ஓமையும், 75

பொரி அரை உழிஞ்சிலும், புன் முளி மூங்கிலும்,
வரி மரல் திரங்கிய கரி புறக் கிடக்கையும்;
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும்
கானமும்; எயினர் கடமும் கடந்தால்,
ஐவன வெண்ணெலும், அறைக் கண் கரும்பும், 80

கொய் பூந் தினையும், கொழும் புன வரகும்,
காயமும், மஞ்சளும், ஆய் கொடிக் கவலையும்,
வாழையும், கமுகும், தாழ் குலைத் தெங்கும்,
மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் 85

அம் மலை வலம் கொண்டு அகன் பதிச் செல்லுமின்-
அவ் வழிப் படரீர் ஆயின், இடத்து,
செவ்வழிப் பண்ணின் சிறை வண்டு அரற்றும்
தடம் தாழ் வயலொடு தண் பூங் காவொடு
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து, 90

திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்,
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு: ஆங்கு,
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின்
புண்ணிய சரவணம், பவகாரணியோடு,
இட்டசித்தி, எனும் பெயர் போகி, 95

விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்று உள ஆங்கு,
புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின்,
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர்;
பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின் 100

பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர்;
இட்டசித்தி எய்துவிர் ஆயின்
இட்டசித்தி எய்துவிர் நீரே.
ஆங்குப் பிலம் புக வேண்டுதிர் ஆயின்,
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது, 105

சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து,
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால்,
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை,
பொலங் கொடி மின்னின் புயல் ஐங் கூந்தல்,
கடி மலர் அவிழ்ந்த கன்னி காரத்து, 110

தொடி வளைத் தோளி ஒருத்தி தோன்றி,
'இம்மைக்கு இன்பமும், மறுமைக்கு இன்பமும்,
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர்
செம்மையில் நிற்பதும், செப்புமின், நீயிர்? இவ்
வரைத் தாள் வாழ்வேன்; வரோத்தமை என்பேன்; 115

உரைத்தார்க்கு உரியேன்; உரைத்தீர் ஆயின்,
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவு' எனும்
கதவம் திறந்து, அவள் காட்டிய நல் நெறிப்
புதவம் பல உள, போகு இடைகழியன;
ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு; அதன் உம்பர் 120

வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
'இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால்,
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள்' எனும்;
'உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன்;
நெடு வழிப் புறத்து நீக்குவல் நும்' எனும் 125

உரைத்தார் உளர் எனின், உரைத்த மூன்றின்
கரைப்படுத்து, ஆங்குக் காட்டினள் பெயரும்
அரு மறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்,
வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி, 130

வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின்,
காண்தகு மரபின அல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொன் தாமரைத் தாள் உள்ளம் பொருந்துமின்.
உள்ளம் பொருந்துவிர் ஆயின், மற்று அவன் 135

புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும்;
தோன்றியபின் அவன் துணை மலர்த் தாள் இணை
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி,
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகுமின்;
காண்தகு பிலத்தின் காட்சி ஈது 'ஆங்கு 140

அந் நெறிப் படரீர் ஆயின், இடையது
செந் நெறி ஆகும்; தேம் பொழில் உடுத்த
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால்
ஆர் இடை உண்டு, ஓர் ஆர் அஞர்த் தெய்வம்;
நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி, 145

இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும்.
மடுத்து உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி,
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல்
தாள் தொழு தகையேன் போகுவல் யான' என-
மா மறையோன் வாய் வழித் திறம் கேட்ட 150

காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும்
'நலம் புரி கொள்கை நான்மறையாள!
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை;
கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட்டு-இயற்கையின் விளங்கக் காணாய்; 155

இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பில் காணாயோ, நீ?
வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ , எய்தா அரும் பொருள்?
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய 160

நீ போ; யாங்களும் நீள் நெறிப் படர்குதும்?
என்று அம் மறையோற்கு இசை மொழி உணர்த்தி-
குன்றாக் கொள்கைக் கோவலன்-தன்னுடன்
அன்றைப் பகல் ஓர் அரும் பதித் தங்கி,
பின்றையும் அவ் வழிப் பெயர்ந்து செல் வழிநாள்- 165

கருந் தடங் கண்ணியும் கவுந்தி அடிகளும்
வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப-
இடை நெறிக் கிடந்த இயவு கொள் மருங்கின்,
புடை நெறிப் போய், ஓர் பொய்கையில் சென்று,
நீர் நசைஇ வேட்கையின் நெடுந் துறை நிற்ப- 170

கான் உறை தெய்வம் காதலின் சென்று,
'நயந்த காதலின் நல்குவன் இவன்' என,
வயந்தமாலை வடிவில் தோன்றி,
கொடி நடுக்கு உற்றது போல, ஆங்கு-அவன்
அடிமுதல் வீழ்ந்து, ஆங்கு, அரும் கணீர் உகுத்து, 175

'வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீது இலேன்; பிழை மொழி செப்பினை; ஆதலின்,
கோவலன் செய்தான் கொடுமை' என்று, என் முன்
மாதவி மயங்கி, வான் துயர் உற்று,
'மேலோர் ஆயினும், நூலோர் ஆயினும், 180

பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்,
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்' என,
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
வெண் முத்து உதிர்த்து, வெண்நிலாத் திகழும் 185

தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து,
துனி உற்று என்னையும் துறந்தனள்; ஆதலின்
மதுரை மூதூர் மா நகர்ப் போந்தது
எதிர் வழிப் பட்டோ ர் எனக்கு ஆங்கு உரைப்பச்
சாத்தொடு போந்து தனித் துயர் உழந்தேன்; 190

பாத்து-அரும் பண்ப! நின் பணி மொழி யாது? என-
'மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டு உண்டு' என
வியத்தகு மறையோன் விளம்பினன்; ஆதலின்,
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இவ்
ஐஞ் சில் ஓதியை அறிகுவென் யான்' என- 195

கோவலன் நாவில் கூறிய மந்திரம்
பாய் கலைப் பாவை மந்திரம் ஆதலின்,
'வன-சாரிணி யான்; மயக்கம் செய்தேன்;
புன மயில் சாயற்கும், புண்ணிய முதல்விக்கும்,
என் திறம் உரையாது ஏகு' என்று ஏக- 200

தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து, ஆங்கு,
அயர் உறு மடந்தை அரும் துயர் தீர்த்து-
மீது செல் வெங்கதிர் வெம்மையின் தொடங்க,
'தீது இயல் கானம் செலவு அரிது' என்று
கோவலன்-தன்னொடும் கொடுங் குழை மாதொடும் 205

மாதவத்து ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து,
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை,
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது,
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் 210

கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி,
வேற்றுப் புலம் போகி, நல் வெற்றம் கொடுத்துக்
கழி பேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழி நுதல் குமரி, விண்ணோர் பாவை,
மை அறு சிறப்பின் வான நாடி, 215

ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு-என்.

12. வேட்டுவ வரி
(கொச்சகக்கலி)

கடுங் கதிர் திருகலின், நடுங்க அஞர் எய்தி,
ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து-ஆங்கு,
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர். உப்பால்- 5

வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்
பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி
தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்துக்
கை எடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப,
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் 10

நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி,
'கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன;
வல் வில் எயினர் மன்று பாழ் பட்டன;
மறக் குடித் தாயத்து வழி வளம் சுரவாது,
அறக் குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்; 15

கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்;
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டு உண் மாக்கள்! கடம் தரும்' என-ஆங்கு-
இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது 20

சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-
சிறு வௌ஢ அரவின் குருளை நாண் சுற்றி
குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளை வெண் கோடு பறித்து, மற்று அது 25

முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;
மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு 30

கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;
பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்
கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,
பந்தும், கழங்கும், தந்தனர் பரசி; 35

வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், மேவிய விரையும்,
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;
ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும், 40

கோடும், குழலும், பீடு கெழு மணியும்,
கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர் பலி - பீடிகை,
கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி-
இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்தி, 45

கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை,
'இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;
ஒரு மா மணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி' எனத் தெய்வம் உற்று உரைப்ப 50

'பேதுறவு மொழிந்தனள் மூதறிவு ஆட்டி' என்று,
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி,
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப-
மதியின் வெண் தோடு சூடும் சென்னி,
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து, 55

பவள வாய்ச்சி; தவள வாள் நகைச்சி;
நஞ்சு உண்டு கறுத்த கண்டி; வெஞ் சினத்து
அரவு நாண் பூட்டி, நெடு மலை வளைத்தோள்;
துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி;
வளை உடைக் கையில் சூலம் ஏந்தி; 60

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலைஆட்டி;
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை;
இரண்டு வேறு உருவின், திரண்ட தோள் அவுணன் 65

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;
ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப்
பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை; 70

ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை;
தமர் தொழ வந்த குமரிக் கோலத்து
அமர் இளங் குமரியும் அருளினள்-
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே.

உரைப்பாட்டுமடை
(வேறு)

நாகம், நாறு நரந்தை, நிரந்தன;
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்,
சேவும் மாவும் செறிந்தன-கண்ணுதல்
பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே. 1

செம் பொன் வேங்கை சொரிந்தன; சேயிதழ்,
கொம்பர் நல் இலவங்கள், குவிந்தன;
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு-இளந்
திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே. 2

மரவம், பாதிரி, புன்னை, மணம் கமழ்,
குரவம், கோங்கம், மலர்ந்தன; கொம்பர்மேல்,
அரவ வண்டு இனம் ஆர்த்து, உடன் யாழ்செயும்-
திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே. 3

(வேறு)

கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப்
பொன் தொடி மாதர் தவம் என்னைகொல்லோ?
பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த
வில் தொழில் வேடர் குலனே குலனும்! 4

ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இப்
பை அரவு அல்குல் தவம் என்னைகொல்லோ?
பை அரவு அல்குல் பிறந்த குடிப் பிறந்த
எய் வில் எயினர் குலனே குலனும்! 5

பாய் கலைப் பாவை அணி கொண்டு நின்ற இவ்
ஆய் தொடி நல்லாள் தவம் என்னைகொல்லோ?
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடிப் பிறந்த
வேய் வில் எயினர் குலனே குலனும்! 6

ஆனைத் தோல் போர்த்து, புலியின் உரி உடுத்து,
கானத்து எருமைக் கருந் தலைமேல் நின்றாயால்-
வானோர் வணங்க, மறைமேல் மறை ஆகி,
ஞானக் கொழுந்து ஆய், நடுக்கு இன்றியே நிற்பாய்! 7

வரி வளைக் கை வாள் ஏந்தி, மா மை இடர் செற்று,
கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்-
அரி, அரன், பூமேலோன், அகமலர்மேல் மன்னும்
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய்! 8

சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி,
செங் கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால்-
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து,
மங்கை உரு ஆய், மறை ஏத்தவே நிற்பாய்! 9

(வேறு)

ஆங்குக் கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த,
துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டு ஆங்கு,
அசுரர் வாட, அமரர்க்கு ஆடிய
குமரிக் கோலத்துக் கூத்து உள்படுமே. 10

(வேறு)

ஆய் பொன் அரிச் சிலம்பும் சூடகமும் மேகலையும்
ஆர்ப்ப ஆர்ப்ப,
மாயம் செய் வாள் அவுணர் வீழ, நங்கை மரக் கால்மேல்
வாள்-அமலை ஆடும் போலும்;
மாயம் செய் வாள் அவுணர் வீழ, நங்கை மரக் கால்மேல்
வாள்-அமலை ஆடும் ஆயின்,
காயா மலர் மேனி ஏத்தி, வானோர் கை பெய் மலர்-மாரி,
காட்டும் போலும் 11

உட்கு உடைச் சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள
உற்றகாலை
வெட்சி மலர் புனைய, வெள் வாள் உழத்தியும்
வேண்டும் போலும்
வெட்சி மலர் புனைய, வெள் வாள் உழத்தியும்
வேண்டின், வேற்றூர்க்
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்துக்
காட்டும் போலும். 12

கள் விலை ஆட்டி மறுப்ப, பொறா மறவன்
கை வில் ஏந்தி,
புள்ளும் வழிப் படர, புல்லார் நிரை கருதிப்
போகும் போலும்
புள்ளும் வழிப் படர, புல்லார் நிரை கருதிப்
போகும்காலை,
கொள்ளும் கொடி எடுத்து, கொற்றவையும்
கொடுமரம் முன் செல்லும் போலும். 13

(வேறு)

இள மா எயிற்றி! இவை காண், நின் ஐயர்
தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆன் நிரைகள்;
கொல்லன், துடியன், கொளை புணர் சீர் வல்ல
நல்லி யாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன. 14

முருந்து ஏர் இள நகை! காணாய், நின் ஐயர்
கரந்தை அலறக் கவர்ந்த இள நிரைகள்;
கள் விலைஆட்டி, நல் வேய் தெரி கானவன்,
புள் வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன. 15

கய மலர் உண் கண்ணாய்! காணாய், நின் ஐயர்,
அயல் ஊர் அலற, எறிந்த நல் ஆன் நிரைகள்;
நயன் இல் மொழியின் நரை முது தாடி
எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன. 16

(வேறு)

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்;
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது
மிடறு உகு குருதி; கொள், விறல் தரு விலையே. 17

அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு
மணி உருவினை! நின் மலர் அடி தொழுதேம்;
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது,
நிணன் உகு குருதி; கொள், நிகர் அடு விலையே. 18

துடியொடு, சிறு பறை, வயிரொடு துவைசெய,
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள்;
அடு புலி அனையவர், குமரி! நின் அடி தொடு
படு கடன் இது, உகு பலி முக மடையே. 19

(வேறு)

வம்பலர் பல்கி, வழியும் வளம் பட;
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்-
சங்கரி, அந்தரி, நீலி, சடாமுடிச்
செங் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! 20

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு,
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்-
விண்ணோர் அமுது உண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சு உண்டு, இருந்து, அருள் செய்குவாய்! 21

பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, யார்க்கும்
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய்-
மருதின் நடந்து, நின் மாமன் செய் வஞ்ச
உருளும் சகடம் உதைத்து, அருள் செய்குவாய்! 22

மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியுங் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே. 23

13. புறஞ்சேரி இறுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு,
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி,
'கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்;
படிந்தில சீறடி பரல் வெங் கானத்து;
'கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா; 5

வாள் வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரை தேர் முதலையும்,
உருமும், சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா-
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு' என,
எங்கணும் போகிய இசையோ பெரிதே; 10

பகல் ஒளி-தன்னினும், பல் உயிர் ஓம்பும்
'நிலவு ஒளி விளக்கின், நீள் இடை மருங்கின்,
இரவிடைக் கழிதற்கு ஏதம் இல்' என-
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து,
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல, 15

படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு-
'பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி,
தென்னவன் குலமுதல் செல்வன் தோன்றி,
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீர் இள வன முலை சேராது ஒழியவும், 20

தாது சேர் கழுநீர்த் தண் பூம் பிணையல்
போது சேர் பூங் குழல் பொருந்தாது ஒழியவும்,
பைந் தளிர் ஆரமொடு பல் பூங் குறு முறி
செந்தளிர் மேனி சேராது ஒழியவும்
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து 25

புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு
பால் நிலா வெண் கதிர் பாவைமேல் சொரிய,
வேனில் திங்களும் வேண்டுதி' என்றே
பார்மகள் அயா உயிர்த்து, அடங்கிய பின்னர்-
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி 30

'கொடுவரி மறுகும்; குடிஞை கூப்பிடும்;
இடிதரும் உளியமும்; இனையாது ஏகு' என,
தொடி வளைச் செங் கை தோளில் காட்டி,
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி
அறவுரை கேட்டு, ஆங்கு, ஆர் இடை கழிந்து- 35

வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து,
கான வாரணம் கதிர் வரவு இயம்ப,
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறை பதிச் சேர்ந்து-
மாதவத்து ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் 40

தீது தீர் சிறப்பின் சிறைஅகத்து இருத்தி,
இடு முள் வேலி நீங்கி, ஆங்கு, ஓர்
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன்,
காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு
ஊது உலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி, 45

உள் புலம்புறுதலின், உருவம் திரிய;
கண்-புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்,
'கோவலன் பிரியக் கொடுந் துயர் எய்திய,
மா மலர் நெடுங் கண் மாதவி போன்று, இவ்
அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து, உடனே, 50

வருந்தினை போலும் நீ, மாதவி!' என்று, ஓர்
பாசிலைக் குருகின் பந்தரில் பொருந்தி,
கோசிக மாணி கூறக் கேட்டே-
'யாது நீ கூறிய உரை ஈது, இங்கு?' என-
'தீது இலன், கண்டேன்' எனச் சென்று எய்திக் 55

கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இரு நிதிக் கிழவனும் பெரு மனைக் கிழத்தியும்
அரு மணி இழந்த நாகம் போன்றதும்;
இன் உயிர் இழந்த யாக்கை என்ன,
துன்னிய சுற்றம் துயர்க் கடல் வீழ்ந்ததும்; 60

'ஏவலாளர்! யாங்கணும் சென்று,
கோவலன் தேடிக் கொணர்க' எனப் பெயர்ந்ததும்;
'பெருமகன் ஏவல் அல்லது, யாங்கணும்,
அரசே தஞ்சம்' என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல, 65

பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும்;
வசந்தமாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள், படர் நோய் உற்று,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு, ஓர்
படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்; 70

வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு,
தாழ் துயர் எய்தி, தான் சென்று இருந்ததும்;
இருந் துயர் உற்றோள், 'இணை அடி தொழுதேன்;
வரும் துயர் நீக்கு' என, மலர்க் கையின் எழுதி.
'கண் மணி அனையாற்குக் காட்டுக' என்றே, 75

மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும்;
ஈத்த ஓலை கொண்டு, இடைநெறித் திரிந்து;
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்;
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து-
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி, 80

போது அவிழ் புரி குழல் பூங் கொடி நங்கை,
மாதவி ஓலை மலர்க் கையின் நீட்ட,
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்
குறு நெறிக் கூந்தல் மண் பொறி உணர்த்திக்
காட்டியது; ஆதலின் கை விடலீயான், 85

ஏட்டுஅகம் விரித்து, ஆங்கு எய்தியது உணர்வோன்,
'அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும், குலப்பிறப்புஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது, 90

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!'
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து,
'தன் தீது இலள்' என, தளர்ச்சி நீங்கி,
'என் தீது' என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு- 95

'என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல்,
பொற்பு உடைத்தாக, பொருள் உரை பொருந்தியது;
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன்;
கோசிக மாமணி! காட்டு' எனக் கொடுத்து,
'நடுக்கம் களைந்து, அவர் நல் அகம் பொருந்திய 100

இடுக்கண் களைதற்கு ஈண்டு' எனப் போக்கி-
மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த
ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து, ஆங்கு,
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரில் பாங்குறச் சேர்ந்து, 105

செந்திறம் புரிந்த செங்கோட்டு-யாழில்,
தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து,
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி
உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி,
வரன்முறை வந்த மூ-வகைத் தானத்து, 110

பாய் கலைப் பாவை பாடல்-பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு,
பாடல்-பாணி அளைஇ, அவரொடு-
'கூடல் காவதம் கூறுமின் நீர்' என-
'காழ் அகில் சாந்தம், கமழ் பூங் குங்குமம், 115

நாவிக் குழம்பு, நலம் கொள் தேய்வை,
மான்மதச் சாந்தம், மணம் கமழ் தெய்வத்
தே மென் கொழுஞ் சேறு ஆடி; ஆங்கு,
தாது சேர் கழுநீர், சண்பகக் கோதையொடு,
மாதவி, மல்லிகை, மனை வளர் முல்லைப் 120

போது விரி தொடையல் பூ அணை பொருந்தி;
அட்டில் புகையும், அகல் அங்காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்,
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த
அம் தீம் புகையும், ஆகுதிப் புகையும், 125

பல் வேறு பூம் புகை அளைஇ; வெல் போர்
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின்
அளந்து உணர்வு-அறியா ஆர் உயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றி;
புலவர் செந் நாப் பொருந்திய நிவப்பின் 130

பொதியில் தென்றல் போலாது, ஈங்கு,
மதுரைத் தென்றல் வந்தது; காணீர்!
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர்;
தனி, நீர் கழியினும் தகைக்குநர் இல்' என-
முன் நாள் முறைமையின், இருந் தவ முதல்வியொடு 135

பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர்-பெயர்ந்து, ஆங்கு,
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும்,
பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்,
பால் கெழு சிறப்பின் பல் இயம் சிறந்த
காலை முரசக் கனை குரல் ஓதையும்; 140

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்;
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்;
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்;
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் 145

வாரிக் கொண்ட வயக் கரி முழக்கமும்;
பணை நிலைப் புரவி ஆலும் ஓதையும்;
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்;
கார்க் கடல் ஒலியிற், கலி கெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர்கொள, ஆர் அஞர் நீங்கி- 150

குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்,
மரவமும், நாகமும், திலகமும், மருதமும்,
சேடலும், செருந்தியும், செண்பக ஓங்கலும்,
பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து;
குருகும், தளவமும், கொழுங்கொடி முசுண்டையும், 155

விரி மலர் அதிரலும், வெண் கூதாளமும்,
குடசமும், வெதிரமும், கொழுங் கொடிப் பகன்றையும்,
பிடவமும், மயிலையும், பிணங்கு அரில் மணந்த
கொடுங் கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்து, சூழ்போகியஅகன்று ஏந்து அல்குல் 160

வாலுகம் குவைஇய மலர்ப் பூந் துருத்தி,
பால்புடைக் கொண்டு, பன் மலர் ஓங்கி,
எதிர் எதிர் விளங்கிய கதிர் இள வன முலை:
கரைநின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ் வாய்:
அருவி முல்லை அணி நகைஆட்டி- 165

விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங் கயல் நெடுங் கண்:
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்;
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி-
வையை என்ற பொய்யாக் குலக்கொடி- 170

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்,
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து,
கண் நிறை நெடு நீர் கரந்தனள், அடக்கி-
புனல் யாறு அன்று; இது பூம் புனல் யாறு!' என,
அன நடை மாதரும் ஐயனும் தொழுது; 175

பரி முக அம்பியும், கரி முக அம்பியும்,
அரி முக அம்பியும், அரும் துறை இயக்கும்
பெரும் துறை மருங்கில் பெயராது; ஆங்கண்,
மாதவத்துஆட்டியொடு மரப் புணை போகித்
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி- 180

'வானவர் உறையும் மதுரை வலம் கொளத்
தான் நனி பெரிதும் தகவு உடைத்து' என்று, ஆங்கு,
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி;
கரு நெடுங் குவளையும், ஆம்பலும், கமலமும்,
தையலும் கணவனும் தனித்து உறு துயரம் 185

ஐயம் இன்றி அறிந்தன போலப்,
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி,
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்கப்;
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி,
'வாரல்' என்பன போல், மறித்துக் கை காட்ட; 190

புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி,
வெள்ள நீர்ப் பண்ணையும், விரி நீர் ஏரியும்,
காய்க் குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
வேய்த் திரள் பந்தரும், விளங்கிய இருக்கை;
அறம் புரி மாந்தர் அன்றிச் சேராப் 195

புறஞ்சிறை மூதூர்; புக்கனர் புரிந்து என்.

14. ஊர் காண் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

புறஞ்சிறைப் பொழிலும், பிறங்கு நீர்ப் பண்ணையும்,
இறங்கு கதிர்க் கழனியும், புள் எழுந்து ஆர்ப்ப;
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம்
வேந்து தலை பனிப்ப, ஏந்து வாள் செழியன் 5

ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப-
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்,
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்,
கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும் 10

அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்,
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்,
வால் வெண் சங்கொடு வகை பெற்று ஓங்கிய
காலை முரசம் கனை குரல் இயம்ப.
கோவலன் சென்று, கொள்கையின் இருந்த 15

கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி,
'நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி,
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த,
அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து,
சிறுமை உற்றேன், செய் தவத்தீர்! யான் 20

தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என் நிலை உணர்த்தி, யான் வரும்காறும்,
பாதக் காப்பினள் பைந்தொடி; ஆகலின்,
ஏதம் உண்டோ , அடிகள்! ஈங்கு?' என்றலும்
கவுந்தி கூறும்: 'காதலி-தன்னொடு 25

தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய்!
'மறத்துறை நீங்குமின்; வல் வினை ஊட்டும்' என்று,
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி,
நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்,
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்; 30

தீது உடை வெவ் வினை உருத்தகாலை,
பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர்;
ஒய்யா வினைப் பயன் உண்ணும்காலை,
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்;
பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும், 35

உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்,
புரி குழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது,
ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை;
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோ ர் உறூஉம் கொள்ளாத் துன்பம் 40

கண்டனர் ஆகி, கடவுளர் வரைந்த
காமம் சார்பாக் காதலின் உழந்து, ஆங்கு,
ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே அல்லால், இறந்தோர் பலரால்;
தொன்றுபட வரூஉம் தொன்மைத்து, ஆதலின் 45

தாதை ஏவலின் மாதுடன் போகி,
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ?
வல் ஆடு ஆயத்து, மண், அரசு, இழந்து; 50

மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன்
காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்
அடவிக் கானகத்து ஆய்-இழை-தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது 55

வல் வினை அன்றோ? மடந்தை தன் பிழை எனச்
சொல்லலும் உண்டேல், சொல்லாயோ? நீ
அனையையும் அல்லை; ஆய்-இழை-தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றோ?
வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்; 60

பொருந்து உழி அறிந்து போது ஈங்கு' என்றலும்-
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில்
பெரும் கை யானை இன நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி 65

கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு,
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய் திறந்தன்ன மதில் அக வரைப்பில்-
குட காற்று எறிந்து, கொடி நுடங்கு மறுகின் 70

கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை
விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி,
பூம் புணை தழீஇ, புனல் ஆட்டு அமர்ந்து 75

தண் நறு முல்லையும், தாழ் நீர்க் குவளையும்,
கண் அவிழ் நெய்தலும், கதுப்பு உற அடைச்சி;
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல்
கொற்கை அம் பெரும் துறை முத்தொடு பூண்டு; 80

தெக்கண மலயகச் செழுஞ் சேறு ஆடி,
பொன் கொடி மூதூர்ப் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு
எல் படு பொழுதின் இள நிலா முன்றில்,
தாழ்தரு கோலம் தகை பாராட்ட,
வீழ் பூஞ் சேக்கைமேல் இனிது இருந்து-ஆங்கு 85

அரத்தப் பூம் பட்டு அரைமிசை உடீஇ,
குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி,
சிறுமலைச் சிலம்பின் செங் கூதாளமொடு
நறு மலர்க் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து,
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து, 90

செங் கொடுவேரிச் செழும் பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில்
அம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு,
மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்குக்
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட, 95

கார் அரசாளன் வாடையொடு வரூஉம்
காலம் அன்றியும்-நூலோர் சிறப்பின்,
முகில் தோய் மாடத்து; அகில் தரு விறகின்
மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து;
நறுஞ் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு 100

குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்-
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி,
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர,
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண் மழை
அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்- 105

ஆங்கு அது அன்றியும், 'ஓங்கு இரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும், துகிலும், ஆரமும், வாசமும்,
தொகு கருப்பூரமும், சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து, கோமகன் கூடல் 110

வெங் கண் நெடு வேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன்?
கோதை மாதவி கொழுங்கொடி எடுப்பக்
காவும் கானமும் கடிமலர் ஏந்தத்,
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து, 115

மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம்
இன் இளவேனில் யாண்டு உளன்கொல்?' என்று,
உருவக் கொடியோர் உடைப்பெரும் கொழுநரொடு
பருவம் எண்ணும் படர் தீர் காலை-
கன்று அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க 120

என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக்
காடு தீப் பிறப்ப, கனை எரி பொத்தி,
கோடையொடு புகுந்து, கூடல் ஆண்ட
வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர,
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்- 125

வையமும், சிவிகையும், மணிக் கால் அமளியும்,
உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும்,
சாமரைக் கவரியும், தமனிய அடைப்பையும்,
கூர் நுனை வாளும், கோமகன் கொடுப்ப;
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130

பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து;
செம் பொன் வள்ளத்து, சிலதியர் ஏந்திய
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி;
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும்
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு 135

இலவு இதழ்ச் செவ்வாய் இள முத்து அரும்ப,
புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்;
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்தன்ன. 140

செங் கயல், நெடுங் கண் செழுங் கடைப் பூசலும்;
கொலை வில் புருவத்துக் கொழுங் கடை சுருள,
திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும்;
செவ்வி பார்க்கும் செழுங் குடிச் செல்வரொடு
வையம் காவலர் மகிழ்தரு வீதியும்- 145

சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை,
வேத்தியல், பொதுவியல் என இரு திறத்து,
மாத்திரை அறிந்து, மயங்கா மரபின்
ஆடலும், வரியும், பாணியும், தூக்கும், 150

கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து,
நால் வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பு-அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்;
வாரம் பாடும் தோரிய மடந்தையும்; 155

தலைப் பாட்டுக் கூத்தியும்; இடைப் பாட்டுக் கூத்தியும்;
நால் வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு, ஆங்கு, 160

அரும் பெறல் அறிவும் பெரும்பிறிது ஆக,
தவத்தோர் ஆயினும், தகை மலர் வண்டின்
நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும்,
காம விருந்தின் மடவோர் ஆயினும்,
ஏம வைகல் இன் துயில் வதியும் 165

பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல்
எண்-எண் கலையோர் இரு பெரு வீதியும்-
வையமும், பாண்டிலும், மணித் தேர்க் கொடுஞ்சியும்,
மெய் புகு கவசமும், வீழ் மணித் தோட்டியும்,
அதள் புனை அரணமும், அரியா யோகமும், 170

வளைதரு குழியமும், வால் வெண் கவரியும்,
ஏனப் படமும், கிடுகின் படமும்,
கானப் படமும், காழ் ஊன்று கடிகையும்,
செம்பின் செய்நவும், கஞ்சத் தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும், 175

வேதினத் துப்பவும், கோடு கடை தொழிலவும்,
புகையவும், சாந்தவும், பூவின் புனைநவும்,
வகை தெரிவு-அறியா வளம் தலைமயங்கிய,
அரசு விழை திருவின் அங்காடி வீதியும்-
காகபாதமும், களங்கமும், விந்துவும், 180

ஏகையும் நீங்கி, இயல்பில் குன்றா
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்;
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசு ஆர் மேனிப் பசுங் கதிர் ஒளியவும்; 185

பதுமமும், நீலமும், விந்தமும், படிதமும்,
விதி முறை பிழையா விளங்கிய சாதியும்;
பூச உருவின் பொலம் தெளித் தனையவும்;
தீது அறு கதிர் ஒளித் தெண் மட்டு உருவவும்;
இருள் தெளித்தனையவும்; இரு வேறு உருவவும்; 190

ஒருமைத் தோற்றத்து ஐ-வேறு வனப்பின்
இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும்;
காற்றினும், மண்ணினும், கல்லினும், நீரினும்,
தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும்;
சந்திர-குருவே, அங்காரகன், என 195

வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்;
கருப்பத் துளையவும், கல்லிடை முடங்கலும்,
திருக்கு, நீங்கிய செங் கொடி வல்லியும்;
வகை தெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிப்
பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும் 200

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்,
சாம்பூ நதம் என ஓங்கிய கொள்கையின்
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து, ஆங்கு,
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்-
நூலினும், மயிரினும், நுழை நூல் பட்டினும் 205

பால் வகை தெரியாப் பல் நூறு அடுக்கத்து,
நறு மடி செறிந்த அறுவை வீதியும்-
நிறைக் கோல் துலாத்தர், பறைக் கண் பராரையர்,
அம்பண அளவையர், எங்கணும் திரிதர,
காலம் அன்றியும், கருங் கறி மூடையொடு 210

கூலம் குவித்த கூல விதியும்-
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,
அந்தியும், சதுக்கமும், ஆவண வீதியும்,
மன்றமும், கவலையும், மறுகும்-திரிந்து,
விசும்பு அகடு திருகிய வெங் கதிர் நுழையாப் 215

பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல்,
காவலன் பேர் ஊர் கண்டு, மகிழ்வு எய்தி,
கோவலன் பெயர்ந்தனன், கொடி மதில் புறத்துஎன்.

1 comment:

  1. சீரிய முயற்சி,
    மேலும் சிறப்பதாக

    தேவ்

    ReplyDelete