Tuesday, August 4, 2009

Thiruvasagam Part I

1. சிவபுராணம்

(சிவனது அநாதி முறைமையான பழமை)
திருப்பெருந்துறையில் அருளியது
(கலிவெண்பா)

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியர் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதர் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வர் தம்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனர்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்
2. கீர்த்தித் திரு அகவல்

(சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை)
தில்லையில் அருளியது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

திருச்சிற்றம்பலம்

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5

என்னுடை இருளை ஏறத் துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10

கல்லா டத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15

விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் 20

நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30

தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறா அது
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45

ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பும்
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50

தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்து இனிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55

பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60

குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடு அது தன்னில் கரந்த கள்ளமும் 65

மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி ஊரில் உகந்து இனிது அருளிப்
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவர் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75

படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
ஏகம் பத்தின் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
மருவர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95

தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105

ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதலன் ஆகிக் கழுநீர் மாலை
ஏறு உடைத்தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115

பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாராவழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120

ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள்மலை யாகவும்
எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125

அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம்மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130

ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
எய்த வந்திலாதர் எரியில் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135

நாத நாத என்று அழுது அரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப்புக்கு இனிது அருளினன் 145

ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.

திருச்சிற்றம்பலம்
3. திருஅண்டப் பகுதி

(சிவனது தூலசூக்குமத்தை வியந்தது)
தில்லையில் அருளியது
(இணைக் குறள் ஆசிரியப்பா)

திருச்சிற்றம்பலம்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10

எறியது வளியின்
கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள், காப்பவை
கரப்போன், கரப்பவை கருதாக் 15

கருத்துடைக் கடவுள், திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்
வீடுபேறாய் நின்ற விண்ணேர் பகுதி
கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன், திருத்தகு 20

மதியில் தண்மை வைத்தோன், திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன், பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன், மேதகு
காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25

மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று
எனைப் பல கோடி எனைப் பல பிறவும்
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க, முழுதோன் காண்க
தன்நேர் இல்லோன் தானே காண்க 30

ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க
கானம் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35

அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க, பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க, அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையில் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55

தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60

புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க 65

பரமா னந்தப் பழம் கட லதுவே
கருமா முகிலில் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70

வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டம் கையற ஓங்கி
இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன
ஆயிடை வானப் பேரியாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85

ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத்
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100

எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேர்அமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச் 110

சொல்பதம் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120

ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130

இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும்
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135

ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்
தாள்தனை இடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145

தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150

அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
கோல்தேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித்து ஆங்கு அன்று
அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160

ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவது அறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு 165

அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே
குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புதம் ஆன அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175

உள்ளம் கொண்டோர் உருச்செய் தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க 180

அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே.

திருச்சிற்றம்பலம்


4. போற்றித் திருஅகவல்

(சகத்தின் உற்பத்தி)
தில்லையில் அருளியது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

திருச்சிற்றம்பலம்

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில் 5

கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10

யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் 15

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறு அலர் பிழைத்தும் 20

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயர் இடைப்பிழைத்தும் 25

ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழல் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் 35

பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40

புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின 45

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும் 50

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் மதங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து 55

உலோகா யதனெனும் ஒண்திறல் பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகு அது போலத் 60

தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் 65

கசிவது பெருகிக் கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70

சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து 75

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்பச் 85

சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவர் வெல்கொடிச் சிவனே போற்றி 95

மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நர் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி 105

வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி 115

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி 125

அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானேர் நோக்கி மணாளா போற்றி 135

வான்அகத்து அமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி 145

சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி 155

குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 165

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170

களம் கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி 175

பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185

இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகே சரியாய் போற்றி 190

திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி 195

தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200

தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி 205

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210

படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 215

செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி 220

புரம்பல் எரித்த புராண போற்றி
பரம் பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சய சய போற்றி. 225

திருச்சிற்றம்பலம்
5. திருச்சதகம்

(பக்தி வைராக்கிய விசித்திரம்)
திருப்பெருந்துறையில் அருளியது

5.1. மெய் உணர்தல்

(கட்டளைக் கலித்துறை)

திருச்சிற்றம்பலம்

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7

சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9

பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வர்சுழற்கு அன்பு எனக்கு
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10

முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த்து முன்னாள்
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11

உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும்
இழிதரு காலம்எக் காலம் வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக்
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே. 12

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரிசுஆவ தியம்புகவே. 13

புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல் லாமணியே
தகவே எனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாஅமுதே
நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14

திருச்சிற்றம்பலம்

5.2. அறிவுறுத்தல்

(தரவு கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என் கடவேன்
வான் ஏயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்
இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப்
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17

ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வானே. 18

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20

பரவுவார் இமையேர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21

அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22

வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

திருச்சிற்றம்பலம்
5.3. சுட்டறுத்தல்

(எண் சீர் ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணேர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப்
பதைத்து உருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக் கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆனவாறு
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? 26

ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியர் தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே
எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே. 27

பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்று என்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசி
போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை
மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 28

வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்தான் தடுமாறி இமையேர் கூட்டம்
எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன்
வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத்
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30

தனியனேன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயர் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி
அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்
இணை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே
நாயினுக்குந் தவிசு இட்டு நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்
கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. 32

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி
ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற
செச்சை மலர் புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே. 33

தேவர்க்கோ அறியாத தேவ தேவன்
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியர் அடியாரோடும்
மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 34

திருச்சிற்றம்பலம்

5.4. ஆத்தும சுத்தி

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? 35

அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப்
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. 36

மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மதி இலிமட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெச் சிவன் அவன் திரள் தோள் மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. 37

கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர்த் திருப் பாதம்
முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன்
அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. 38

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு
அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்
கசிந்து உணர்ந்து இருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன்
செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை
பரகதி புகுவானே. 39

புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்
குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை ஆண்டவன் சுழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 40

வினையென் போலுடை யார்பிறர் ஆர்உடை யான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்றுமற் றதனாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி இன்னதென் றறியேனே. 41

ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனைஎன் சிவலோகக்
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான்இருந் தோம்புகின் றேன்கெடு வேன்உயிர் ஓயாதே. 42

ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 43

வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன் சிவன்நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 44

திருச்சிற்றம்பலம்
5.5. கைம்மாறு கொடுத்தல்

(கலிவிருத்தம்)

திருச்சிற்றம்பலம்

இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
கருவை யான்கண்டி லேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 45

உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டும் கண்டிலேன் என்னகண் மாயமே. 46

மேலை வானவ ரும்மறி யாததேர்
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோம்
கால மேஉனை என்றுகொல் காண்பதே. 47

காண லாம்பர மேகட்கு இறந்ததேர்
வாணி லாப் பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாற்றி யேன் புலன் போற்றியே. 48

போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று
ஆற்றல் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறும்
கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே. 49

கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளும் கீழளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 50

எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான்
முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 51

செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 52

கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீறு
இட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண் டும் அறி யேனையே. 53

அறிவ னேஅமு தேஅடி நாயினேன்
அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே. 54

திருச்சிற்றம்பலம்

5. 6. அநுபோக சுத்தி

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

ஈசனேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே. 55

செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்கு இருப்ப தானேன் போரேறே. 56

போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியர் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனா கொடியான் உயிர்தான் உலவாதே. 57

உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங்கு உனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே. 58

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டுஇதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே. 59

உடையா னேநின்றனைஉள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங்கு ஊர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டுஇதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே. 60

முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் அடியாரைப்
பிடித்த வாறும் சோராமற் சோர னேன்இங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே. 61

தேனைப் பாலைக் கன்னலின் தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீஎன்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாம்என் தன்மையே. 62

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ
என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே. 63

புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியார் உள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண நீஆண்டருள் அடியேனும்
தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. 64

திருச்சிற்றம்பலம்

5.7. காருணியத்து இரங்கல்

(அறுசர்ர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. 65

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 66

போற்றிஎன் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றுஇய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே. 67

கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. 68

சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி
இங்குஇவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. 69

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட்டு எம்பி ரானே. 70

எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. 71

ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருவஎன் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. 72

தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும்என் பொய்ம்மை யாட்கொண்டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. 73

போற்றியிப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய்
போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய்
போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. 74

5.8. ஆனந்தத்து அழுந்தல்

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம்
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே
புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. 75

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும்
ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே
ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே. 76

ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. 77

வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே. 78

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால்
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80

எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈதலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83

இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84

திருச்சிற்றம்பலம்


9. ஆனந்த பரவரசம்

(கலிநிலைத்துறை)

திருச்சிற்றம்பலம்

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனர் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே. 85

பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று
ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. 86

அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ
அடியர் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. 87

காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும்
பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன்
ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. 88

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே. 90

தாராய் உடையாய் அடியேற்கு உன்தாள் இணை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91

அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92

பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால்
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94

திருச்சிற்றம்பலம்

5.10. ஆனந்தாதீதம்

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

மாறு இலாத மாக் கருணை வெள்ளமே
வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை
வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து
ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன்
கடையன் ஆயினன் பட்ட கீழ்மையே. 95

மை இலங்கு நல் கண்ணி பங்கனே
வந்து எனைப் பணிகொண்ட பின்மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்
அரியை என்று உனைக் கருது கின்றிலேன்
மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ
போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே. 96

பொருத்தம் இன்மையேன் பொய்மை உண்மையேன்
போதஎன்றுஎனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
மாண்டிலேன் மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும்
நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான்
வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே. 97

இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே
ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே
கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு
என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்
ஏதுகொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறு இல் வானனே. 98

வான நாடரும் அறி ஒணாத நீ
மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத்து உடைய விச்சையே. 99

விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனை உன்கோயில் வாயிலிற்
பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு
உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்
நச்சு மாமரம் ஆயினும் கொலார்
நானும் அங்கனே உடைய நாதனே. 100

உடைய நாதனே போற்றி நின் அலால்
பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனே பணி போற்றி உம்பரர்
தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்
கருணையாளனே போற்றி என்னை நின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்
அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே. 101

அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே
அகம்நெக அள் ஊறு தேன்
ஒப்பனே உனக்கு அரிய அன்பரில்
உரியனாய் உனைப் பருக நின்றது ஓர்
துப்பனே சுடர் முடியனே துணை
யாளனே தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே எனை வைப்பதோ சொலாய்
நைய வையகத்து எங்கள் மன்னனே. 102

மன்ன எம்பிரான் வருக என் எனை
மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை
முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என் எனைப்
பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனைப்
பாவ நாச நின் சீர்கள் பாடவே. 103

பாடவேண்டும் நான் போற்றி நின்னையே
பாடிநைந்துநைந்துருகி நெக்குநெக்கு
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்
தாடுநின்கழற்போது நாயினேன்
கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும் நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. 104

திருச்சிற்றம்பலம்

6. நீத்தல் விண்ணப்பம்

(பிரபஞ்ச வைராக்கியம்)
திருஉத்தரகோசமங்கையில் அருளியது
(கட்டளைக் கலித்துறை)

திருச்சிற்றம்பலம்

கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105

கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய்நின் விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107

வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108

செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின் மொழியாரில் பன்னாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே
வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110

பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111

தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112

இருதலைக்கொள்ளியின் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. 113

பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி
ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே
கடும் தகையேன் உண்ணும் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே. 116

கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117

வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118

களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள
வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே
எளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே. 120

பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வர்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்
அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122

மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும்
விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர்
ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. 123

கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124

ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125

ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. 126

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127

உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128

எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129

பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. 130

கொழுமணிஏர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து
அழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேஇன்னுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131

புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்து இங்குஓர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய்
கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே
துலங்குகின்றேன் அடி யேன் உடையாய்என் தொழுகுலமே. 132

குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம்
விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை
அலங்கல் அந் தாமரை மேனிஅப் பாஒப்பி லாதவனே
மலங்கள் ஐந் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133

மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி
வித்துறு வேனை விடுதிகண்டாய் வெண்டலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித்
தத்தறு நீறுடன் ஆரச் செஞ்சாந்தணி சச்சையனே. 134

சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம்
விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடந்தாள அடற்கரியே. 135

அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால்
தொடற்கரியாய் சுடர் மாமணியே சுடு தீச்சுழலக்
கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136

கண்டது செய்து கருணை மட்டுப்பரு கிக்களித்து
மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள்
பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்து என்னைக்
கொண்டென் எந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137

குதுகுதுப்பின்றி நின்று என்குறிப்பேசெய்து நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து
எதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே. 138

பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவி ஐவாயரவம்
பொரும்பெருமான் வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139

பொதும்புறு தீப்போல் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140

அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் நகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந்து அடர்வனவே. 141

அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ்
சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாய் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142

தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய
மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக்கு எய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143

வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு
மிலைத்து அலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக்
கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும்
மலைத்தலை வாமலை யாள்மணவாள என் வாழ்முதலே. 144

முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி
விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக்கு ஊன்மிடைந்த
சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145

கதியடி யேற்குன் கழல்தந்தருளவும் ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற்
பதியுடை வாள்அரப் பர்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. 146

மன்னவனே ஒன்று மாறுஅறியாச்சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல்
சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147

முழுதுஅயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள்
தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய்வேனை விடேல்உடையாய் உன்னைப் பாடுவனே. 148

பாடிற்றிலேன் பணியேன் மணிநீஒளித் தாய்க்குப்பச்சூன்
வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியந் தாங்கலறித்
தேடிற்றிலேன் சிவன் எவ்விடத்தான்எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென்று அறைவன் பழிப்பினையே. 150

பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம்
கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151

தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழல்அரப்பூண்
வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடில்என்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தரகோச மங்கைக்கரசின்
சீரடி யாரடி யான்என்று நின்னைச் சிரிப்பிப்பனே. 152

சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று
விரப்பிப்பன் என்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சு ஊண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன் என்றேசுவனே. 153

ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என்பிழைக்கே குழைந்து
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக்
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே. 154

திருச்சிற்றம்பலம்

7. திருவெம்பாவை

(சத்தியை வியந்தது)
திருவண்ணாமலையில் அருளியது
(வெண்டளையான் வந்த இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்துஎன்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 160

அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161

கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய். 163

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தரன் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். 164

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மையர் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந் தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170

செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்குஎழில்என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment